Thaniperum thunaiye – 17
தனிப்பெரும் துணையே – 17
இருவரின் அந்த அருகாமை அனிச்சையாக ப்ரியாவை பின்னே செல்ல வைக்க… அடுப்பு இருக்கும் பக்கம் மேடையில் மோதி நிற்பதற்குள், அவன் அலறிக்கொண்டு “ஹே… இசை. ஸ்டவ்’ல சூடு தண்ணி” அவளை தன்பக்கம் இழுத்தான்.
ஒரு நொடி பயந்து அவன் மேல் மோதியும் மோதாமல் ப்ரியா நிற்க, உடனே அவன் பின் தள்ளி… “குடிக்க ஹாட் வாட்டர் போட்டுருந்தேன். நல்லவேள. நீ இடிச்சு உன்மேல கொட்டிருக்கும்” என்றவன்… “அங்க மேல ஷெல்ஃப்ல தாளிக்கற ஐடம்ஸ், பவுடர்’லாம் இருக்கு. கீழ அரிசி பருப்பு இருக்கு. ஏதாச்சும்ன்னா கூப்பிடு” என்றுவிட்டு உடனே வெளியேறிவிட்டான்.
அவள் தலையசைத்ததோடு சரி. அப்படியே நின்றாள். என்ன நடந்தது என நினைத்துப்பார்த்தாள்.
அவன் முகத்தில் தெரிந்த அந்த பதட்டம். பின் இரண்டாவதுமுறை ‘இசை’ என்று சொல்லி அழைத்தது, பின் சுதாரித்துக்கொண்டு அவன் விலகியது, அவளிடம் சின்னதாக வெட்கம் மலரச்செய்தது. இந்தக்காலத்தில் இப்படிப்பட்டவனா! என நினைத்து புன்னகையும் சேர்ந்துகொண்டது.
என்னென்ன வீட்டில் உள்ளது என பார்க்க, சில தேவையான பொருட்கள் இல்லாமல் போக… அவனை அழைத்தாள். அவன் சமையலறை வாசலில் வந்து நின்றான்.
அவனை பார்த்ததும், முன் நடந்தது நினைவிற்கு வர, அவன் முகம் பாராமல்… “எனக்கு சில திங்க்ஸ் வேணும்” என்றாள். “சொல்லு வாங்கிட்டுவரேன்” என்றதும்… “பேப்பர் இல்ல மொபைல்’ல நோட் பண்ணிக்கோ” என்றாள்.
மொபைலில் ஒவ்வொன்றாக குறிப்பெடுத்துக்கொண்டு, “இவ்வளவா” அவளை விழித்துப்பார்த்தான்.
“நீ செஞ்ச லெமன் ரைஸ், தயிர் சாதத்துக்கு தேவப்படாது. ஆனா நல்லா சமைக்க கண்டிப்பா இதெல்லாம் வேணும். போ சீக்கிரம் வாங்கிட்டு வா. அப்புறம் நீ ஆம்லெட் சாப்பிடுவல்ல?” கேள்வியாக அவனை பார்க்க, அவன் தலையை ஆட்டினான்.
“சூப்பர். சீக்கிரம் வாங்கிட்டு வா” என்றுவிட்டு வேலையில் இறங்கினாள். மனம் மட்டும் அவனுடனான இந்த சின்ன சின்ன பேச்சுக்களை, அவன் உடன் இருப்பதை மிகவம் விரும்பியது.
சிறிதுநேரத்தில் அவனும் கேட்டதனைத்தையும் வாங்கிவந்தான்.
அவன் சமையலறையில் வைத்துவிட்டு செல்ல முற்பட, “எங்க போற? வந்து ஹெல்ப் பண்ணு. எனக்கு வெங்காயம் தக்காளி கட் பண்ணி குடுத்துட்டு போ” என்றாள் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு.
அவனும் முறைத்துவிட்டு, அவள் பக்கத்தில் நறுக்க ஆரம்பிக்க… “ரொம்ப பெருசா கட் பண்ணாத. சின்னதாவும் பண்ணிடாத” என பேசிச்சுக்கொடுத்துக்கொண்டே வேலை செய்தாள்.
அவளுக்கு அழகாக தெரிந்தது… இப்படி இருவரும் சேர்ந்து வேலை செய்வது. ஏதோ ஒரு அன்னியோன்னிய உணர்வை தந்தது. அடிக்கடி அவனைப்பார்த்துக்கொண்டே வேலை செய்தாள். சிலசமயம் வேலையில் அவர்கள் அறியாமல் இருவருக்கிடையில் இடைவெளி குறையும்போது… பெரும்பாலும் அவன் தள்ளியே நின்றுகொண்டான்.
இதுவரை அவள் வாழ்வில் நிறைய பேரை பார்த்திருக்கிறாள். ஒரு பெண் அதுவும் வழிய வந்து பேசும்போது, பழகும்போது, ஒரு சின்ன இடம் கிடைத்தால், அதை பயன்படுத்திக்கொண்டு என்னவெல்லாமோ செய்யும் ஆட்கள் மத்தியில் செழியன் தனியாகத் தெரிந்தான் அவளுக்கு.
வேறுமாதிரியான பார்வை ஒருமுறை கூட இருந்ததில்லை அவனிடம்.
“முடிஞ்சது. கட் பண்ணிட்டேன். நான் வெளிய இருக்கேன். எதுன்னா கூப்பிடு” அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.
அவன் சென்றவுடன் அந்த இடம் வெறுமையாக உணர்ந்தாள். வேண்டுமென்றே அவனுடன் இருக்க வேண்டும் என நினைத்து சின்ன சின்ன வேலைகளை தந்தாள்.
சில நிமிடங்களில், “இங்க ரொம்ப கன்ஜெஸ்டட்’ஆஹ் இருக்கு. உன்னால ஃபிரீ’யா வேல பார்க்கமுடியலை. நான் வெளிய பூண்டு உரிச்சு எடுத்துட்டுவரேன்” என்றான் அவளைப் பாராமல்.
அவன் முகம் பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தது அவளுக்கு. ‘ரொம்ப டார்ச்சர் பண்றோமோ’ என நினைத்து அவள் சரி என்றதும் உடனே சென்றுவிட்டான்.
ஒருவழியாக சமையல் முடிந்து, “இளா. நீ சாப்பிட உட்காரு. ஆம்லெட் சூடா போட்டுத்தறேன்” அவள் உள்ளிருந்து குரல் கொடுத்ததும்… சில நொடிகள் மௌனத்திற்கு பின் அவன், “அதெல்லாம் இருக்கட்டும். சேர்ந்தே சாப்பிடலாம்” என்றான்.
அவள் என்னசொல்லியும் அவன் கேட்கவில்லை. அனைத்தையும் செய்துமுடித்துவிட்டு, இருவரும் தரையில் உட்கார்ந்தனர் சாப்பிட.
அவன் அவளையே பார்த்தான். அவள் என்ன என்று புருவம் உயர்த்த… அவன் ஒன்றுமில்லை என்பதுபோல தலையசைத்தான். “கவலப்படாத. சுமாரா இருக்கும் சாப்பாடு” சொல்லிக்கொண்டே இருவர் தட்டிலும் சாப்பாடு வைத்தாள்.
அவன் ஒரு வாய் சாப்பிடும் வரை அவனையே இவள் பார்க்க… அவன், “நல்லா இருக்கு” என்றதும் தான் நிம்மதி அவள் முகத்தில் தெரிந்தது.
“தேங்க்ஸ். ஃபிரஸ்ட் டைம் full meal பண்ணிருக்கேன்” என்றதும்… “அடுத்த தடவ இன்னும் கொஞ்சம் அதிகமா பண்ணிடு. நைட்’கும் சேர்த்து சாப்பிடுவேன்” என்று செழியன் சொன்னவுடன் என்ன தோன்றியதோ, சட்டென அவளை பார்த்து முழித்தான்.
‘அட அட… இத தானே எதிர்பார்த்தேன். பரவால்ல ப்ரியா சமையல் டெஸ்ட்’ல பாஸ்’ என நினைத்து புன்னகைத்தாள்.
பின் ‘ஏன் இந்த முழி முழிக்கறான்’ என யோசித்துக்கொண்டே… “நெஸ்ட் வீக் சிக்கன் வாங்கிடு. அதுவும் ஃபிரஸ்ட் டைம் செய்யப்போறேன். பார்ப்போம்” சொல்லிக்கொண்டே சாப்பிட்டாள்.
அழகாக அன்றைய தினம் நகர்ந்தது. சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரத்தில் அவள் கிளம்பினாள்.
அவள் மறுத்தும் ‘தனியாக அனுப்ப மனமில்லை உடன் வருகிறேன்’ என்றுவிட்டு அவளுடன் கிளம்பினான். மாலை பொழுது நெருங்கும் நேரம். இருவரும் கல்லூரிக்கு நடந்தே சென்றனர்.
பவய் எரிக்கரையின் நடைபாதையில், அந்த ரம்மியமான மாலை பொழுதில், அவனுடனான இந்த நடைப்பயணம்… அதை ரசித்துக்கொண்டே நடந்தாள்.
மௌனமே இருவரிடையில் குடியிருக்க, அவன் “ரொம்ப நாள் கழிச்சு நல்ல சாப்பாடு இன்னைக்கு. கடைசியா அக்காவை பார்க்க சென்னை போனப்ப சாப்பிட்டது. எவ்ளோ மாசம் முன்னாடின்னு கூட தெரியல. நீ இன்னைக்கு வருவன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. தேங்க்ஸ் ஃபோர் கமிங்” என்றான் நிறைவாக ஆத்மார்த்தமாக அவளைப்பார்த்து.
அவளும் அவனைப்பார்த்து புன்னகைத்தாள். அவன் மறுபடியும் ஏதோ சொல்ல வர, கொஞ்சம் தயங்கியபின், தனக்குத்தானே ஏதோ முடிவெடுத்ததுபோல, பேசாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.
‘ஏன் இந்த தயக்கம்? எப்போது தான் மனத்திலுள்ளதை பேசுவான்’ என்று தோன்றியது அவளுக்கு.
ஏதோ சிந்தித்துக்கொண்டே வந்தவன் திடீரென… “ரொம்ப தலைவலிக்குது. ஒரு டீ குடிக்கலமா” என்று கேட்டவுடன், சரி என்றாள்.
சில நிமிடங்கள் முன் இருந்த சந்தோஷம் நிறைவு, இப்போது சுத்தமாக இல்லை அவனிடத்தில்… அவன் கைகோர்த்து, ஆதரவாக, ‘மனம்திறந்து பேசு’ என சொல்லவேண்டும் என்றிருந்தது.
அமைதியாக இருவரும் டீயை குடித்துவிட்டு, அவளை ஹாஸ்டல் வரை வந்து விட்டுவிட்டு சென்றான். எதுவுமே பேசவில்லை அவன். அவள் பேசினால் கூட சின்ன புன்னகை மற்றும் தலையசைப்பு மட்டுமே.
ப்ரியாவுடைய ஹாஸ்டல் அறையில் உடன் தங்கியிருக்கும் பெண் காயத்திரி, ப்ரியாவை பார்த்ததும்… “சண்டே. ஃபுல் டே பாய் ஃபிரண்ட் வீட்ல… ஹ்ம்ம் என்ன நடந்துச்சு சொல்லு சொல்லு” என ஆர்வமாக கேட்க… ப்ரியாவிற்கு சிரிப்பு ஒருபக்கம், நடந்தை சொன்னால் ஓட்டித்தள்ளிவிடுவாளே என்ற எண்ணம் மறுப்பக்கம்.
