Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

Thaniperum Thunaiye – 6

தனிப்பெரும் துணையே – 6

கவிதா கர்பமாகியிருப்பதைக் கேள்விப்பட்டு செழியன் வந்திருந்தான். லட்சுமி அவனை வரவேற்றார்.

அவனைப் பார்த்ததும் மயங்கும் தன் மனதை மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டு, அவனைப் பார்த்தும் முறைத்துவிட்டு மேலே சென்றுவிட்டாள் ப்ரியா.

கோபம் கோபமாக வந்தது அவன் மேல். ‘எண்ணை மாற்றிவிட்டு, அதைக்கூட தராமல், பார்த்ததும் புன்னகை வேறு. சரியான காரியவாதி. காரியம் முடிந்ததும் கழற்றிவிட்டுவிட்டான். இவனைப் போய்’ என உள்ளம் கனன்று கொண்டிருக்க…

“இப்போ என்ன கோபம்? நான் தான் கோபப்படணும் நீ என் நம்பர்’ர பிளாக் பண்ணினதுக்கு” என்று அவன் குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தாள்.

லட்சுமி அவனிடம்… கவிதா ஓய்வெடுத்துக்கொள்ள மேலே இருப்பதாக சொன்னவுடன், கவிதாவை பார்க்க மேலே வர, ப்ரியா பால்கனியில் நின்றுருப்பதை பார்த்து அங்கே வந்தான்.

“வாட்? நீ ஏன் கோபப்படணும்? Selfish. உன் வேலை முடிஞ்சதும், நம்பர் மாத்திட்டு… அதைக்கூட சொல்லாம, நான் பிளாக் பண்ணிட்டேன்னு பொய் சொல்றயா?” கிட்டத்தட்ட சிவந்த முகத்துடன், மெதுவாக ஆனால் அழுத்தமாக கேட்டாள்.

ஒரு நொடி அவளையே பார்த்த செழியன், “நான் ஏன் பொய் சொல்லணும்?” என்றுவிட்டு, அவள் எண்ணை அழைத்து ஸ்பீக்கர்’ரில் போட்டு அவள் பக்கம் காட்டினான்.

அது அவளுடைய எண். ஆனால் அழைப்பு செல்லவில்லை.

அவள் யோசனையுடன் பார்க்க, “நீ இதுக்கு என்ன பொய் சொல்லலாம்னு யோசி. இதான் என் நம்பர். அக்காவை பார்த்துட்டு நான் கிளம்பறேன்” என சொல்லி, அவன் எண்ணை கொடுத்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

ப்ரியாவிற்கு ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்தாள்.

‘நான் எப்போ பிளாக் செஞ்சேன்?’ என்று எந்த எண்ணையெல்லாம் பிளாக் செய்தாள் என யோசிக்க, கொஞ்சம் புரிந்தது.

அவசரமாக பிளாக் செய்த எண்களை பார்க்க, அதில் இவன் எண்ணும் இருந்தது.

அந்த எண்ணில் இருந்து வந்த ஒரே ஒரு மெசேஜ் ‘ஹலோ’ என்பது தான்.

“ஐயோ…” என தலையில் அடித்துக்கொண்டு, அவன் எண்ணை சேவ் செய்து, அன்ப்ளாக் செய்தாள்.

உடனே ‘ஒரு நிமிஷம் பேசணும். முடியுமா?’ என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

சிறிதுநேரத்தில் கவிதாவும் செழியனும் கவிதாவின் அறையில் இருந்து வெளிவர… “அக்கா… நீ போ. நான் ஒரு போன் பேசிட்டு வரேன்” என்றான்.

கவிதா கீழே செல்லும்வரை பொறுத்திருந்து திரும்ப, அவன் எதிரில் நின்றாள் ப்ரியா.

“என்ன பேசணும்?” ஆர்வமில்லாமல் அவன் கேட்க, “சாரி” என்றவள் கண்கள் கூட கெஞ்சியது.

அதை பார்த்தவுடன், அவன் முகம் சட்டென இலகுவாக மாறியது. அவன் சின்னதாக தலையசைத்துவிட்டு கிளம்பத் திரும்பும்போது…

“காலேஜ்ல ஒருத்தன் ரொம்ப டார்ச்சர் பண்ணான். சும்மா புது நம்பர்ல இருந்து ஹாய் ஹலோனு அனுப்பிட்டே இருந்தான். உன்கிட்ட இருந்து ‘ஹலோ’ மெசேஜ் வந்ததும் அவன் தான்னு நெனச்சு பிளாக் பண்ணிட்டேன். நீயாச்சும் உன் நேமோட அனுப்பியிருக்கலாம்ல…” என்றாள்.

அவன் அவளையே பார்க்க… “ப்ராமிஸ். நீயே பாரு. எவ்ளோ நம்பர் பிளாக் பண்ணிருக்கேன்னு” என மொபைலை நீட்ட… அவன் அதைப் பார்க்காமல் புன்னகைத்துக்கொண்டே “பரவால்ல” என்றான்.

அவன் அவளை நம்பியது அவள் மனதில் ஒரு சின்ன சந்தோஷம்.

பின் அவன், “ரொம்ப தேங்க்ஸ்” என்றவுடன், அவள் புன்னகைத்துக்கொண்டே எதற்கு என்பதைப்போல பார்க்க… “நீ அப்புறம் இங்க எல்லாரும் அக்காவை ரொம்ப நல்லா பார்த்துக்கறதா அக்கா சொன்னா. தேங்க் யு” என்றான்.

அவள் இதழ்கள் விரிந்து சிரித்து “எனக்கு மட்டும் சொன்னா பத்தாது. எங்க அண்ணன் நெப்போலியனுக்கும் சொல்லணும்” என குறும்புடன் அவள் சொல்ல… இப்போது முறைத்துக்கொண்டு புன்னகைத்தான் அவன். அதில் முற்றிலுமாக விழுந்தாள் அவள்!

“அவர் இல்ல போல. நீ தேங்க்ஸ் சொல்லிடு. நான் கிளம்பறேன்”

“பார்க்கலாம்… சரி வாயிலயே தேங்க்ஸ் சொன்னது போதும். எனக்கு ஏதாச்சும் பெருசா கிபிட் வேணும்” என்றாள் புன்னகைத்துக்கொண்டு.

மறுபடியும் அவளை ஒரு நொடி கண்கொட்டாமல் பார்த்த செழியன்… “ஹ்ம்ம்… நான் கிளம்பணும். வரேன்” என்றதும் இதுவரை சிரித்த அவள் முகம் சட்டென மாறியது. சரி என்பதுபோல தலையசைக்க… அவனும் தலையசைத்துவிட்டு சென்றான்.

அவன் செல்லும் திசையையே பார்த்து நின்றாள். ஏனோ அவன் செல்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நெஞ்சம் வலித்தது.

அவனை பாராமல்… அவனை தொடர்பு கொள்ளாமல் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு போடப்பட்ட ஒரு தடுப்பு, இந்த ஒரு சந்திப்பில் முற்றிலுமாக உடைந்தது போல உணர்ந்தாள்.

மறுபடியும் அவனிடம் பேசவேண்டும், பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

‘ஒருவரை மனதிற்கு பிடிப்பது அவ்வளவு தவறான காரியமா என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

‘இது சரியா’ என நினைக்கும்போது, ‘இதில் தவறென்ன இருக்கிறது’ என்று நினைத்தாள். பின் ஒரு முடிவாக ‘அவனுக்கும் தன்னை பிடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்வதில் தவறில்லை’ என்றது அவள் மனம்.

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் ‘அவன் என்ன செய்கிறான்… எங்கு வேலை பார்க்கிறான்’ என்பதை எல்லாம் அவனிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்.

அவனிடம் மனதில் உள்ளதை குறித்து பேசாவிட்டாலும் சகஜமாக பேசினாள்.

நாட்கள் இப்படியாக நகர… கவிதாவிற்கு வளைகாப்பு தேதி குறித்தனர்.

காஞ்சிபுரத்தில் செய்யலாம் என நினைத்து, பின் அவள் உடல்நிலையை கருத்தில்கொண்டு சென்னையிலேயே அவர்கள் வீட்டிலேயே நடத்த முடிவு செய்தனர்.

அந்த வளைகாப்பில் அனைவரும் கவிதாவின் மேல் கண்ணாக இருக்க, ப்ரியா மட்டும் வாயில் மேலே கண்ணாக இருந்தாள். செழியன் வருவதாக சொல்லியிருந்தான். அதற்காகவே புடவையெல்லாம் கட்டிக்கொண்டு காத்திருந்தாள்.

அவளை நீண்ட நேரம் காத்திருக்க விடாமல் சரியான நேரத்திற்கு வந்தான் செழியன்.

அவனைப் பார்த்ததும் விழிகள் அகல கிட்டத்தட்ட சிலையென நின்றாள் ப்ரியா.

அவள் மனதில் முதன் முதலில் பார்த்த அவனையும் தற்போது தன்முன் நின்றுகொண்டிருப்பவனையும் ஒப்பிடாமல் இருக்கமுடியவில்லை. கடந்த முறை பார்த்தபோது கூட வித்தியாசம் கண்டுகொள்ளவில்லை அவள் இருந்த மனநிலையில்.

ஆனால் இன்று அவனைப் பார்த்தபடி நின்றாள்.

சரியான வயதிற்கேற்ற உடற்கட்டு… அதற்கு ஒத்துப்போகும் பொருத்தமான உடை. நேர்த்தியான ஹேர்கட் என அவனை பார்க்க, அவன் அவளைப்பார்த்ததும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு கவிதாவிடம் சென்றான்.

ஏனோ அதற்குமேல் அவளால் அங்கு நிற்கமுடியவில்லை.

வேகமாக சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள். அங்கிருந்து வெளியே நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருந்தாள் கூடவே அவனையும்.

அனைவரும் கவிதாவிற்கு நலுங்கு வைத்து வளையல் அணிவித்தனர். அகிலன் தன் மனைவியின் அழகை ரசித்தான். வயிற்றில் உண்டான கரு அவள் பொலிவை இன்னமும் கூட்டியது.

ப்ரியாவை அழைத்து அணிவித்துவிட சொல்ல, அவளும் சொன்னதை செய்தாள். கவிதா அருகிலேயே ப்ரியா நின்றுகொண்டாள். கடைசியாக அகிலனும் செழியனும் இருக்க… செழியனை அனுப்பினான் அகிலன்.

புன்னகைத்துக்கொண்டே நலுங்கு வைத்து, தட்டில் இருந்த கண்ணாடி வளையல்களை எடுத்தவன், தனது பாக்கெட்டில் இருந்து அவன் வாங்கிவந்த ரத்தினங்கள் பதித்த தங்க வளையலுடன் அதை சேர்த்து…

“நீ சந்தோஷமா இருக்கறத பார்க்கறதுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குக்கா. உனக்காக என்னோட காசுல ஃபர்ஸ்ட் டைம் வாங்கினது” என்று சொல்லிக்கொண்டே அதை அணிவித்தான்.

கவிதாவின் கண்கள் கலங்கியது. செழியனின் கண்களும். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ப்ரியாவின் மனம் நெகிழ, சற்று தள்ளி இதைப் பார்த்துக்கொண்டிருந்த அகிலன் புன்னகைத்தான்.

பின் கடைசியாக அகிலன் கவிதாவிடம் வந்தான். அவன் வரவும், செழியன் சற்று தள்ளி நின்றுகொண்டான்.

அகிலன் கவிதாவிற்கு சந்தனம் குங்குமம் வைத்தபின், அவள் முன் மண்டியிட்டு, அவளுக்கு வளையலை அணிவித்தான்.

பின், பற்றியிருந்த அவள் முன்னங்கையில் சின்னதாக முத்தம் பதித்து “தேங்க்ஸ் பேபி. லவ் யு டா” கண்களில் கண்ணீர் கோர்க்க, ஆசையாக சொன்னான்.

பற்றியிருந்த அவன் கைகளை இறுக பிடித்துக்கொண்ட கவிதா, அவனின் கனிவில் கண்கள் கலங்கிட, அவன் செயலில் முகம் வெட்கத்தில் சிவந்திட, அந்த சந்தனம் பூசிய முகம் இன்னமும் பிரகாசமானது.

இதை பார்த்தவுடன் ப்ரியா செழியனை பார்த்து புருவங்கள் உயர்த்தி அகிலனை காட்ட, அவன் முகத்தில் புன்னகை, கண்களில் நிறைவு.

திருமணத்தில் தன் தமக்கை தொலைத்த சந்தோஷத்தை இப்போது கண்கூடாகப்பார்க்க, அந்த சந்தோஷத்திற்கு காரணம் அகிலன் என புரிந்தது.

அங்கே நின்றுகொண்டிருந்த தந்தையை பார்த்தான். அவர் கண்களில் கட்டுக்கடங்காமல் கண்ணீர் கொட்டியது மகளின் சந்தோஷமான வாழ்க்கையை நினைத்து!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved