Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 3

தனிப்பெரும் துணையே – 3

இளஞ்செழியனை மேலும் கீழும் பார்த்தாள். அக்காவின் திருமணத்திற்கான சடங்குகள் நடக்கிறது. மிகவும் சாதாரணமான பழைய உடை. அதுபோதாதென்று ஒரு துளி புன்னகைக் கூட முகத்தில் இல்லை. உர்ரென்ற முகம்.

அதற்குப் பின் அவனை அவள் கண்டுகொள்ளவில்லை அவனும் அவளைப் பார்க்கவில்லை.

அன்றைய இரவு அகிலன் வீட்டினர் அவர்கள் ஊரான செங்கல்பட்டு புறப்பட தயாராக… மறுபடியும் சகாக்களுடன் மாடியில் இருந்து ப்ரியா இறங்கும் போது, செழியன் கீழிருந்து மேலே சென்றான்.

அவன் கவிதாவின் தம்பி என்று தெரிந்ததால் ப்ரியா உடன் இருந்தவர்கள், முன்னதாக ஓட, அவர்களுக்கு வழிவிட்டான் செழியன்.

ப்ரியா செல்வதற்காக அவன் நகர்ந்து நிற்க… தான் பேசியதற்கு அவன் எதுவுமே எதிர்வினை காட்டாமல் இருப்பதை பார்த்த ப்ரியா அவன் அருகில் வந்தவுடன், திடீரென நின்றாள்.

அவன் என்ன என்பது போல பார்க்க… “நீ… நீங்க” என யோசித்து பின்… “எனக்கு அத்தானா மாமாவா? அதெல்லாம் செட் ஆகல. எப்படி கூப்பிடறது?” என நிறுத்தி…

“ஹ்ம்ம். இங்க பாருங்க செழியன். ப்ச். இல்ல ரொம்ப பெருசா இருக்கு. இங்க பாருங்க இளா. நான் நீங்க வேலை செய்றவருன்னு நினச்சுட்டேன். அது என்னோட தப்பு மட்டும் இல்ல”

“நீங்க ஒழுங்கா அக்கா கல்யாணத்துக்கு நல்லா டிரஸ் பண்ணி, சிரிச்சிட்டே இருந்திருந்தா… அந்த கன்ஃப்யூஷன் வந்துருக்காது. ஆள் பாதி ஆடை பாதின்னு எதுக்கு சொல்றாங்க? ஹ்ம்ம்?”

“சோ அட்லீஸ்ட் கல்யாணத்துக்காவது நல்லா டிரஸ் பண்ணுங்க. பார்க்க கொஞ்சம் சுமாராவாவது இருப்பீங்க. இப்போ போனங்கல்ல அவங்க உங்கள ரொம்ப கிண்டல் பண்றாங்க. சொந்தக்காரரா வேற போய்ட்டீங்களா. அதான் இதெல்லாம் சொல்றேன்”

“நான் சொன்னதை மைண்ட்ல வெச்சுக்கோங்க. கல்யாணத்துல பார்ப்போம். வரேன்” நீளமாக பேசி… சின்னதாக புன்னகைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

கல்யாண வேலைகள் இன்னமும் சீக்கிரம் நடக்க… திருமண நாளும் வந்தது.

அகிலன் குடும்பம் வருவதற்கு முன்பே கவிதாவின் குடும்பம் மற்றும் சொந்தங்கள் திருமணம் நடக்கும் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

மாப்பிள்ளை குடும்பம் வந்ததறிந்து கவிதாவின் அப்பா ஸ்வாமிநாதன், தம்பி செழியன், மற்றும் சித்தி சித்தப்பாவுடன் சில பெண்களும் வரவேற்க வாயிலுக்கு வந்தனர்.

அகிலனுக்கு ஆரத்தி எடுத்துக்கொண்டிருக்க… மற்றொரு காரில் வந்திறங்கினாள் ப்ரியா.

வந்ததும் அவள் கண்ணில் பட்டது செழியன். வெள்ளை நிற லினன் சட்டை மற்றும் வேஷ்டி. புன்னகை இல்லையென்றாலும், பார்க்க நன்றாகவே இருந்தான். அவன் பார்வையும் ஒரு முறை அவளை பட்டு மீண்டது.

அகிலன் ப்ரியாவிடம் சடங்குகள் நடக்கும்போது கவிதாவின் அருகிலேயே இருக்கச்சொல்லி சொல்லிருந்தான். அதேபோல திருமணம் நடக்கும்போதும் உடன் இருக்கச்சொன்னான்.

அதற்காகவே, ஆரத்தி எடுத்து முடித்து அனைவரும் உள்ளே செல்லும்போது, ப்ரியா அவள் அம்மாவிடம் “மா. நான் அண்ணிய பார்க்கப்போறேன்” என்றுவிட்டு ‘கவிதா எங்கு இருக்கிறாள்’ என தேடினாள்.

அங்கே செழியனைப் பார்த்தவுடன் “அண்ணி எங்க இருக்காங்க. என்ன கூட்டிட்டு போங்க” என்றவுடன், அவனும் மண்டையை ஆட்டிவிட்டு முன்னே நடந்தான்.

அவனுடன் நடையில் சேர்ந்துகொண்டு “உண்மைய சொல்லுங்க இளா. பொய் சொல்லக்கூடாது… ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தானே குளிச்சீங்க?” என கேட்க… சட்டென அவளைத் திரும்பிப்பார்த்தான்.

பின் அவன் முறைக்க… “இல்ல…. இன்னைக்கு நிஜமாவே பார்க்கற மாதிரி இருக்கீங்க. ஆனா உர்ருனு இருக்காதீங்க. கொஞ்சம் சிரிக்கலாமே?” என அவள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். அவன் பேசவே இல்லை.

இரண்டு அடி எடுத்துவைத்து அவன் முன்னே குறுக்காய் நின்ற ப்ரியா… “பேச வருமா? இல்ல இந்த செலெக்ட்டிவ்…” என அவள் முடிக்கும் முன், கைகாட்டி அவளை நிறுத்தச்சொன்னவன், எதிர் திசையில் கையை காட்டினான். அங்கே கவிதா உட்கார்ந்திருந்தாள்.

அவன் எதற்குமே வாய் திறக்காமல் இருக்க… அதில் கோபம் கொண்டு “உன்கிட்ட போய் இவ்ளோ நேரம் பேசினேன் பாரு. ச்சி பே” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து… கவிதாவை மேடைக்கு அழைத்து வரச்சொன்னவுடன், ப்ரியா கவிதாவை அழைத்துவந்தாள்.

அவ்வப்போது கவிதாவுடனும் அகிலனுடனும் பேசிக்கொண்டு, மணமேடையில் இருவரின் பின்னாலேயே இருந்தாள் ப்ரியா.

அப்போது தற்செயலாக நிமிர்ந்து ப்ரியா பார்க்க… மணமேடையிலிருந்து ஐந்து அடி தூரத்தில் இருந்த தூணின் மேல் சாய்ந்து கவிதாவையும் அங்கு நடப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்.

இப்போதுகூட அவன் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை. ‘இவன் என்ன ஜடமா?’ என்றே தோன்றியது ப்ரியாவிற்கு.

அவனை அவள் பார்த்தபோது, அவனும் அவளைப் பார்த்தான். உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள் ப்ரியா.

அதன்பின் திருமணம் இனிதே முடிவடைய… மதியம் உணவு முடிந்தபின், ப்ரியா அந்த பழம்பெரும் கோவிலை தன் தோழிகளுடன் சுற்றி பார்க்கச் சென்றாள்.

அப்போது அங்கே ஒரு பெரிய கல்லின் மேல் உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான் செழியன்.

அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருந்தது ப்ரியாவிற்கு. ‘சாப்பிட்டானா இல்லையா’ என யோசிக்கும்போது, மற்றொரு விஷயம் நியாபகம் வந்தது.

இன்று திருமணத்தில் கூட அவனுடைய நண்பர்கள் என்று எந்த கூட்டத்தையும் பார்த்ததாக தெரியவில்லை. ஓரிருவரிடம் மட்டுமே பேசினான்.

அவனை சில நொடிகளுக்கு ஒரு முறை பார்த்துக்கொண்டே சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் சிறிதுநேரத்திற்குப்பின் அமைதியாக சென்றுவிட்டான்.

அன்று மாலையே அகிலனின் குலதெய்வம் கோவிலுக்குப் புறப்பட்டனர் இரு குடும்பங்களும்.

அடுத்தநாள் காலை, அகிலனிற்கும் கவிதாவிற்கும் மறுபடியும் சில சடங்குகள் ஆரம்பித்தது.

காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த வேலை, பதினோரு மணிக்கு மேலும் நடந்துகொண்டிருக்க… செழியனுக்கு கொஞ்சம் அதிகமாகவே வேலை இருந்தது.

மணமக்களுக்கும் மற்றும் அங்கிருந்தவர்களுக்கும் அடிக்கடி குடிக்க ஏதேனும் ஒன்று தந்துகொண்டே இருந்தனர். ஆனால் இவன் எதையும் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தான்.

கவிதா, அவள் தந்தை இருவரும் பூஜையில் இருக்க… இவனை கண்டுகொள்ளை யாருமில்லை.

முகத்தில் சோர்வு தெரியவில்லை என்றாலும், அவ்வப்போது அவனை கவனித்துக்கொண்டிருந்த ப்ரியா அவன் எதையும் சாப்பிடாமல் இருப்பதை பார்த்தாள்.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவள் சொந்தகார குட்டி பையனை அழைத்து ஒரு தட்டில் உணவை வைத்து அவனிடம் கொடுக்கச்சொன்னாள்.

‘யார் கொடுத்தார்கள்?’ என்று கேட்டால் ‘கவிதாவை கை காட்டிவிடு’ என்று சொல்லி அனுப்பிவைத்தாள்.

அதற்குள் அவள் அம்மா அழைக்கவும் வேறொரு வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

கோவில் சடங்குகள் அனைத்தும் முடிந்து அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு கவிதாவின் குடும்பமும் வர, செழியன் தனக்கு கேம்பஸ் இன்டெர்வியூ இருப்பதால் தயாராக வேண்டும் என காஞ்சிபுரம் புறப்பட்டுவிட்டான்.

அதற்குப் பின் ப்ரியா அவன் குறித்து பெரிதாக யோசிக்க வில்லை.

அடுத்தநாள் அவன் நேராக சென்னையில் ரிஷப்ஷன் நடக்கும் ஹோட்டலுக்கே வந்துவிட்டான்.

இன்று எந்த வேலையும் அவனுக்கு இல்லை. அவன் வந்தது… அக்காவிடம் பேசிவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்துகொண்டது… என அனைத்தையும் பார்த்தாள் ப்ரியா.

அவன் ஒருமுறை சுற்றியும் பார்த்தபோது, ப்ரியா அவன் கண்ணில் பட்டவுடன், அவள் புன்னகைக்க… அவன் என்ன செய்யவேண்டும் என புரியாததுபோல பார்த்துவிட்டு… லேசாக மில்லிமீட்டர் அளவுக்கு இதழ்கள் விரிந்து புன்னகைத்தான்.

‘இந்த சிரிப்புக்கு இவ்வளவு யோசனையா’ என நினைத்துக்கொண்டு அவள் வேலையில் மூழ்கினாள்.

இரவு உணவு சாப்பிட்டபின்… ப்ரியா யாருடனோ போனில் பேசிவிட்டு வரும்போது… அவளை வழி மறைத்தான் செழியன்.

அவள் கேள்வியாக அவனை பார்க்க… “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றுவிட்டு சுற்றியும் பார்வையை ஒருமுறை சுழலவிட்டான்.

ப்ரியாவின் கண்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் காட்டியது ‘அவன் என்ன சொல்லப்போகிறேன்’ என நினைத்து…!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved