Thaniperum Thunaiye – 30
தனிப்பெரும் துணையே – 30
அவளை பிரியமனமில்லாமல் ஸ்டேஷன் வரை சென்று விட்டுவிட்டு வந்தான் செழியன்.
அவள் சென்னை சென்றவுடன், அந்த விளக்கை பரிசோதித்துவிட்டு அது வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட, அவனுக்கு அதில் நம்பிக்கை இல்லை.
அடுத்தநாள் கல்லூரிக்கு எடுத்துச்சென்று, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டுடென்ட்ஸ்’ஸிடம் அதைப் பற்றி கேட்டான்.
அவர்களும் இன்டர்நெட்டின் உதவியுடன் அந்த விளக்கை பற்றி அவனிடம் சொன்னார்கள். அதுவும் நன்றாக வேலை பார்க்கும், பழுதெல்லாம் இல்லை என்றுவேறு சொன்னார்கள்.
அவன் முகத்தில் புன்னகை அவளின் செய்கையை நினைத்து.
அதில் wifi பொறுத்தாவிட்டால், சிக்னல் செல்லாது என்று சொன்னதும், அவன் அவள் பற்றி நினைப்பு வரும்போதெல்லாம் சிலசமயம் wifi ஆன் செய்தும் சிலசமயம் செய்யாமலும் அதை உபயோகித்தான்.
பின் அவள் தந்த கப்ஸ், அதில் இருந்த வரைபடம். கண்டிப்பாக அதிலும் ஏதாவது இருக்கும் என நினைத்தான்.
அதை படம் எடுத்து இன்டர்நெட்’டில் உள்ள ஆர்டிஸ்ட்ஸ் (artists) குழுமத்தில் பதிவு செய்து, அதைப்பற்றி கேட்டபோது தான் தெரிந்தது… அதில் இருந்தது ஆதாம் ஏவாள் என்றும், ஆண் குடிக்கும் கோப்பையில் ஏவாள் படமும், பெண் குடிப்பதில் ஆதாம் படமும் இருப்பதாக.
அதை பதிலை படித்தவுடன், ‘ஐயோ இப்போது அவள் பக்கத்தில் இல்லையே’ என்று மனதில் தோன்ற, ‘இருந்தா மட்டும் என்ன செய்துவிடுவாய்’ நங்கென்று மண்டைக்குள் குட்டியது அவன் மூளை.
‘அவளின் காதலை ஒவ்வொரு செயலிலும் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறாள்’ என நினைத்து மொபைலை எடுத்தான். அதில் அவள் படம். அவள் பார்க்காதபோது வளைகாப்பு நிகழ்ச்சியில் அவன் எடுத்தது.
அதை பட்டும் படாமல் தொட்டுப்பார்த்து… ‘சீக்கிரம் வந்துட்டேன் ப்ளீஸ். எங்க திரும்பினாலும் நீ என்கிட்ட பேசினது… நீ என்னை பார்த்தது… இதுமட்டும் தான் ஞாபகம் வருது’ என்று ஆசையாக சொன்னான்.
அவனுக்கு அவள் கண்கள் மீதும், அவள் குரலில் மீதும் எப்போதுமே ஒரு ஈர்ப்பு. அதுவும் அவனைப் நேருக்கு நேராக பார்க்கும்போது, கண்களில் ஏற்படும் மாறுதல், குரலில் காட்டும் ஆசை, அக்கறை என ஒவ்வொன்றையும் ரசித்தான்.
அவளுடன் கழித்த வெகுசில நிகழ்வுகளை நினைத்து காலத்தை ஓட்டினான். அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்தான் அதுவும் மெஸேஜில். அவளும் அவனுக்கு அழைத்தெல்லாம் பேசமாட்டாள். ஆனால் இருவரும் பேசும்விதமே மற்றவருக்கு நன்றாக புரிந்தது அது சாதாரணமான பேச்சில்லை என்பது.
நாட்கள் சீக்கிரம் நகர்ந்தது. ப்ரியா படித்து முடித்து வேலையில் சேர்ந்திருந்தாள். செழியனும் முதுகலை பட்டப்படிப்பு முடிக்க சில மாதங்கள் மட்டுமே இருந்தது. அப்போது ஒரு நாள்… அவனை அவன் டிபார்மென்ட் HOD அழைத்திருந்தார். .
இதுவரை நடந்த தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் ப்ராஜெக்ட் முடிவுகள் பார்க்கும்போது, செழியன் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும், முதல் இடம் வந்த மாணவன் வெளிநாடு செல்லும் காரணத்தால், செழியனுக்கு ஒரு அறியவாய்ப்பு வந்துள்ளதாக சொன்னார்.
அவர் சொன்ன அந்த விஷயத்தை கேட்ட செழியனுக்கு அதிர்ச்சி ஆச்சர்யம். இந்தியாவில் மிகவும் பெயர் பெற்ற அரசாங்க நிறுவனத்தின் உதவியுடன், அவர்களுடன் சேர்ந்து முனைவர் பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான அழைப்பு அவனுக்கு விடுக்கப்பட்டிருந்தது.
அதுவும் படித்து முடித்தபின் அதே நிறுவனத்தில், பெரிய பதிவில் வேலை. சேர்வதும் சேராததும் அவன் முடிவே. ஆனால் கட்டாய முழு நேர முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். தற்போதுள்ள வேலையே விடவேண்டும் என்பது விதிமுறை.
செழியனுக்கு ஒரு புறம் மிகுந்த ஆசையாக இருந்தாலும், வேலையை விட்டுவிட்டு எப்படி என புரியவில்லை. ஒரே குழப்பாக இருக்க, அவன் துறையில் அனைவரும் அவனிடம் ‘இதுபோல வாய்ப்பு கிடைப்பதெல்லாம் மிகவும் அரிது. எல்லோருக்கும் கிடைக்காது இது அவனின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்’ என்றனர்.
ஆஃபிஸில் அவனுடைய அதிகாரியை அழைத்து இதுகுறித்து பேசினான். அவனை சீக்கிரம் பணியில் இருந்து விடுவிக்கமுடியுமா என்று கேட்க, அதற்கு அவர், அவனை கான்ட்ராக்ட்டில் இருந்து விடுவிப்பது கடினம் என்றார்.
அவனுக்கு என்ன செய்வதென்று புரியாமல், உடனே அழைத்தான் ப்ரியாவை.
அவன் இருந்த மனநிலையில் என்ன பேசினோம் என்றெல்லாம் தெரியவில்லை. படபடப்புடன் அனைத்தும் கொட்டித்தீர்த்தான் அவளிடம்.
அவளுக்கு செல்லமுடியாத சந்தோஷம். மிகவும் பெருமையாக இருந்தது. அவளும் அவனை சாந்தப்படுத்தி தெளிவாக பேச, அவனுக்கு கொஞ்சம் புரிந்தது என்ன செய்யலாம் என்று.
மனம் கொஞ்சம் லேசாக… அவளிடம் சாதாரணமாக பேசிவிட்டு வைத்தான்.
பின் படிப்பு வேலை என நாட்கள் நகர, இறுதி தேர்வுகள் முடிந்து, பல்கலைக்கழகத்தில் இரண்டாம் இடம் பெற்றான்.
மனம் அடுத்தநொடி ப்ரியாவை நினைத்தது. ‘அவளுக்காக என ஆரம்பித்த இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. என்ன… முனைவர் பட்டமும் படித்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்’ என நினைக்க, இப்போது அவனுக்கு வசந்தகாலம் போல. நினைத்தெல்லாம் நடந்தது.
அவனுடைய ஆபீஸ் அதிகாரி அவனை அழைத்து பேசினார்.
‘IIT பாம்பே’யில் பெரிய பதிவில் இருக்கும் ஒருவர், தங்களுடன் பேசியதாகவும், செழியனுக்கு கிடைத்துள்ளது பெரிய வாய்ப்பு. அதை கருத்தில் கொண்டு அவனை விடுவிக்க மறுபரிசீலனை செய்யச்சொல்லி கேட்டார்’ என்று சொன்னார்.
பின், செழியனை ஆஃபீஸ் பொறுப்பில் இருந்து விடுவிக்க நிர்வாகம் ஒத்திக்கொண்டுவிட்டதாகவும், ஆனால் அவன் செய்துவந்த சிற்சில வேலைகள் அவன் செய்துதந்தால் உதவியாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செழியனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம். அவருக்கு நன்றி கூறிவிட்டு, அன்றைய மாலையே புறப்பட்டான் சென்னைக்கு.
இந்த நல்ல விஷயத்தை ப்ரியாவிற்கு போனில் சொல்ல விருப்பமில்லாமல் நேரே சென்று சொல்லவேண்டும் என்ற ஆசை.
அடுத்தநாள் காலை காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை புறப்படலாம் என்றிருக்க, அவனை இன்னமும் இன்பத்தில் ஆழ்த்தியது அப்போது வந்த அழைப்பு. இந்துமதியிடம் இருந்து.
அவள் கர்பமாக இருப்பதாக சொன்னவள், ‘இப்போது கொஞ்சம் வீட்டில் நிலைமை பரவாயில்லை… முன்புபோல இல்லை’ என்று சொன்னாள். ‘தன் கணவன் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வதாகவும்’ சொன்னாள்.
அதைக்கேட்ட செழியனுக்கு மிகவும் சந்தோஷம். அதே சந்தோஷத்துடன் சென்னை புறப்பட்டான் ப்ரியாவை பார்ப்பதற்கு.
அவள் அலுவலகத்திற்கு சென்று அவளை அழைத்து கீழே வரச்சொன்னான். அவளின் திகைப்பு அவள் குரலிலேயே தெரிந்தது.
கடைசியாக வெண்பாவின் காதுகுத்து நிகழ்ச்சியில் பார்த்தது. தனியாக பேச தருணம் அப்போது அமையவில்லை. இப்போது பல மாதங்கள் கழித்து இருவரும் பார்க்கிறார்கள்.
அவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் கீழே அவனுக்கு எதிராக வந்துகொண்டிருந்தாள்.
முன்பைப்போல இல்லாமல் கொஞ்சம் பெரியபெண்ணைப்போல தோற்றம். அழகான ஒரு குர்த்தி லெக்கின். காற்றுக்கு பறக்கும் அவளின் முடி, அதைசிறைபிடிக்க போராடும் கரம், ஒப்பனையற்ற முகம், கொஞ்சம் அங்கங்கே எட்டிப்பார்த்த ஓரிரு பருக்கள்… கண்கள் காட்டிய ஆச்சர்யம்… எப்போதும்போல மேலுதட்டை சன்னமாக கடித்தபடி அவள் முன்னே வந்து நின்ற ப்ரியாவை கேமராவை விட அதிக வேகத்தில் மனதில் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
அவள் கொஞ்சம் தட்டுத்தடுமாறி பேச, அதை ரசித்துக்கொண்டே பதிலளித்தான் அவள் கேட்ட கேள்விகளுக்கு.
பின் இருவரும் ஒரு உணவகத்திற்கு செல்ல, அங்கே அவளுக்கு தெரியாதவர் என்பவர் யாருமேயில்லை போல. அனைவரிடமும் கையசைத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் அவனை அழைத்துச்சென்றாள்.
அவன் மனதில் ‘தனக்கு அப்படியே ஆப்போசிட்’ என்று நினைத்துக்கொண்டு அவளுடன் சென்றான்.
முன்பு இருந்த தடுமாற்றம் எல்லாம் போய், இப்போது பழைய துடுக்குத்தனம் மீண்டிருந்தது அவளிடம். அவனை கிண்டல் செய்துகொண்டு உணவு ஆர்டர் செய்தாள்.
பின் அவளிடம்… சொல்லவேண்டும் என நினைத்ததை சொல்லவரும்போது, சாப்பிடவந்த ஒருவர் அவனை ‘ப்ரியா அருகில் உட்கார்ந்துகொண்டு, இடம் தரமுடியுமா’ என கேட்க, ‘இதென்னடா சோதனை’ என்பதுபோல ப்ரியாவை பார்த்தான்.
அவள் அவனை அழைக்க, அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
எவ்வளவு தள்ளி உட்கார நினைத்தாலும், அந்த இடத்தில் முடியாது போல. இருவரும் கொஞ்சம் பக்கத்தில் பக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தனர்.
அவள் இடது கை டேபிள் மேல் இருக்க, அதில் அவன் தந்த வாட்ச். அவனை பார்த்து அழகாக சிரிப்பதுபோல இருந்தது.
அவளின் கையை பற்றி தான் கைகளில் இருத்திக்கொள்ள அவன் மனம் படாதபாடு பட, “என்ன சொல்லணும் இளா” என்ற அவள் குரல் அவனை தன்னிலைக்கு கொண்டு வந்தது.
அவன் தன்னை சமன் செய்துகொண்டு சொல்ல நினைக்கும்போது சர்வர் அவளிடம் “என்ன ப்ரியா… பாய் ஃபிரண்ட்’டா” என்று கேட்டவுடன், அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. மனது சில்லென்று இருக்க… ‘இப்போ பேசு’ என்பதுபோல அவன் டேபிளை பார்த்து புன்னகைத்துக்கொண்டிருக்க, அவள் தடுமாறி சொந்தம் என்றாள்.
அவளின் தடுமாற்றம் அவனுக்கு குதூகலமாக இருந்தது. சர்வர் சென்றவுடன்… அவன் ஆஃபிஸில் நடந்ததை சொல்லி, படிக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. பெருமை. அதை உள்வாங்கிக்கொண்டான்.
அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவன் வந்து அவளிடம் பேச, செழியன் அவனை பார்த்தான்.
ப்ரியா அவனை ‘ரிஷி’ என்று அறிமுகம் செய்ய, பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஜெயம் ரவியை போல தெரிந்தான். அவன் கண்கள் அவ்வப்போது ப்ரியாவை பார்த்து பின் தன்னையும் பார்த்து, ஏதோ செய்தி சொல்வது புரிந்தது.
இத்தனைக்காலம் யாருடனும் அதிகம் பேசாமல் அவர்கள் கண்களை பார்த்து ஓரளவிற்கு மனதை படிக்கும் செழியனால், ரிஷியின் மனது கொஞ்சம் புரிந்தது. ரிஷி அவனிடம் காங்கிராட்ஸ் சொன்னதும், நன்றி கூறினான்.
‘அவனுக்கு நம்மைக்குள் இருக்கும் உறவு என்ன என்று தெரிகிறது… ஆனால் நாம் இன்னும் சொல்லிக்கொள்ளவில்லை’ என நினைத்து அவளை பார்க்க, அவள் கண்கள் படபடத்தது.
அவளின் அந்த படபடப்பை ரசித்தவாறு, வேண்டுமென்றே அவளை கேள்விகள் கேட்க, அவளும் தடுமாறி பதில் தந்தாள். அதைக்கேட்டு நன்றாக சிரித்தான்.
அவனை கண்கொட்டாமல் அவள் பார்த்திருக்க, ‘ரிஷி போல ஒருவனை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு என்னை ஏன் இவ்வளவு பிடித்துள்ளது இவளுக்கு. பார்ப்பதற்கு நான் ஒன்றும் பெரிய அழகனெல்லாம் இல்லை. சுமாரான குடும்பம். படிப்பு மட்டுமே என்னிடம் உள்ளதே தவிர வேறெதுவும் இல்லை. என்னவிதமான காதல் இவளுடையது’ என நினைக்க நினைக்க… அவன் மனம் மூளை அறிவுறுத்தியது ஒன்றே ஒன்று.
‘இவளை ஆயுள் முழுவதும் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும். எதற்கும் வருத்தப்படவைக்கக்கூடாது. நிம்மதியான அழகான அன்பான வாழ்க்கையை இவளுக்கு தரவேண்டும். ஒருபோதும் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று நினைக்கவைத்துவிடக்கூடாது’ என உறுதியெடுத்துக்கொண்டான்.
மனதில் நினைப்பதுபோலவே நடந்துவிட்டால் விதி என்ற ஒன்று எதற்கு!!! விதியின் ஆட்டம் அவன் வாழ்வில் மறுபடியும் ஆரம்பிக்கும்போது, நடக்கப்போவது என்ன?! அவன் நினைத்ததா? இல்லை?!
