Preethi S Karthikஎன்னுள் நீ வந்தாய் 2தனிப்பெரும் துணையே

தனிப்பெரும் துணையே – 2 

தனிப்பெரும் துணையே – 2 

இரண்டு கோடுகளை பார்த்தவள் அதை பார்த்தபடி நின்றாள். இதற்கு காரணமானன் முகம் வந்து வந்து சென்றது.

அதை பத்திரப்படுத்தி வைத்தாள். மொபைலில் அவன் எண்ணை அழைப்பதற்கு கைகள் பரபரத்தது. இருந்தும் அழைக்க முடியவில்லை.

அழுகை தொண்டையை அடைத்தது. இன்பமான அவஸ்த்தையாக உணர்ந்தாள். சந்தோஷத்தை அவனிடம் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அதை மறுத்தது அவள் மனம்.

அவனிடம் சொல்லாமல் யாரிடமும் செல்ல தோன்றவில்லை. மனது மிகவும் பாரமானது. அழுகை நிற்காமல் கொட்டியது. இப்படியாக அவள் இருக்கையில், கீழிருந்து சத்தம். அவளை அழைத்தார் லட்சுமி அவள் அம்மா.

அழுதது தெரியக்கூடாது என்று அவசரமாக முகத்தை கழிவிக்கொண்டு கீழிறங்கினாள்.

மதியம் ஆனதால், அகிலன் வேலை முடித்து வந்திருந்தான். அவன், வெண்பா டைட்னிங் டேபிளில் இருக்க… ப்ரியாவை பார்த்தவுடன் லட்சுமி…

“என்னடி ஆச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு” என விசாரித்தார். என்னதான் அழுததை மறைத்தாலும், அம்மாவிற்கு தெரியாதா மகளைப் பற்றி.

“என்ன ஒரு மாதிரி? அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா” அவர் முகம் பாராமல் பதில் தந்தாள்.

ப்ரியா வந்தபோது அவள் அம்மா லட்சுமி அப்பா ஜெயராமன் இருவரும் சில கோவில்களுக்கு சுற்றுப்பயணம் சென்றிந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பி இருந்தனர்.

சென்னை வந்தவுடன், வேலை விஷயமாக… அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டார் ஜெயராமன்.

மகள் கணவனுடன் வராமல், தனியாக வந்தது, அதுவும் அவ்வப்போது தெரியும் கவலையான முகத்தை பார்த்த லட்சுமி…

“சரி எவ்ளோ நாள் மாப்பிள்ளை தனியா இருப்பார். எப்போ கிளம்பற ப்ரியா?” என கேட்க…

“ஏன் நான் இங்க இருக்கறது அவ்ளோ கஷ்டமா இருக்காம்மா?” கோபத்துடன் வார்த்தைகள் வந்தது.

“கல்யாணம் ஆன பொண்ணு… வந்து இவ்ளோ நாள் ஆச்சு… கேட்கறதுல என்ன தப்பு ப்ரியா” அவரும் விடாப்பிடியாக கேட்டார்.

அவரை அதே கோபத்துடன் பார்த்து… “அண்ணா உன் வீட்ல…” என்று அகிலன் பக்கம் திரும்ப… அவன் அவளை தடுத்து, “நீ சாப்பிடு ப்ரியா… அம்மா என்னதிது? சாப்பிடறப்ப இதப்பத்தி பேசிட்டு. மொதல்ல சாப்பிடட்டும். எல்லாம் சரியாகிடும்.  இப்போ எதுவும் பேசவேண்டாம் ப்ளீஸ்” என முடித்தான்.

எங்கே ப்ரியா ‘உன் வீட்டில் நான் இருக்க கூடாதாண்ணா’ என கேட்டு அது அடுத்த பிரச்சனை உருவாவதை விரும்பாமல் அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டான்.

“என் வாய அடைக்கறதுலயே இருங்க. நான் பேசக்கூடாதுன்னா நான் எதுக்கு இங்க இருக்கணும்” என அவர் பங்கிற்கு கோபப்பட்டு ஹாலிற்கு சென்றார்.

கவிதாவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அவள் அகிலனைப் பார்க்க… அவன் பாதி உணவில் எழுந்து அம்மாவிடம் சென்றான். அவரை சமாதானப்படுத்தி கூட்டி வரும்போது, ப்ரியா சாப்பிட்டும் சாப்பிடாமலும் போதும் என்றுவிட்டு மேலே சென்றுவிட்டாள்.

ப்ரியாவின் நடவடிக்கைகள் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இருந்தும் எதுவும் தெரியாமல் என்ன செய்வது என்று புரியவில்லை.

இதை இப்படியே விடவும் மனமில்லை. ஓரிரு நாட்களில் ப்ரியாவிடம் இதுகுறித்து மெதுவாக பேசுவோமா என்று அகிலன் நினைத்திருக்க… கவிதாவும் அதே யோசனையில் இருந்தாள்.

புது உயிர் உருவாகியுள்ளது. ஆனால் அதுகுறித்து சந்தோஷப்படுவதா, இல்லை தலைவிதியை நினைத்து வருந்துவதா என புரியாமல் தவித்தாள் ப்ரியா.

இரவு நேரம் எட்டும் போது கீழே வந்த ப்ரியா, கவிதா யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்க… அமைதியாக சமையலறைக்குள் நுழையும்போது…

“ப்ரியா… இந்தா… ரொம்ப நேரமா உன் நம்பர் ரீச் ஆகலையாம். பேசு” என்று போனை கொடுக்க… ஒரு நொடி தடுமாறினாள் ப்ரியா. இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

சின்னதாக கவிதாவை பார்த்து புன்னகைத்து, போனை வாங்கி காதில் வைத்தவாறே “என்னனு தெரில அண்ணி. நான் பாக்கறேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பால்கனிக்கு.

“இசை….” அந்த ஒரு வார்த்தை காதின் வழியாக சென்று இதயத்தை வலிக்கச்செய்யுமா? அவனின் இந்த பரிதவிப்பான அழைப்பு அதை உணரச்செய்தது.

பதிலுக்கு அவன் பெயர் சொல்ல வாய் வரை வந்துவிட்டது. ஆனால் வற்றியிருந்த கண்களில் கண்ணீர் மட்டுமே வந்தது.

“உன் குரல் கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு… என்கூட பேசமாட்டயா? காலைல வேணும்னே தானே இருமின. அவ்ளோ பிடிக்காம போய்ட்டேன்ல நான்…” வலியுடன் அவன் வார்த்தைகள் வர… அவளிடம் பதிலில்லை.

“எனக்கு யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல… யாரும் கேட்கவும் இல்ல. உன்கிட்ட சொல்லணும்ன்னு தோணிச்சு. அதான் கால் பண்ணேன். எனக்கு அந்த ப்ரெசென்ட்டேஷன் பண்ண சொல்லி திரும்ப இன்வைட் பண்ணிருக்காங்க”

அவள் மௌனமாக இருக்க… “எனக்கு வேற எதுவும் வேணாம்… விஷ் மீ லக் இசை… ப்ளீஸ். நான் இனிமே உன்ன தொல்லையே பண்ணமாட்டேன். ஐ நீட் யுவர் விஷஸ். ஐ டெஸ்ப்ரட்லி நீட் இட் நொவ்”

அவனின் வலி பொருந்திய குரலை கேட்ட பின்… அவளுக்கு அவனிடம் பேசவேண்டும் என்ற ஒரு தவிப்பு… அதை அடக்கி பேசாமல் தன்னை கட்டுப்படுத்த, தொண்டை அடைத்தது.

‘இதற்கு மேல் முடியாது. விட்டால் வெடித்து அழுதுவிடுவோம்’ என நினைத்து… தன்னை சமநிலை படுத்த, ஒரு முறை ஆழ மூச்சை உள்ளிழுத்த ப்ரியா, வீட்டினுள் நுழைந்தாள்.

“பேசிட்டேன் அண்ணி” என்று போனை கவிதாவிடம் தந்துவிட்டு சமையலறையில் கைவேலையில் மூழ்கினாள்.

இரவு உணவிற்குப் பின், அவளறைக்கு வந்தவளுக்கு, அவனை பற்றிய எண்ணங்களே மனதை சூழ்ந்தது. கண்களில் கண்ணீர் கூட வறண்டு விட்டது போல ஒரு உணர்வு. இரவு துளியும் தூங்க முடியவில்லை.

அவனை முதலில் சந்தித்தது… பேசியது… என்ற எண்ணங்கள் கண்முன்னே ஓடியது ப்ரியாவிற்கு.

——————–

ப்ரியா பிரபலமான, கொஞ்சம் நவநாகரீகத்திற்கு பெயர்போன, சென்னை புறநகரில், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தாள். அதே கல்லூரியில் தான் அவள் அண்ணன் அகிலனும் படித்திருந்தான்.

அகிலனின் திருமண வேலைகள் ஒருபுறம் வேகமாக நடந்துகொண்டிருக்க… திருமணத்திற்கு முன் ஒரு சடங்கிற்காக, அகிலன் வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், காஞ்சிபுரத்தில் உள்ள கவிதா வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

பெரியவர்கள் அனைவரும் சடங்கில் உம்மரமாக இருக்க… ப்ரியா மற்றும் அவளுடைய சகாக்கள் (சொந்தத்தில் அவள் வயதை ஒத்திய இளவட்டங்கள்) கவிதா வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒற்றை அறையின் வெளி சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தனர்.

கதவு மூடியது போல் இருக்க… எங்கே கீழே இருந்தால் ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என எண்ணி இந்த கூட்டம் இங்கு கூடியிருந்தது.

அதில் ஒரு பெண் “ஏய்… ப்ரியா. மரண மொக்கையா இருக்கு. எங்க திரும்பினாலும் ஒரே ஓல்டீஸ். என்னடி இங்க சைட் அடிக்க ஒரு ஃபிகர் கூட இல்லையே…” என நொடிந்துகொள்ள…

“நான் என்ன பண்ணுவேன்… அண்ணி தம்பி காலேஜ்ல படிக்கிறான். சரி அவன் ஃபிரண்ட்ஸ் அப்படி இப்படின்னு கொஞ்சம் ஜாலியா உங்களுக்கு டைம் பாஸ் ஆகும்னு நெனச்சேன்… ஆனா அவன் என்னமோ நேத்தி தான் வயசுக்கு வந்த மாதிரி வெளியவே வரமாட்டேங்கறான்”

அதற்கு மற்றொரு பெண் “ஏன் நீயும் பாத்ததில்லையா அவனை?” என கேட்க… “நானே இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் இங்க வரேன். இதுல அவனை எங்க பாக்க” என்று சொல்லும்போது… அந்த ஒற்றை அறையில் இருந்து ஒருவன் வெளியே வந்தான்.

அனைவரின் கண்களும் அவனை நோக்க, கையில் ஒரு பையுடன் அந்த அறையை பூட்டி, இவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு அவன் அங்கிருந்து நகர, “இவன் யாருடி? ஹ்ம்ம்… பாக்க சுமாரா இருக்கான்” என்றாள் முதலில் பேசிய பெண்.

காலையில் கவிதாவுடன் பேசும்போது இவனை கையில் காபி ட்ரேவுடன், பின் கவிதாவின் சித்தப்பா கடையில் வேலை செய்பவனும் இவனும் சேர்ந்து வந்தவர்களுக்கு காபி ஜூஸ் என தரும்போது அவனை பார்த்திருந்தாள் ப்ரியா.

அதுவும் இப்போது அவன் கையில் ஒரு மூட்டை இருந்ததைப் பார்த்து… “வேல செய்ற பையனா இருப்பான். இவன் உனக்கு சுமாரா இருக்கானா? உன் டேஸ்ட் ஏன் இவ்ளோ மட்டமாயிடுச்சு” என்றாள் ப்ரியா நக்கலாக.

அப்போது தான் அங்கிருந்து சென்றவன், படி இருங்குவர்தற்குள் இவர்கள் பேசும் பேச்சை கேட்டு திரும்பிப் பார்த்தான். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ப்ரியா.

“நம்ம பேசினதை கேட்டிருப்பானோ…” என்று கொஞ்சம் கலக்கத்துடன் ஒரு பெண் கேட்க… “அவன் யாருனே தெரியாது. நீ ஏன் ஃபீல் பண்ற” என்று அந்த பேச்சை முடித்தாள் ப்ரியா.

பின் அந்த கூட்டம் கொஞ்சம் நேரம் அங்கேயே இருக்க… சில சடங்கை செய்ய ப்ரியா அழைக்கப்பட்டாள்.

“பொண்ணோட தம்பிய அழச்சு இத மாப்பிள்ளைக்கு போட்டுவிட செல்லுங்க. மாப்பிள்ளையோட தங்கையை பொண்ணுக்கு நலுங்கு வைக்க சொல்லுங்க” எனும்போது… ப்ரியாவும் அங்கே வர, மேலே பார்த்தவன் இப்போது அகிலன் அருகில் சென்றான்.

ப்ரியா கொஞ்சம் திடுகிட்டு “ஆஹ்… இவனா அண்ணியோட தம்பி இளஞ்செழியன்” என்ற யோசனையுடன் கவிதா அருகில் செல்ல, இளஞ்செழியனும் இசைப்ரியாவை பார்த்தான்!

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved