Thaniperum thunaiye -15
தனிப்பெரும் துணையே – 15
ப்ரியா வெளிவந்தவுடன், அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து செழியன் புன்னகைத்துக்கொண்டே வர, “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ் ஆகும்ல. கிடைக்கலனா அடுத்த ஆப்ஷன்… என்னன்னு பார்க்கணும்” என்றாள் அவனை பார்த்து அவன் முகமாற்றங்களை உணர.
இதுவரை இருந்த புன்னகை கொஞ்சம் மறைந்தாலும், “பி பாசிட்டிவ். கண்டிப்பா கிடைக்கும். வேற ஆப்ஷன் என்ன யோசிச்சிருக்க” ஒரு சின்ன தடுமாற்றம் தெரிந்ததோ அவனிடத்தில்?
“புனே. இல்லைனா, கான்பூர் இல்ல” என அவள் அடுக்கிக்கொண்டே போக… “ரொம்ப யோகிக்க வேணாம். மொதல்ல இந்த ரிசல்ட் பாப்போம்” என்றுவிட்டு அவன் முன்னே நடக்க… ப்ரியா மனதில் மிகுந்த சந்தோஷத்துடன் அவனுடன் நடந்தாள்.
அவனே யோசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு… “நான் உன்ன இங்க வேற ஏதாச்சும் ஆப்ஷன் வெச்சுருக்கையானு கேட்டேன். வேறாதாச்சும் அப்ளை பண்ணிருக்கயா?” கேள்வியுடன் அவளை பார்க்க…
இல்லை என்பது போல உதடுகளை பிதுக்கினாள் ஆனால் உள்ளுக்குள் அவன் பேசுவதை ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் தான் இது இல்லையேல் வேறொன்று, அதுவும் இல்லையேல் மற்றொன்று என பல மாற்று பிரிவுகளை யோசித்து வைத்திருந்தாளே.
“வேற அப்ளை பண்ணா என்னவாம்? ஒன்னே ஒன்னு தான் பண்ணுவியா” கொஞ்சம் ஏமாற்றத்துடன் கேட்டுக்கொண்டே நடக்க… “எனக்கு இது தான் பிடிச்ச கோர்ஸ்” என்றாள்.
உடனே, “ஓ அப்போ ஒகே. COAP’ல அப்ளை பண்ணியாச்சில்ல? சான்செஸ் இருக்கு. வர்ற எல்லாரும் இங்கயே சேர மாட்டாங்க. அதுபோல ஏதாச்சும் ஃபிரீ ஆக வாய்ப்பிருக்கு” என்றான் அவள் முகம் பாராமல்.
அவன் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரியா…. அப்படியே அவன் கையை பிடித்துக்கொண்டு ‘டேய் உன்கூட தான் இங்க படிக்க போறேன் மடையா’ என சொல்லவேண்டும் என்பதுபோல இருந்தது. ஆனாலும் அவனின் மனதை அறியவும் ஆவல் தோன்றியது.
“சரி எத்தனை மணிக்கு ரிட்டர்ன் ஃபிலைட்?” என்றதும் இப்போது அவள் முகம் வாடியது. ‘ஐயோ மறுபடியும் பிரிவா’ என்று. அவள் பதில் சொல்லாமல் இருப்பதை பார்த்து அவள் பக்கம் திரும்பி கேட்க… “எட்டு மணிக்கு” என்றாள்.
“இப்போ கிளம்பினா கரெக்ட்’டா இருக்கும். அங்க போய் டீ, காபி குடிச்சிக்கலாம்” என்றவன் டாக்ஸி புக் செய்தான், அடுத்த ஒருமணிநேரம்… ஏர்போர்ட் வந்தடைந்தனர். இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
அவன் எந்த நினைப்பில் இருந்தானோ, ப்ரியாவின் மனதில் சந்தோஷமே நிரம்பி வழிந்தது. வீட்டில் அனைவருக்கும் சொல்லிவிட்டாள் தேர்வு முடிந்தது என.
அனைத்தும் முடித்துவிட்டு அவள் உள்ளே செல்ல நினைக்கும்போது… “இளா” என்றழைத்தவுடன், அவன் ‘என்ன’ என்பதுபோல பார்த்தான்.
ப்ரியா முகத்தில் புன்னகையுடன்… “நீ சொன்னமாதிரி இங்க சாப்பாடு எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல. ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்கும்னு தெரியல. சோ சீக்கிரம் கொஞ்சமாவது சமைக்க கத்துக்கோ. நான் வரேன். சென்னை போயிட்டு மெசேஜ் பண்றேன்” என்றதும், அவன் எப்போதும் போல மண்டையை ஆட்டினான்.
“மரமண்ட. ஒன்னும் புரியாது” என முணுமுணுத்துக்கொண்டே அவள் நடக்க… திரும்பி அவனை பார்த்தாள்.
