Thaniperum Thunaiye 31
தனிப்பெரும் துணையே – 31
ப்ரியாவுடன் கொஞ்சநேரம் இருந்த பின், அன்றே மும்பைக்கு கிளம்பினான்.
அடுத்து வந்த நாட்களில், ஆஃபிஸில் இருந்த சில வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு, கல்லூரியில் சேரும் பணியை தொடங்கினான்.
அதற்கான வேலைகளும் சரியாக நடந்தது. அதை சந்தோஷமாக ப்ரியாவிடம் பகிர்ந்துகொண்டான். ஆனால் இந்த சில நாட்களாக ப்ரியா அவனுடன் அதிகமாக பேசாததாக சின்ன உணர்வு ஏற்பட்டது.
ஏன் என்று புரியவில்லை. அன்று சென்னையில் சந்தித்தபோது நன்றாகத்தானே பேசினாள் என யோசித்து, சில சமயம் செழியனே மெஸேஜ் அனுப்பினான் அவளுக்கு.
ஆஃபீஸ் வேலை அதிகமிருப்பதாக சொன்ன ப்ரியா, அவனுக்கு மெஸேஜ் அனுப்பதை குறைத்துக்கொண்டாள்.
அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவளை பற்றி ஞாபகம் வரும்போதெல்லாம், அந்த விளக்கை அவன் உபயோகிப்பான். அவளுக்கு புரியவேண்டும் என்று.
அவளின் நினைப்புடன் நாட்களை நகர்த்த, அது மாதங்களாக நகர்ந்தது. ஒரு நாள் காலை அவன் கல்லூரிக்குள் நுழையும்போது ப்ரியா அழைத்திருந்தாள்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யம். இத்தனை நாள் பேசாமல் இப்போது அழைத்துள்ளளே என நினைத்து அவன் எடுக்க, அடுத்து அவள் சொன்ன செய்தி கேட்டு திடுக்கிட்டான்.
அவள் IIT லேக் சைட் கேட் பக்கம் நிற்பதாக சொன்னவுடன், அதிர்ந்து வெளியே வந்தான். அது வழியாக அப்போது தான் அவன் உள்ளே சென்றிருந்தான்.
சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்த ப்ரியாவை பார்த்த செழியனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அதே அதிர்ச்சியுடன் அவள் அருகில் செல்ல, அவள் முகத்தில் புன்னகை. அவனுக்கு தெரியும் அன்று முதுகலை பட்டபடிப்புக்கான தேர்வுகள் மற்றும் நேர்காணல் நடக்கப்போகிறது என.
‘அதற்காக வந்திருக்கிறாளா? இல்லை வேறேதேனுமா? கையில் பையெல்லாம் உள்ளதே…’ என்ற யோசனையுடன், அவளிடம் இன்டெர்வியூ’விற்கு வந்திருக்கிறாளா என கேட்டான்.
அவள் ஆம் என்றதும், ஒரு நொடி இதயம் செயலற்று நின்றுவிட்டது அவனுக்கு.
‘இன்னும் என்னவெல்லாம் இவளால் செய்யமுடியும்? அவளுடனான காதலுக்காக தான் ஒரு படி எடுத்துவைத்தால், அவள் நான்கு படி எடுத்துவைக்கிறாளே!’ செயலற்றிருந்த அவன் இதயம், இப்பொது படபடவென துடிக்க ஆரம்பித்தது.
ஒரு நொடி அவள் முகம் பாராமல் தன்னை சமநிலை படித்துக்கொண்டு… மனதில் சொல்லத்தெரியாத பல உணர்வுகளுடன் அவளை அழைத்துச்சென்றான்.
அவள் ஏதோ பேச, அவளை பார்த்த செழியன் மனதில் சுருக்கென்றது.
உடல் மெலிந்து, கண்களை சுற்றி கருவளையமென இருந்தாள். அவனுக்கு புரிந்தது, இந்த குறுகியகாலத்தில், எவ்வளவு படித்திருந்தால், இங்கு நேர்காணலுக்கு வந்திருக்கமுடியம் என.
‘தன்னுடன் சரியாக பேசாதது, இவ்வளவு சிரமப்பட்டது… தன்னுடன் படிப்பதற்காகவா’ என நினைக்கையில், இதயத்தில் ஒரு வலி.
அவள் முகத்தில் தெரிந்த சோர்வு அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதை காட்ட, அவளை உணவு உண்ண அழைத்துச்சென்றான் முதலில்.
‘காதலை வார்த்தையால் சொல்லாமல், இவ்வளவு அழுத்தத்துடன் இருக்கிறாளே… நான் சொல்லாததற்கு காரணம், என் நிலை… அதை உயர்த்தியபின் சொல்லவேண்டும் என நினைத்தேன். ஆனால் இவளோ… அதை சொல்லாமலே ஒவ்வொன்றிலும் உணர்த்துகிறாளே? இவள் வீட்டில் என்ன சொல்லியிருப்பாள்? கண்டிப்பாக மெட்ராஸ்’ஸில் கிடைக்கவில்லையா என கேட்டிருக்கமாட்டார்களா?’ என்று யோசித்துக்கொண்டே அவளுக்கு உணவு வாங்கித்தந்தான்.
அவள் சாப்பாட்டிலேயே குறியாக இருக்க, அவளை கொஞ்சம் சீண்டத் தோன்றியது. ‘உனக்காகத்தான் வந்தேன்’ என்று ப்ரியாவை சொல்லவைக்கவேண்டுமென நினைத்து அவளிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டு, “ஏன் மெட்ராஸ் கிடைக்கவில்லையாயா” என வேண்டுமென்றே ‘எதற்கு மும்பை’ என மறைமுகமாக கேட்டான்.
அதற்கு துளியும் அலட்டிக்கொள்ளாமல், “மெட்ராஸில் கிடைக்கவில்லை” என்று சொல்லிவிட்டு, அவன் முகம் பாராமல் அங்கிருந்து அவசரமாக கைகழுவ சென்றவேளை பார்த்து… நன்றாக சிரித்தான் செழியன்.
அவளுடன் கண்டிப்பாக அன்று முழுவதும் இருக்க வேண்டுமென நினைத்து அவன் ப்ரோஃபஸர்’ரிடம் அன்று விடுப்பு கேட்டுக்கொண்டான்.
அவளும் முதல் சுற்று எழுத சென்றுவிட்டாள். அவளுக்கு இருந்த படபடப்புக்கு ஈடாக இவனுக்கும் அதே படபடப்பு இருந்தது. குட்டிப்போட்ட பூனை போல வாயிலில் அங்கும் இங்குமென நடந்துகொண்டிருந்தான்.
முதல் சுற்று முடிந்து அவள் வந்து, நன்றாக செய்துள்ளதாக சொன்னாள். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவளை உணவு உண்ண அழைத்துச்சென்றான்.
அங்கே அவனுடைய பிரிவில் வேலைபார்க்கும் குமாரை எதிர்பார்க்கவில்லை. குமாரிடம் மட்டும் கொஞ்சம் நன்றாக பேசுவான் செழியன். நன்றாக என்றால் ‘ஹாய் ஹலோ. எப்படி இருக்க. சாப்பிட்டயா’ என்ற பரஸ்பர கேள்விகள் மட்டுமே. அதுபோக சில துறை சார்ந்த கேள்விகள்.
செழியனிடம் குமார் எப்போதும் கேட்பது… ‘ஏன் இப்படி தனியாக இருக்கிறாய். நன்றாக எல்லோரிடமும் பழகலாமே’ என்பதுதான். வெறுமனே புன்னகைத்துவிட்டு டாபிக்’கை மாற்றிவிடுவான் செழியன்.
குமாரை பார்த்ததும் ‘ஐயோ இவர் எங்க இங்க. அதுவும் இசை இருக்கும்போது. யார் என்று கேட்டால் என்ன சொல்வது’ என மனதில் நினைக்க சரியாக குமாரும் அதையே கேட்க, செழியன் கொஞ்சம் மழுப்பி ‘சொந்தம். இன்டெர்வியூ’விற்கு’ என்றான்.
குமாரும் வாழ்த்து சொல்லி சென்றுவிட, இருவரும் சாப்பிட்டு அடுத்த கட்ட நேர்காணலுக்கு சென்றனர்.
ப்ரியா கொஞ்சம் பதட்டத்துடன் இருப்பதை பார்த்த செழியன், ‘இதேபோல பதட்டத்துடன் இருந்தால், அவள் சரியாக செய்ய முடியாது’ என நினைத்து அவளை கொஞ்சம் தேற்றினான்.
அவள் சரி என்றாலும் அவள் கையில் சின்ன நடுக்கம் தெரிந்தது அவனுக்கு.
அவளை எப்படி சகஜநிலைக்கு கொண்டுவருவது என யோசித்து, அவள் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டான்.
‘எதற்கும் கவலை வேண்டாம். எல்லாம் சரியாக நடக்கும். தைரியமாக இரு அதுதான் இப்பொது அவசியம்’ என்பதை குறித்தது அந்த பற்றுதல்.
இருவரும் வாய்மொழியால் அதிகம் பேசாமல், மனதளவில் பேசிக்கொள்ளும்போது, அவன் செய்கை அவளுக்கு புரியாதா. அவளும் கொஞ்சம் தெளிந்தாள். அவள் நடுக்கம் குறைந்தது.
ப்ரியா பெயரை அழைத்தவுடன் அவள் உள்ளே சென்ற அடுத்த நொடி, அந்த ப்ளாக் பக்கத்தில் இருந்த சின்ன கோவிலுக்கு சென்றான்.
‘இதுவரை உன்கிட்ட நான் எதுவும் எனக்காக வேண்டிட்டதில்ல. என்கிட்ட இருந்த நிறைய விஷயத்தை நீ பறிச்சிட்டப்க்கூட நான் எதுவும் கேட்டதில்லை. முதல் தடம் கேட்கறேன். என் இசை என்கூடவே இருக்கணும். இப்போ ஆரம்பிச்சு என் ஆயுள் முடியறவரை’ மனதார கண்கள் கலங்கி பிராத்தனை செய்தான்.
பின், தேர்வு நடக்கும் இடத்திற்கு வந்து அவள் சென்ற அறையின் வாயிலயே பார்த்திருந்தான் அவள் வெளிவருவதற்காக.
அவளும் வந்தாள். முகத்தில் புன்னகையுடன். அவன் கொஞ்சம் நிம்மதியடைய… அந்த நிம்மதி போன இடம் தெரியாமல் சென்றது அவள் “நல்லா பண்ணிருக்கேன். தெரியல பாப்போம். டூ டேஸ் ஆகும்ல. கிடைக்கலனா அடுத்த ஆப்ஷன்… என்னன்னு பார்க்கணும்” என்று சொன்னவுடன்.
‘கொஞ்சம் நிம்மதி வரக்கூடாது நமக்கு’ என நினைத்து, “அதெல்லாம் ஒன்னும் இல்ல. பி பாசிட்டிவ்” என்றான். இருந்தும் மனம் படபடத்தது.
அவளை சென்னைக்கு அனுப்பிவைக்க, ஏர்போர்ட் இருவரும் சென்றபோது, அவள் கிளம்பும் தருணம், அவனிடம்… ‘சாப்பாடு செய்ய கற்றுக்கொள், எனக்கு இங்கு ஹாஸ்டல் சாப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டு செல்ல, அவனிருந்த மனநிலையில், முதலில் எதுவும் காதில் செல்லவில்லை. வெறும் தலையை மட்டும் ஆட்டினான்.
அவளும் சிறிதுதூரம் சென்றபோது தான் அவள் சொன்னதற்கான அர்த்தம் புரிந்தது… ‘தேர்வாகிவிடுவேன்’ என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறாள் என்று.
கண்கள் மின்ன அவளை மொபைலில் அழைத்தான். அவள் சென்னை சென்றதும் அழைக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பினாள். பதிலுக்கு ‘சீ யூ ஸூன்’ என்ற மெஸேஜை மட்டும் அனுப்பினான் புன்னகை குறையாமல்.
அவள் மறைமுகமாக தேர்வாகிவிட்டதாக சொன்னாலும், உறுதியாக தெரிந்துகொள்ள யோசித்து, குமாரை அழைத்தான்.
ப்ரியா இன்டெர்வியூ பேனலில் இருந்த தமிழ்செல்வன் என்பவருடன் குமாருக்கு நல்ல பழக்கம். ஆகையால், அவரிடம் கேட்டு முடிவு என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் என குமாரை அழைத்தான்.
குமாரும், ‘அடுத்தநாள் கேட்டுப்பார்க்கிறேன், தமிழ் சொல்வாரா என்று தெரியவில்லை’ என்றான். அன்றைய இரவு தூங்கா இரவானது செழியனுக்கு.
அடுத்தநாள், பரபரப்புடன் இருந்தான். குமார் என்ன சொல்வான் என தெரிந்துகொள்ளதற்கு.
குமாரை பார்த்தவுடன், செழியன் அவன் முன்னே சென்று நிற்க… “கேட்டேன் இளா. அதிருக்கட்டும். நீ என்ன இவ்ளோ ஈகர்’ரா இருக்க” என்று செழியனை கிண்டல் செய்ய… “தெரிஞ்ச பொண்ணுண்ணா” என்றான் முகத்தில் டின் கணக்கில் அசடு வழிந்துக்கொண்டு.
“ஓ. வெறும் தெரிஞ்ச பொண்ணு தான் இன்டெர்வியூ பேனல்’ல என் பாய் ஃபிரண்ட் கூட படிக்கணும்னு சொல்லிருக்கா” என்றதும் கண்கள் அகல அதிர்ந்தான் செழியன்.
“அண்ணா” செழியன் அதிர்ச்சியுடன் அழைக்க… “அட ஆமாம்ப்பா. அந்த பொண்ணு இத தான் சொல்லியிருக்கு. பட் தமிழ் அவருக்கு ரிசல்ட் பத்தி தெரியாது. அத வெளிய சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. சோ பாப்போம்” என்று நிறுத்திய குமார்… “ஹாப்பி ஃபோர் யூ இளா. இனி நீ தனியா சுத்த மாட்ட பாரு” கண்ணடித்துவிட்டு சென்றான்.
செழியன் முகத்தில் புன்னகை. ‘அடிப்பாவி. என்னம்மா பேசியிருக்க. என்கிட்ட மட்டும் வாயைத்திறந்து பாய் ஃபிரண்ட்னு சொல்லிடாத’ என எண்ணிக்கொண்டான்.
அடுத்த ஓரிரு நாட்களில் ப்ரியா அவனை அழைத்து தேர்வாகிவிட்டதாகச்சொல்ல, செழியனை கையில் பிடிக்க முடியவவில்லை.
அவளுடன் இருக்கப்போகும் நாட்களை எண்ணி கனவிலேயே மிதந்தான்.
நாட்கள் வேகமாக நகர, அகிலன் ப்ரியாவை வந்து விட்டுவிட்டு சென்றான். வந்தபோது செழியனை அழைத்து வேறு பேசினான்.
‘இத்தனை நாட்கள்… ஏன் வருடங்கள் இதுபோலவெல்லாம் பேசாமல் இதென்ன இப்போது. ஒருவேளை தெரிந்திருக்குமோ’ கொஞ்சம் குழப்பத்தில் யோசித்தான் செழியன்.
‘தெரிந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்’ என அதை புறம் தள்ளிவிட்டு, அடுத்தநாள் ப்ரியாவை பார்க்க, இரவு முழுவதும் தூங்காமல் காத்திருந்தான் பொழுது விடிவதற்கு.
அதேபோல அடுத்த நாள், காலை அவளிடம் இருந்து மெஸேஜ் வந்தது. கல்லூரிக்கு தயார் ஆகிக்கொண்டிருப்பதாக.
அவள் சொன்னவுடன், ஹாஸ்டல் பக்கம் சென்றான். அவன் தான் காலை ஆறரை மணிக்கெல்லாம் வந்துவிட்டானே கல்லூரிக்கு.
‘இதுவரை பார்த்தது வேறு. ஆனால் இப்பொது… கூடவே இருக்கப்போகிறாள். தினம் தினம் பார்க்கப்போகிறோம்’ என எண்ணி மனது ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, அவன் முன்னே வந்துநின்றாள் ப்ரியா.
அவளை பார்த்து புன்னகைத்தான் செழியன். அவனுக்கு இருந்த சந்தோஷத்தில் அவளை அப்படியே தூக்கி சுற்ற வேண்டும் என்பதுபோல இருந்தது. ஆனால் செய்துவிட்டால் அது செழியன் இல்லையே!
