Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 7

தனிப்பெரும் துணையே – 7

வளைகாப்பு நிகழ்ச்சி ஒருவழியாக முடிய, கவிதாவை கைத்தாங்கலாக மேலே அவர்கள் அறைக்கு அழித்துச்சென்றான் அகிலன்.

சில நிமிடங்களில் செழியனிடம் கவிதாவிற்கு சாப்பிட ஏதோ கொடுத்தனுப்பினார் அவர்களின் சித்தி. அதை எடுத்துக்கொண்டு அவன் மேலே செல்ல, அங்கே அகிலன் கவிதாவை உட்காரவைத்து, வளையல் அணிவித்துக்கொண்டிருந்தான்.

செழியன் அவர்கள் அறையின் கதவருகே செல்லும்போது அவர்கள் பேசுவது காதில் பட்டது.

“சூப்பர்’ரா இருக்கு அகி. ஏன் கீழயே போட்டுவிடல” என கவிதா கேட்க…

“எனக்கு தோணுச்சு பேபி. செழியன் உனக்காக வாங்கிட்டு வருவான்னு. அவன் எவ்ளோ ஆசையா உனக்கு போட்டுவிட்டான். அந்த ஸ்வீட் மெமரி எப்பவுமே இருக்கணும். நானும் அங்கேயே போட்டுவிட்டுருந்தேன்னா அவனுது தனியா தெரியாம போயிருக்கும். என்னோட பேபிக்கு நான் எங்க போட்டுவிட்டா என்ன?” என்ற பதில் வந்தது.

அதை கேட்டுக்கொண்டிருந்த செழியன் மனதில் இனம் புரியாத உணர்வு. அகிலன் முதல் முறையாக உயர்ந்து தெரிந்தான்.

“ஏய்… குட்டிப்பொண்ணு இப்போவே என் பொண்டாட்டி என்னை கொஞ்சினா சண்டைக்கு வரையா நீ?” என்று வயிற்றில் இருந்த குழந்தையுடன் அவன் பேசுவது கேட்க, உள்ளே இருவரையும் இப்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து திரும்பினான்.

அப்போது அவன் முன் வந்து நின்றாள் ப்ரியா. சொந்தங்கள் அனைவரும் கீழே இருக்க… எதிரே நின்ற ப்ரியாவை பார்த்து புன்னகைத்தான் செழியன்.

“ஹாப்பியா?” என அவள் கேட்க, அதன் பொருள் புரிந்து, ஆம் என்பதுபோல புன்னகையுடன் தலையசைத்தான்.

“தம்பி கலக்கீடீங்க. அப்புறம் நெப்போலியன் மேல சந்தேகம் போச்சா?” என அவள் குறும்பாக சிரிக்க, மறுபடியும் ஆம் என தலையை ஆட்டினான்.

‘ஒஓ பதில் சொல்ல மாட்டயோ… இப்போ பாருடி’ என எண்ணி…

புருவங்கள் உயர்த்தி “அப்புறம் நான் கேட்ட கிஃபிட் எங்க?” ‘இதற்கு அவன் பதில் பேசியே ஆகவேண்டும்’ என நினைத்து கேட்டாள்.

ஆனால் அவனோ பதிலுக்கு புன்னகைத்து பேண்ட் பாக்கெட்டில் இருந்து துணியால் ஆன ஒன்றை நீட்டினான் அவளிடம்.

அதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் மறந்திருப்பான். இல்லை அவள் கேட்டதை பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டான் என நினைத்தாள்.

அவன் கை நீட்டியபடி இருக்க… கண் இமைகள் விரித்து திகைத்துப் பார்த்தாள். இதயம் மகிழ்ச்சில் சத்தம் வெளியே கேட்கும் அளவிற்கு வேகமாக துடித்தது. கைகளில் நடுக்கம். வயிற்றில் கடகடவென சத்தம்.

அவளை பார்த்த செழியன்… “ம்ம்” என மறுபடியும் அவள் முன்னே நீட்ட… நடுக்கத்துடன் அதை வாங்கிகொண்டாள்.

“பிடிச்சிருக்கான்னு பாரு” என்றதும்தான் கண்ணை அவனிடத்தில் இருந்து பிரித்து அந்த கிஃபிட்’டை பார்த்தாள்.

அழகாக வெல்வெட் துணியினால் ஆன சின்ன பெட்டி. மறுபடியும் அவனை பார்த்தாள். எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவள் ஏனோ பேசமுடியாமல் தவித்தாள்.

அவன் “ஓபன் பண்ணு” என்க… அதை திறந்தாள்.

உள்ளே அழகான ஒரு கைக்கடிகாரம். அவ்வளவு அழகான வேலைப்பாடுகள். நிச்சயம் விலை அதிகமாக இருக்கும் என தெரிந்தது. மறுபடியும் அவனை பார்த்தாள்.

“பிடிச்சிருக்கா?” அவன் கேட்க… பதில் இல்லை அவளிடம். இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவள் மீளவில்லை.

“அக்காக்கு வளையல் வாங்க போன இடத்துல வாங்கினேன். வேற என்ன வாங்கறதுன்னு தெரியல. இது ஒகே வா” என கேட்க… இப்போது அவள் பதில் பேச முடியாமல் தலையை ஆட்டினாள்.

அப்போது கவிதா அகிலன் அறையில் இருந்து… “நான் சொன்னா கேட்கவே மாட்டயா? படுத்தாத. சொல்றத செய்” என அகிலன் கிட்டத்தட்ட அதட்டிக்கொண்டிருந்தான்.

அதைக்கேட்ட செழியன் என்னோவோ ஏதோ என நினைத்து பதட்டத்துடன் பார்க்க… ப்ரியா அதை புரிந்துகொண்டு “ஹஸ்பண்ட் வைஃப்… ஏதோ பேசிக்கறாங்க” என்றாள்.

“அக்கா எங்க பேசினா? அவர் தான் திட்டிட்டு” என அவன் சொல்லிமுடிப்பதற்குள்… “ஏன் என் உயிரை வாங்கற? உனக்கு இப்போவே எல்லாம் பண்ணனுமா?” என கவிதாவும் சத்தமாக பேசினாள்.

“அவங்க ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி. உன் அக்கா உன்ன மாதிரிலாம் இல்ல… நல்லா பேசுவாங்க” நக்கலுடன் சொன்னவளைப் பார்த்து முறைத்த செழியன்… “நான் போய் என்னனு பார்க்கறேன்” என்றுவிட்டு விடுவிடுவென “அக்கா…” என கதவை தட்டினான்.

“வாடா செழியா” என்றதும், அவசரமாக உள்ளே சென்றவன், அங்கு நடப்பதைப் பார்த்து சட்டென நின்றுவிட்டான்.

கவிதா சேரில் உட்கார்ந்திருக்க… அகிலன் மண்டியிட்டபடி அவள் பாதங்களை ஒரு டப் வெதுவெதுப்பான தண்ணீரில் வைக்கச்சொல்லி போராடிக்கொண்டிருந்தான்.

செழியனைப் பார்த்த அகிலன் “எப்படி இவளை கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க சமாளிச்சீங்க? சொல் பேச்சு கேட்கறதே இல்ல” என கவிதாவை பார்த்து முறைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக பாதங்களை தண்ணீருக்குள் விட்டான்.

பதிலுக்கு கவிதா முறைத்து… “நம்ம ஃபன்க்ஷனுக்கு தான் எல்லாரும் வந்துருக்காங்க அகில். நாம இப்படி தனியா மேல இருந்தா என்ன நினைப்பாங்க?”

“அதெல்லாம் இருக்கட்டும். நீ உட்கார்ந்தே இருந்து கால் வீங்கிடுச்சு” என்றவன் “உன் அக்காக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லு” என்றான் அகிலன் செழியனை பார்த்து.

அதைக்கேட்டு விழித்த செழியன், பின் “உன் நல்லதுக்கு தானே கா” என நிறுத்தி… “சித்தி இதை குடுத்துட்டு வரச்சொன்னாங்க” என்று அவன் கையில் இருந்த டப்பாவை கொடுத்துவிட்டு வெளியேறினான்.

அங்கே அவனுக்காக காத்திருந்தாள் ப்ரியா. அவனை பார்த்ததும்… கேலியாக புன்னகைத்து… “என்ன நடந்துச்சு” என கேட்க… கொஞ்சம் தயங்கி நடந்ததை சொன்னான் செழியன்.

அவன் முகபாவத்தை பார்த்து சிரித்த ப்ரியா… “நான் தான் சொன்னேனே. நீ யோசிக்கற அளவுக்கு ஒன்னும் இல்ல இளா. உன் அக்கா இங்க சந்தோஷமா தான் இருக்காங்க” என்றாள்.