அவள் விடாமல் கேட்க, நடந்ததை பட்டும் படாமல் சொன்னாள் ப்ரியா.
அதைக் கேட்ட காயத்திரி’க்கு அதிர்ச்சி. “நீ படிச்ச காலேஜ்’க்கும், அவன் படிச்ச காலேஜ்’க்கும், இப்போ நீங்க இருக்கற ஊருக்கும், படிச்சிட்டு இருக்க காலேஜ்’க்கும்… நீங்க பண்ற லவ்’க்கும்… சத்தியமா சம்மந்தமே இல்ல. இதென்ன சொல்லாத காதலா?” என அடுத்த கேலியை ஆரம்பித்தாள் காயத்ரி.
ப்ரியா புன்னகையுடன்… “லவ்’வ வார்த்தையால சொல்லிக்கணும் இல்ல அத புரியவைக்கணும்னு அவசியமில்ல காயு. அது ஒரு ஃபீல். நம்ம செய்ற ஒன்னொன்னுலயும் காதலோட பிரதிபலிப்பு இருக்கும். அது நமக்கு காதல, அன்பை உணர்த்தும்” என ப்ரியா உணர்ந்து பேச… “யப்பா குருஜி. போதும். நமக்கெல்லாம் இது செட் ஆகாது. நீங்க நடத்துங்க” என்றாள் காயத்திரி.
காதல் என்றால் ஊர் சுற்றிக்கொண்டு, செல்லமாக எப்போதும் பேசிக்கொண்டு, எப்போதும் மற்றவரை சார்ந்துயிருப்பது, இணக்கமாக நெருக்கமாக இருப்பது மட்டும் தான் காதலா என்ன?
இது எதுவும் இல்லாமல் ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு, எதையும் எதிர்பார்க்காத தன்னலமற்ற காதல் அவர்களுடையது என்பது ப்ரியாவின் எண்ணம்.
ஆனால் பின்னாளில் இதுவே பிரிவுக்கான ஒரு காரணமாக அமையும் என்று தெரிந்திருந்தால், காதலை சொல்லாலும் உணர்த்தியிருப்பார்களோ?!
இப்படியாக ப்ரியா, செழியனின் நாட்கள்… வாரங்கள், மாதங்களாக நகர்ந்தது. இருவரும் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் சாதாரண காதலர்கள் காதல் செய்வதையும் தாண்டி ஒருவருக்காக மற்றொருவர் ஒவ்வொன்றயும் பார்த்து பார்த்து செய்தனர்.
அதுபோல ஒருநாள், ப்ரியாவின் பிறந்தநாள் வந்தது. ஹாஸ்டலில் உடன் இருக்கும் தோழிகளுடன் கலகலப்பாக அன்றைய இரவு ஆரம்பிக்க, மனது ஒரு மூலையில் செழியனுக்கு தெரியுமா? எப்படி தெரியும். வாய்ப்பில்லை என்றெல்லாம் யோசிக்கும்போது, அவனிடம் இருந்து அழைப்பு.
அவனுக்கு தெரியுமா? என்ற எண்ணம் தந்த இன்ப அதிச்சியில் இருந்தாள் ப்ரியா. அதே எண்ணத்துடன் அவள் எடுக்க… “கீழ கேன்டீன்’க்கு வர முடியுமா?” வேறு எதுவும் சொல்லாமல் அவன் இப்படி கேட்டவுடன், இதயம் வேகமாக படபடக்க ஆரம்பித்தது.
தோழிகளிடம் சொல்லிவிட்டு, ப்ரியா அதே படபடப்புடன் கீழே செல்ல, அவளுக்காக கையில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு காத்திருந்தான் செழியன்!
