தனிப்பெரும் துணையே – 21
தனிப்பெரும் துணையே – 21
அதிகாலை காஞ்சிபுரம் பிரதான பகுதியில் இருந்த அந்த சின்ன நெரிசலான குடியிருப்பில், ஒரு வீடு, பரபரப்பாக இருந்தது.
“மதி… எவ்ளோ நேரம். சீக்கிரம் கிளம்புங்க. பாரு விச்சு வீட்ல எல்லாரும் வந்துட்டாங்க” என மனைவி மதுமதிக்கு குரல் கொடுத்தார் ஸ்வாமிநாதன். தம்பி விஷ்வநாதன் அவர் மனைவி மங்களம் மற்றும் மகன் விவேக் வந்திருந்தனர்.
மதுமதி அழகான காட்டன் புடவையில் கிளம்பி பத்து வயது மகள் கவிதாயினியையும் ஆறு வயது நெருங்கும் மகன் இளஞ்செழியனையும் கிளப்பி அழைத்துவந்தார்.
ஸ்வாமிநாதன் மற்றும் மதுமதி இருவரும் வேலை பார்ப்பவர்கள். மதுமதியின் பள்ளியில் கவிதாவும் செழியனும் படித்தனர்.
மிகவும் நடுத்தரக் குடும்பம். மாத வருமானம் அடிப்படை தேவைக்கு செலவழித்த பின், மாத இறுதி நெருங்கும்போது திண்டாட்டம் தான் எப்போதும்.
ஆனால் பிள்ளைகளுக்கு தேவையானது எப்போதும் கிடைக்கும் வகையில் தங்கள் தேவைகளை குறைத்துக்கொள்வார்கள்.
மதுமதி மங்களமும் வேற்று தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும், ஸ்வாமிநாதன், மற்றும் விஸ்வநாதனுடன் ஆனா திருமணத்திற்குப்பின், சகோதரிகள் போல ஒற்றுமையாக இருந்தனர்.
இப்போது இரு குடும்பமும் தயாராகி கோவிலுக்கு புறப்பட…
“அக்கா இப்போ வயிறு வலி பரவால்லயா” மங்களம் கேட்க, “பரவால்லக்கா. வெந்தயத்தண்ணி குடிக்கறேன். அப்பப்போ வருது போகுது. சிலசமயம் அதுனாலயே வெறுப்பா இருக்கு” என்றார் மதி.
“ஹாஸ்பிடல் போலாம்ல” கனிவுடன் மங்களம் கேட்டார்.
“எங்க நமக்கு வர்றது தேவைக்கே சரியா இருக்கு. இந்த மாசம் இளா பர்த்டே வருதே. கேக், ஸ்னாக்ஸ்’லாம் வாங்கணும். ரொம்ப ஆசையா இருக்கான் அவனோட ஃபிரண்ட்ஸ் கூப்பிடணும்னு சொல்லி. பாப்போம் அடுத்த மாசம் போக முடியுதான்னு” என்றார் மதி.
மங்களம் மகன் விவேக், கவிதாவுடனும் செழியனுடனும் ஒட்டாமல் தனியாக இருந்தான். ஒருவழியாக தரிசனம் முடிந்து, அவரவர் வீடு திரும்பினர்.
அன்றைய இரவு… “அம்மா, இந்தா கரெக்ட்’டா எழுதிருக்கேனான்னு பாரு” என ஒரு டைரியை நீட்டினான் செழியன்.
செழியனுக்கு மொழியும், எழுதவும், படிக்கவும் நன்றாக வரவேண்டும் என, மதி அவனை தினமும் இதுபோல தெரிந்தவற்றை எழுதச்சொல்வார். அவனும் அன்று நடந்ததை தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் கலவையுடன் எழுதுவான்.
இந்த வயதில் அவனின் எழுதும் திறன், எதையும் சீக்கிரம் புரிந்துகொள்ளும் திறன் (grasping power), மொழியை சுலபமாக கற்றுகொள்ளுதல், மற்றும் அவனின் கையெழுத்து அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும்.
“சூப்பர் டா கண்ணா. சின்ன சின்ன மிஸ்டேக்ஸ். அவ்ளோ தான்” என்றவர் தவறு எங்குள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். “நெக்ஸ்டைம் இதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோ” என மகனை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.
நால்வரும் படுக்கையில் படுத்த பின், “கவி… இனி மங்களம் சித்தி வீட்டுக்கு போனா இளாவையும் கூட்டிட்டுப்போணும் தனியா போகக்கூடாது சரியா. இளா நீ அக்காவை விட்டுட்டு எங்கயும் போகக்கூடாது. அக்காவை தனியா விடாத” என்றார் மதி.
ஸ்வாமி புரியாமல் எதற்கு என்பதுபோல பார்க்க… “மாமா வீட்டுக்கு போறதுக்கு இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க” என்றவுடன் “நீ சொன்னா அதுல கண்டிப்பா ஏதாச்சும் இருக்கும். என்னன்னு சொல்லுமா” என்றார் ஸ்வாமி.
“நம்ம மங்களம் அக்கா சொந்தக்கார பையன் வேலு என் ஸ்கூல்ல படிக்கறான்ல. அவன் நடவடிக்கை சரியில்லைங்க. ஸ்கூல்ல ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிட்டான். நான் பார்த்து ப்ரின்சிபல்ட்ட சொன்னேன் அவங்களும் அவனோட அம்மா அப்பாட்ட பேசி வார்ன் பண்ணி அனுப்பினாங்க.
விஷயத்தை இன்னும் விசாரிச்சப்ப தான் தெரிஞ்சது அவன் இதுபோல இன்னும் சில பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துருக்கான்னு. நேத்து ஸ்கூல்ல TC கொடுத்துட்டாங்க. இன்னைக்கு அக்கா கேட்பாங்கன்னு நெனச்சேன். ஆனா கேட்கல. அவங்களுக்கே தெரியாது போல. நானா சொல்லவேணாம்னு விட்டுட்டேன். அந்த வேலு அவங்க வீட்டுல தான் பாதி நேரம் இருக்கான். நம்ம பொண்ண பத்திரமா பாத்துக்கணும் இல்லையா” என்றார் மதி.
ஸ்வாமியும் ஆமோதித்தார்.
அடுத்தநாள் காலை பள்ளி கிளம்பும்போது, மதி கையில் கைக்கடிகாரம் அணிய, அதன் ஸ்ட்ராப் இரண்டாக கிழிந்தது. “ஏங்க இன்னைக்கு ஈவினிங் வர்றப்ப, இதை சரி பண்ணிட்டுவாங்க” என அவரிடம் தந்தார்.
அதற்கு ஸ்வாமி… “சீக்கிரம் உனக்கு புதுசு வாங்கணும்மா. இது ரொம்ப நெஞ்சு போச்சு” என்றார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த செழியன் அவன் அம்மாவிடம் பள்ளிக்கு செல்லும்போது, “நான் பெரிய பையன் ஆகி, உனக்கு சூப்பர் வாட்ச் வாங்கித்தரேன்மா” என்றான் ஆசையாக.
அவனை அப்படியே கட்டித்தழுவிக்கொண்டார் மதி.
இப்படியாக நாட்கள் செல்ல, திடீரென ஒரு நாள் காலை, மதிக்கு வயிற்று வலி கொஞ்சம் அதிகமாக, பள்ளிக்கு அனைவரும் கிளம்பும்போது…
ஸ்வாமி, “நான் லீவு போட்டுட்டு வரேன்மா. ஹாஸ்பிடல் போலாம்” என்க, அதற்கு மதி, “பரவால்லைங்க. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன். இதுக்கெதுக்கு லீவ் போட்டுட்டு… லாஸ் ஆஃப் பே ஆயிடும்” என்றார்.
அதேபோல அன்று மருத்துவனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார் மதி.
வரும் வழியில் பேக்கரி’யில் மகனின் பிறந்தநாளை சொல்லி முந்தைய தினம் இரவு தரும்படி சொல்லிவிட்டு வந்தார்.
அன்றைய இரவு… “மதி. நீ ஒன்னுமில்லன்னு சொல்ற. எனக்கு பயமா இருக்குமா. அடிக்கடி வலின்னு சொல்லிட்டு இருக்க” ஸ்வாமி மதியிடம் பேசினார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. பயப்படவேணாம்னு தான் டாக்டர் சொன்னாரு. நீங்க கவலைப்படாதீங்க” என்றவர், இளாவையும், கவியும், மடியில் படுக்க வைத்து, தலை கோதியவாறே…
“பசங்கள நல்லா படிக்க வைக்கணும்ங்க. அவங்க நல்ல வேலைக்கு போகணும். நம்மள போல அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப் படக்கூடாது. நம்ம எப்பவும் பாப்போமே… கோவில் பக்கத்துல அந்த பழைய தனி வீடு. அதை வாங்கணும். பசங்க சந்தோஷமா அங்க இருக்கணும்” என்றார் ஸ்வாமியிடம்.
இதுபோல பல முறை கூறியுள்ளார். இது அவரின் கனவு. இன்றும் அதையே சொன்னார் மதி.
அடுத்த சில நாட்கள் மெதுவாக செல்ல, அன்று பள்ளி விடுமுறை. கவிதாவையும், செழியனையும் கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்துச்சென்றவர், அங்கிருந்த மண்டபத்தில் இருவருடனும் உட்கார்ந்தார்.
கவிதா மதியின் மேல் சாய்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
அப்போது மதி கவிதாவிடம்… “கவி… நீ நல்லா படிக்கணும். படிச்சு நல்ல வேலைக்கு போய் அம்மா அப்பா பேர காப்பாத்தணும். தைரியமா இருக்கணும். எதுக்கும் சோர்ந்துபோய்ட கூடாது. அப்பா சொல்றத கேக்கணும். எதிர்த்து பேசக்கூடாது. தம்பிய நல்லா பாத்துக்கோ. அவன் சின்ன பையன்” என்றதும், அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் “சரிம்மா” என்றுவிட்டு, விளையாட்டிலேயே குறியாக இருந்தாள்.
“இளா. இங்க பாரு நீ எப்பவும் அக்கா கூடவே இருக்கணும். அவளை பத்திரமா பாத்துக்கோ. அப்பா இல்லாதப்ப நீ தான் அவளோட துணையா இருக்கணும்” என்றதும், “ஏம்மா என்ன ஆச்சு?” என்றான் பொறுப்பாக.
இந்த வயதில் அவனின் அறிவை நினைத்து, அவன் உச்சி நுகர்ந்து, “சும்மா தான் டா கண்ணா. நீயும் நிறைய படிச்சு, பெரிய வேலைக்கு போகணும். அதுதான் டா அம்மாவோட ஆசை” அவர் சொன்னதும் தலையை ஆட்டினான் செழியன்.
இன்னும் இரண்டு நாளில் செழியனின் பிறந்தநாள். கோவிலுக்கு போய்விட்டு, வீடு திரும்பினர் முவரும்.
அன்றைய இரவு நேரம், மதிக்கு திடீரென வயிற்று வலியுடன் நெஞ்சு வலி அதிகமாக, உறங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை தம்பியின் மனைவி மங்களத்திடம் விட்டுவிட்டு அவசரமாக மதியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் ஸ்வாமி.
அடுத்தநாள் கவிதாவும் செழியனும் அம்மாவை காணவில்லை என்றதும், அவருக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என சொல்லி பள்ளிக்கு அனுப்பிவைத்தார் மங்களம்.
அன்றைய மாலை பொழுது, இருவரும் பள்ளி முடிந்து வீடு வந்துசேர, அடுத்த நாள் செழியன் பிறந்த நாளிற்கு மதி ஆர்டர் செய்திருந்த கேக் இரவு எட்டும் போது வந்தது.
அதைப்பார்த்து சந்தோஷத்தின் மிகுதியில் செழியன். அடிக்கடி அதை சென்று பார்த்துவிட்டு வந்தான்.
மங்களம் அழுதுகொண்டே வீடு வந்து சேர்ந்தார் அவர்களின் துணைக்கு. ஏன் அழுகிறார் என தெரியாமல், செழியனும், கவிதாவும் இருக்க, அவர்களை கட்டிக்கொண்டு “இப்படியா நடக்கணும்…” என அழுதார்.
கொஞ்ச நேரம் கழித்து, வாசலில் வந்து நின்றது ஆம்புலன்ஸ். அதில் மதி உயிர் பிரிந்த உடலாக.
ஸ்வாமிநாதன் சொல்லமுடியாத இறுக்கத்துடன் மனைவியின் உயிரற்ற தேகத்தை பார்த்திருக்க, வீட்டின் நடுவில் சடலமாக வைக்கப்பட்டார் மதி.
தாயை அந்த நிலையில் பார்த்த கவிதா பயத்துடன் மங்களம் பின்னால் சென்று ஒளிந்துகொண்டாள்.
செழியன் என்ன என்று புரியாமல், தாயின் அருகில் சென்று… “அம்மா இப்பொபோய் தூங்கறயே. எழுந்திரி மா. நம்ம இன்னும் சாப்பிடல. அங்க பாரு என்ன வந்துருக்குனு. எந்திரி மா” என கேக்கை காட்டி சொல்லி, தாயை உலுக்கினான்.
இதுவரை இறுக்கத்துடன் இருந்த ஸ்வாமி, வெடித்து அழுதார். கவிதா பேயடித்தாற்போல மூலையில் சென்று உட்கார்ந்துகொண்டாள்.
அப்பாவிடம் சென்ற செழியன்… “ஏன் பா அழறீங்க? அம்மாவை எழுந்திரிக்க சொல்லுங்க” என்றான். அவர் அவனை கட்டிக்கொண்டு… “நம்மளையெல்லாம் விட்டுட்டு போய்ட்டா. மதி போய்ட்டா டா” என சத்தமாக அழுதார்.
“பா அம்மா இங்க தானே இருக்காங்க. நீங்க போய்ட்டாங்கன்னு சொல்றீங்க. போங்கப்பா” அவன் கோபித்துக்கொண்டு மறுபடியும் தாயை எழுப்பினான்.
விடாமல் அழுதுகொண்டிருந்த மங்களம் செழியனை மதியிடம் இருந்து பிரிக்க நினைக்க, அவன் வரவே இல்லை.
கொஞ்ச நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக வர…
“என் பர்த்டே’க்கு யார் யாரோ வராங்கமா. என் ஃபிரண்ட்ஸ் மட்டும் வரவே இல்ல. நீ இந்த நேரம் தூங்கிட்டு இருக்க. வா கேக் அரேன்ஞ் பண்ணலாம். அக்கா இங்க பாருக்கா. அம்மாவை எழுந்திரிக்க சொல்லுக்கா. சித்தி நீங்க சொல்லுங்க சித்தி” என ஒவ்வொருவரையும் செழியன் உதவி கேட்க, வந்திருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.
செழியன் தாயை எழுப்பி எழுப்பி சோர்ந்துபோய்… டைரியை எடுத்துக்கொண்டு வந்து தாயின் பக்கத்தில் உட்கார்ந்து தாயை பார்த்து முறைத்தவாறே எழுத ஆரம்பித்தான்!