அவன் இப்போது தான் யோசித்துக்கொண்டிருந்தான். அவளுக்கு சிரிப்பு சற்றும் குறையாமல் இருக்க… மொபைல் அடித்தது. அவன் தான் அழைத்தான். புரிந்துகொண்டான் என புரிந்தது. ப்ரியா எடுக்கவில்லை.
பதிலுக்கு… “நான் சென்னை போயிட்டு பேசறேன்” என்று மெசேஜ் அனுப்பினாள். பதிலுக்கு அவனிடமிருந்து, “சி யு ஸூன்” என்ற மெசேஜ் வந்தது!
என்னதான் அவர்கள் மறைமுகமாக தேர்வாகிவிட்டதாக சொன்னாலும் ரிசல்ட்’டை கண்களால் பார்ப்பதற்கு காத்திருந்தாள்.
முடிவும் வந்துவிட்டது. தேர்வாகிவிட்டாள். வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. லட்சுமிக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். இருப்பினும் மற்ற அனைவரும் அவரை சமாதானப்படுத்தினர்.
ப்ரியா அலுவலகத்தில் முன்னமே ரெசிக்னேஷன் கொடுத்துவிட்டிருந்தாள். ரிஷிக்கு மட்டும் தெரியும் செழியனும் அங்கே படிக்கிறான் என. ப்ரியாவை அவனுக்கு பிடிக்கும் இப்போது இன்னமும் பிடித்தது.
காதலுக்காக அவள் எடுத்த முயற்சிகள். இப்படி ஒரு பெண்ணா என்ற ஒரு பிரம்மிப்பு. இப்படி ஒரு பெண்ணை மிஸ் செய்துவிட்டோம் என்ற சின்ன வருத்தம். இருப்பினும் அவளுக்காக சந்தோஷப்பட்டான்.
அடுத்த ஒரு மாதத்தில், சேர்வதற்கான ஒப்புதல், அட்மிஷன் என நாட்கள் விரைவாக நகர்ந்தது.
செழியனும் அவளும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், ப்ரியா… தினமும் அவனுடன் கழிக்கப்போகும் நாட்களை நினைத்து ஆவலாக காத்திருந்தாள்.
கல்லூரியில் சேர்வதற்கான நாளும் வந்தது. அகிலன் ப்ரியாவுடன் வந்திருந்தான் அவளை விடுவதற்கு. ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டாள்.
செழியனுக்குத் தெரியும் அவள் வந்துவிட்டாள் என்று. ஆனால் அகிலன் உடனிருப்பதால், பார்ப்பதை தவிர்த்துவிட்டார்கள்.
இருப்பினும் அகிலன் செழியனை அழைத்துப் பேசினான் மும்பை வந்தவுடன். சாதாரணமான பரஸ்பர உரையாடல்… அவ்வளவே. ப்ரியா மறுத்தும் செலவிற்கு என பணம் தந்துவிட்டு, தேவையான அனைத்தையும் செய்துவிட்டு கிளம்பினான் அகிலன்.
அடுத்தநாளும் விடிந்தது… முதல் நாள் புதுக்கல்லூரியில். அதையும் தாண்டி செழியனை பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு. இனி பிரிவு என்பதே இல்லை என்கிற சந்தோஷம். அதனுடன் சேர்ந்து கொஞ்சம் வெட்கம் என பல வித உணர்வுகளுடன் தயாரானாள்.
‘கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன்’ என்ற ஒரு மெசேஜை அவனுக்கு அனுப்பிவிட்டு தயாராகி வெளியே வந்தாள்… அவளுடன் அவளுடைய புது தோழிகள். ஆம் அதற்குள் ஒரு சிறிய பட்டாளம் தயார் செய்துவிட்டாள்.
வெளியே அவள் வந்தவுடன், கொஞ்சம் தொலைவில், ஒரு தூண் போல இருந்த சுவற்றில் சாய்ந்தவாறு மொபைல் பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்.
மறுபடியும் இதயம் தடதடக்க ஆரம்பித்தது அவளுக்கு. அவள் உடன் இருப்பவர்கள் பேசிக்கொண்டே வந்தாலும், ப்ரியா தலையை மட்டும் ஆட்டியபடி செழியனையே பார்த்துக்கொண்டு நடந்தாள்.
‘முன்னமே வந்துட்டானோ? நம்மள பார்க்கத்தானோ? என்ன பேசறது? ஐயோ… இதென்ன டீன் ஏஜ்ல வர்ற ஃபீலிங்ஸ்’லாம் வருதே. ஆண்டவா’ என நினைக்கும்போதே செழியன் எதேச்சையாக திரும்ப… ப்ரியாவை பார்த்துவிட்டான்.
அவளை பார்த்து அவன் புன்னகைத்ததும்… ப்ரியாவுக்கு ஏதேதோ உணர்வுகள் மனதில். உடன் இருப்பவர்களை போக சொல்லிவிட்டு, செழியன் அருகில் வந்தாள்.
அவன் இன்னமும் புன்னகைத்தான். ஆனால் ப்ரியா ‘பே’ என என்னபேசுவது என்று தெரியாமல் பார்த்தாள்.
“ஹாஸ்டல் எல்லாம் செட் ஆயிடுச்சா? சாப்டயா?” என முதலில் இப்போது அவன் பேசினான்.
“ஹ்ம்ம்” என்றாள். ‘ஐயோ பேசு ப்ரியா. இதெல்லாம் உனக்கு ஒத்துவராது’ மைண்ட் வாய்ஸ் ஒரு பக்கம் ஓட, “என்னாச்சு? எல்லாம் ஒகே தானே? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவள் பேசாமல் இருப்பதை பார்த்து யோசனையுடன் கேட்டான்.
“அங்… அதெல்லாம் ஒன்னுமில்ல. ஃபிரஸ்ட் டே அதான் கொஞ்சம் நெர்வஸ்’ஸா இருக்கு” என்றாள். அவன் ஒருமாதிரி அவளை பார்த்தான்… ‘உனக்கு நெர்வஸ்’ஸா’ என்பதுபோல.
“சரி போலாம். இண்டக்ஷன் தானே இன்னைக்கி” என்றவன் நடக்க ஆரம்பிக்க… “ஹ்ம்ம்” மட்டுமே பதில் அவளிடம்.
“ஏதாச்சும்ன்னா கால் பண்ணு. என் டிபார்ட்மென்ட் பக்கத்துல தான் இருக்கு. ஒகே?” என அவளை பார்க்க… “ஒகே லஞ்ச்ல மீட் பண்ணலாம்” என்றாள். அவனும் புன்னகைத்து… அவள் உள்ளே செல்லும்வரை பொறுத்திருந்துவிட்டு சென்றான்.
‘நம்ம தான் அவன்கூட படிக்கணும்னு வந்தோம்… இதென்ன அவனை பார்த்ததும் மொக்கையா நடந்துக்கற ப்ரியா. மதியம் ஒழுங்கா பேசணும்’ தனக்கே புத்திமதி கூறிக்கொண்டு ட்ரைனிங்கில் கவனம் செலுத்தினாள்.
மதியம் ஆனவுடன், அவளுடைய தோழிகள் ஹாஸ்டலுக்கு அழைக்க, அதை மறுத்துவிட்டு, செழியனை அழைத்தாள். ‘ஒழுங்கா பேசு ஒழுங்கா பேசு’ என மறுபடியும் மூளை அறிவுறுத்தியது.
அடுத்த பத்து நிமிடம் அவன் வந்தான். “சாப்பிட போலாமா?” சகஜமாக பேச முற்பட்டாள் ப்ரியா.
“நீ ஹாஸ்டல் போய் சாப்பிடல?” அவன் பதில் கேள்வி கேட்க… அதை கண்டுகொள்ளாமல் “எந்த கேன்டீன்ல சாப்பிடுவ? சரி போலாம். பேச நேரம் இல்ல… நூன் செஷன்’க்கு சீக்கிரம் திரும்ப வரணும்” என்றவுடன்…
அவன் முறைத்துக்கொண்டே புன்னகையுடன் “வா” என அழைத்துச்சென்றான்.
அவளுக்கும் சேர்த்து அவன் உணவு வாங்கச் சென்றவுடன், அவனையே கன்னத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘தன்னுடைய ஆசை நினைவேறிவிட்டது. அடுத்து செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயத்தை ஆரம்பிப்போம்’ என மனம் நினைக்க… அவள் எதிரில் வந்து உட்கார்ந்தான்.
ஒரு தட்டை அவள் பக்கம் வைக்க… “எவ்ளோ வருஷமா வெளி சாப்பாடு சாப்டுட்டு இருக்க இளா?” கேட்டபடி சாப்பிட ஆரம்பித்தாள்.
“ஏன் கேட்கற? நான் அங்க காலேஜ் படிக்கும்போதே வெளிய தான் சாப்பிடுவேன். இங்க வந்தப்பறம் கம்ப்ளீட் ஆஹ்” அவன் சொல்லிமுடிப்பதற்குள்…
“எவ்ளோ வருஷம்… உடம்பு என்ன ஆகறது? ஹ்ம்ம்? ரெண்டு நாள் தான் உனக்கு டைம். இனி மதியம் உனக்கும் எனக்கும் சேர்த்து ஏதாச்சும் செஞ்சு எடுத்துட்டுவர. ஆரம்பத்துல தயிர் சாதமா இருந்தா கூட பரவால்ல. பட் இனி மதியம் கேன்டீன் கிடையாது. ஒகே?” என்றவுடன், அதிர்ந்து விழித்தான் செழியன்.