பின், “சரி… இது எப்படி இருக்கு” என கையில் அவன் தந்த கடிகாரத்தைக் காட்டி கேட்க… அதை பார்த்தவன் முகத்தில் புன்னகை… “அழகா இருக்கு” என்றான் அதை பார்த்தவண்ணம். கண்கள் ஓரிரு நொடிகள் அவள் கைகளில் நிலைத்தது.

“ஹ்ம்ம் தேங்க்ஸ் ஃபோர் திஸ் லவ்லி கிஃபிட் ” என்றாள் ப்ரியா.

உடனே அவளை பார்த்த செழியன்… “தேங்க்ஸ் சொன்னது போதும். பதிலுக்கு ஏதாச்சும் நீ கிஃபிட் குடு” என புன்னகைத்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

‘இது நான் அவன்கிட்ட சொன்னது. எனக்கே சொல்லிட்டு போறான்? அதுவும் நக்கலா சிரிச்சுட்டு வேற போறான்’ என இன்பமாக அதிர்ந்தாள் ப்ரியா.

நாட்கள் இன்னமும் அழகாக நகர்ந்தது. அவள் வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும் தினமும் குறுஞ்செய்தியில் பேசுவார்கள். அவன் அதிகம் பேசாவிட்டாலும், அவளுக்கு ரிப்லை செய்துவிடுவான்.

இப்படியாக நாட்கள் மாதங்களாக கடந்தது.

கவிதாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது. அதை பார்க்க ஒருமுறை அவன் வந்த போது, தேர்வுக்காக அவள் செங்கல்பட்டு சென்றிருந்தாள். சென்னையில் இருந்தால் அலைச்சல் அதிகம் என நினைத்து.

அதனால் அவன் வந்த போது அவளால் பார்க்கமுடியவில்லை.

பின் ப்ரியா கல்லூரி இறுதியாண்டுக்கு வந்திருந்தாள். கல்லூரியில் இன்ப்லாண்ட் ட்ரைனிங்’கிற்காக புனே போக திட்டமிட்டிருந்தனர். கூடவே இறுதியாண்டு சுற்றுலாவும் முடித்து, மும்பையில் இருந்து ட்ரைனில் சென்னைக்கு திருப்புவதாக திட்டமிட்டிருந்தனர்.

இரவு உணவு உண்ணும்போது வீட்டில் உள்ளவர்களிடம் அவள் சொன்னபோது, அகிலன் அவளிடம்… “காலேஜ்ல அரேன்ஞ் பண்ணதா இல்ல… நீங்களே பண்ணதாடா?” என கேட்டவுடன், ஒரு நொடி திடுக்கிட்டாள்.

பின் சாதாரணமாக, “ஒவ்வொரு வருஷமும் ஃபைனல் இயர்’ர ஒவ்வொரு கோர் கம்பெனிக்கு கூட்டிட்டுப்போவாங்கண்ணா. இந்த டைம் புனே. அப்படியே ட்ரிப்’பும் பிளான் பண்ணிருக்காங்க” என்றாள்.

“ஹ்ம்ம். சரி. பாத்து போய்ட்டு வா” என்று மட்டும் சொன்னான்.

‘அண்ணன் கண்டுபிடித்திருப்பானோ தன்னுடைய திட்டத்தை’ என கொஞ்சம் திடுக்கிட்டாலும், கொஞ்சம் தைரியமாகவே பேசினாள். அதனால் அகிலனுக்கும் சந்தேகம் வரவில்லை.

இந்த ட்ரிப்’பை குறித்து செழியனிடம் எதுவும் அவள் சொல்லிக்கொள்ளவில்லை.   அடுத்த சில நாட்களில் புனே சென்றனர். அங்கு ட்ரைனிங் முடித்துவிட்டு… இரண்டு நாட்கள் அவுரங்காபாத்தில் சுற்றுலா.

பின், மும்பை புறப்பட்டனர். ஒருநாள் மும்பையில் சுற்றிவிட்டு சென்னை பயணத்தை ஆரம்பிப்பதாக இருந்தனர்.

மும்பை வந்தடைந்ததும்… ப்ரியா செய்த முதல் வேலை!

“நான் மும்பை வந்துருக்கேன். இப்போ மெரைன் டிரைவ் கிட்ட இருக்கேன். வர முடியுமா?” பட்டென்று கேட்டாள் செழியனிடம். ஆனால் எதிரிலிருப்பனிடம் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்தது!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved