என்னுள் நீ வந்தாய் – 12

என்னுள் நீ வந்தாய் – 12:

“அம்மா கராஜ் சாவி எங்க இருக்கு?” அகிலன் கேட்க…

“பைக் கராஜ்லயா??? கார் அபார்ட்மெண்ட் பார்க்கிங்ல நிறுத்திருக்கான். பைக் கராஜ்ல. சப்பா. எதையும் சரியா செய்ற பழக்கமே இல்ல போல. நட் கழண்ட கேஸ்” என முணுமுணுக்க…

“பேபி கிளம்பலாமா?” என்ற அகிலனின் குரலில் அவனை முறைத்துக்கொண்டே கிளம்பினாள்.

“என்ன பேபின்னு கூப்பிடாதன்னு எத்தனை தடவ சொல்றது” அவன் மேல் எரிந்து விழ… அவன் கண்டுகொண்டால் தானே. காதில் விழாததுபோல சென்றான். கடுப்புடன் அவன் பின்னாலயே சென்றாள் கவிதா.

அந்தக் கம்யூனிடியில் இருக்கும் வெகு குறைவான டூயுப்ளக்ஸ் பெண்ட்ஹவுஸ் (duplex penthouse) அபார்ட்மெண்டிற்க்கு மட்டுமே தரும் கராஜ் அது. சலிப்புடன் அவன் பின்னால் சென்றவள் அவன் கராஜ் திறந்தவுடன் உள்ளே பார்த்து விழிவிரித்து நின்றாள்.

கிட்டத்தட்ட ஏழு வகை பைக்’குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு விதம். பேசிக் (basic) மாடல் முதல் சில உயர் ரக மாடல் வரை இருந்தது. அவன் வைத்திருக்கும் காரின் விலையைவிட மொத்த பைக்கின் விலை அதிகமாக இருக்கும்.

அவள் மனதில் முதலில் தோன்றியது… ‘அவன் ரூம் போலவே கராஜ் கூட நீட்டா வெச்சுருக்கானே’ என்பது தான். ஏனென்றால் அவளுக்கு சுட்டுப்போட்டாலும் சுத்தம் என்பது சுத்தமாக வராது.

“பேபி… எந்த பைக்ல போலாம்? சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்றவுடன்…

‘இப்போ சொல்லலைனா விடமாட்டான். எதையாச்சும் காட்டுவோம்’ என்று நினைத்தவள் … அங்கிருந்தவற்றில் ஒவ்வொன்றாகப் பார்த்து, இருப்பதிலேயே மிகவும் சாதாரணமாக இருந்த RX100 பைக்கை காட்டினாள்.

மிகவும் பழைய மாடல் பைக். குறைவான CC. சுருக்கமாக அவள் மனதில் தோன்றியது ‘மொக்க பைக்’. அப்படி யோசித்து அவள் சொல்ல… அவளின் மனநிலை புரியாதா அவனுக்கு. புன்னகைத்துக்கொண்டே சரி என்றான்.

அவன் எடுத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவள் அவனிடம் ‘மேடு பள்ளம் பார்த்து ஓட்டணும்’ என எச்சரிக்கைக் கொடுக்க வாயைத்திறக்கும்முன்…

“பேபி. ஒழுங்கா பேக்ரெஸ்ட் பிடிச்சுட்டு உட்காரு. அப்புறம் ஸ்பீட் ப்ரேக்கர், மேடு பள்ளத்துல வேணும்ன்னு வேகமா போன… இடிச்சிட்ட… அப்படின்னு என்கிட்ட சண்டைக்கு வராத” குறும்புடன் முன் ஜாமீன் வைத்தான்.

கடுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டாள் கவிதா. கண்களை மூடி தன்னைத் தன்னிலைப்படித்துக்கொண்டு பின்னே உட்கார்ந்தாள்.

வற்புறுத்தி அவளின் லேப்டாப் பேக் மற்றும் ஹாண்ட் பேக்கை வாங்கி முன்னை வைத்துக்கொண்டான் அவள் இடைஞ்சலின்றி உட்கார ஏதுவாக.

மறுபடியும் அவனின் இந்த அக்கறையின் வெளிப்பாடு அவளைக் கொஞ்சம் குளிரச்செய்தாலும், அதைப் புறம் தள்ளினாள். அவளைக் கடுப்பேற்றினாலும் ஏற்ற இறக்கங்களிலும் கூட சீராகச் சென்றான்.

சில நிமிடங்கள் கழித்து “பேபி… நீ இந்த பைக் இருக்குறதுலயே பேசிக்’னு தானே ச்சூஸ் பண்ண. பட் திஸ் இஸ் சோ க்ளோஸ் டு மை ஹார்ட். என்னோட முதல் பைக். நான் டென்த்ல ஸ்கூல் ஃபரஸ்ட் வந்தா அப்பா செகண்ட் ஹேண்ட் RX100 வாங்கித்தரேன்னு சொன்னாரு”

“அதுக்காகவே நல்லா படிச்சு டிஸ்ட்ரிக்ட் செகண்ட் (district second) வந்தேன். லோன் போட்டு அப்பா வாங்கித்தந்தாரு” என நெகிழ்ச்சியாகச் சொல்லிவிட்டு கண்ணாடி வழியே அவளைப் பார்க்க…

அவள் காதில் இயர்செட் (earset) மாட்டிக்கொண்டு எதையும் கேட்காதவள் போல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள்.

அவன் முகம் வாடிப்போனது. ஆசையாக அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை என்ற வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஆனால் அவனுக்குத் தெரியாதது…

அவள் மனதில் ‘படிப்ஸ் தான் போலயே. என்ன… இந்த மாதிரி ஆளுங்க அதிகம் பேச மாட்டாங்க. இவன் மில்க் டின்ல போட்ட கோலிக்குண்டு மாதிரி லொட லொடன்னு’ என நினைத்து அவனுக்குத் தெரியாமல் சின்னதாகப் புன்னகைத்தது.

அவன் வாயாடினாலும், சிரத்தை எடுத்துக் கவனமாக வண்டியை ஓட்டியது, இவனுடன் பைக்கில் சென்றால் கூட தயக்கமின்றி செல்லலாம் என்றே தோன்றியது அவளுக்கு.

ஒருவழியாக அன்றைய தினம் முடிந்து அடுத்தநாள்… கவிதாவிற்கு கிளைன்ட்’டுடன் ஒரு முக்கியப் பேச்சுவார்த்தை மற்றும் ப்ரெசென்ட்டேஷன் இருந்தது. எப்பொழுதும் போல் காலை வேலையை மாமியாருடன் செய்துவிட்டு, தயாராக அவர்கள் அறைக்குள் வந்தாள்.

அவன் கிளம்பிக்கொண்டிருந்தான். இவள் உடையை மாற்றி வெளியே வந்தபோது அவன் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தயாராகிக்கொண்டிருக்க … அவன் முன்னே பின்புறம் காட்டி நின்று “தள்ளுப்போ. நான் ரெடி ஆகணும்” என்றாள் கண்ணாடியில் அவனைப் பார்த்து.

கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவன், கண்கள் அகலக் கண்ணிமைக்காமல் அப்படியே நின்றான்.

அழகான ஒரு ஃபோர்மல் (formal) உடையில் இருந்தாள். வைட் த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் ஷர்ட் (White three fourth sleeve shirt) மற்றும் முட்டிக்குக் கீழ்வரை இருந்த ப்ளாக் ஸ்கர்ட். அவளின் உயரம். நேர்த்தியான உடற்கட்டு. அவளுக்கு அந்த உடை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

அவளை மேலும் கீழும் பார்த்தவனை “ஹலோ. போய் உட்காருங்க சார். அஞ்சு நிமிஷம் தான்” என்றதும் கண்கள் மின்ன அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்தான். கண்கள் மட்டும் அவளைத் தொட்டு தொட்டு மீண்டது.

“என்ன பேபி இன்னைக்கு ஸ்பெஷல்” அவளைப் பார்த்தவண்ணம் கேட்க… அவளோ முடியைத் தூக்கி போனிடெய்ல் போட்டுக்கொண்டு, மஞ்சள் கயிற்றுத் தாலியை கழட்டி வைத்துவிட்டு… கொஞ்சமே கொஞ்சம் மேக் அப் செய்துகொண்டாள்.

முழுதாக ஒப்பனை முடித்தபின் “எனக்கு முக்கியமான மீட்டிங். ப்ரெசென்ட்டேஷன் இருக்கு. புது ப்ராஜெக்ட்…” என சொல்லிக்கொண்டிருந்கும் போது கீழிருந்து லட்சுமி அவளை அழைத்தார்.

“சீக்கரம் ரெடி ஆயிடு. கொஞ்சம் ரிப்போர்ட் வாங்கவேண்டியிருக்கு” அவனிடம் சொல்லிக்கொண்டே வெளியே சென்றுவிட்டாள்.

அவன் மனமோ அவளையே சுற்றிக்கொண்டிருக்க… குதூகலமாக அதேசமயம் அவசரமாகக் கிளம்பினான். ஏதேதோ ஆசைகள் மனதில் அலைமோதியது. ஆனால் அதெல்லாம் நினைக்க மட்டுமே முடியும் என்று தெரியுமே அவனுக்கு.

மனைவியிடம் ஆசையாக நான்கு வார்த்தை பேசக்கூட முடியாது. பிறகுதானே மற்றதெல்லாம். மனது கொஞ்சம் சஞ்சலமடைந்தாலும் ஏதேனும் தவறான செயலுக்கு வழிவகுத்துவிடும் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

இப்போது அவனால் முடிந்தது அவளுடன் தனியாகச் செல்லும் அந்த கார் பயணம் மட்டுமே.

அவன் ஷர்ட் சரி செய்துகொண்டிருக்கும் போது, கோபமாக உள்ளே வந்தாள் கவிதா. வந்தவள் கையிலிருந்த போனை தூக்கிக் கட்டிலில் எறிந்துவிட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் பக்கத்தில் இருந்த வாட்ரோப்’பிலிருந்து வேறு உடையை எடுத்துக்கொண்டு உடைமாற்ற சென்றுவிட்டாள். கண்கள் வேறு கலங்கியிருந்தது.

ஒன்றும் புரியாமல் அவன் நின்றிருக்க, குர்தி லெக்கின் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்.

“என்ன ஆச்சு பேபி?” புரியாமல் அவன் கேட்க, அவள் பதில் பேசாமல் கலைந்திருந்த கூந்தலை மறுபடியும் சரிசெய்துகொண்டாள்.

தாலியை எடுத்துப் போட்டுக்கொண்டு, பதில் எதுவுமே பேசாமல் தன்னுடைய பேக்’கில் தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

கண்கள் மட்டும் சிவந்திருந்தது. அழுகையைக் கட்டுப்படுத்துகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

அதற்கு மேல் பேசாமல் இருவரும் புறப்பட்டனர். இருவரும் தயாராகி வெளியே செல்லும்போது, அங்கு வந்த லட்சுமி “இதுமாதிரி டிரஸ் போட்டா எவ்வளோ நல்லா இருக்கு. தாலிய இருக்குல்ல… ஹ்ம்ம்” என்றவுடன்,

கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்துவிட்டு, ஒட்டவைத்த புன்னகையுடன் வெளியேறினாள். அவனுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது என்ன நடந்திருக்கும் என்று.

அவன் அம்மாவை ‘ஏன்’ என்பது போல் சைகையால் கேட்டுக்கொண்டே அவளுடன் சென்றான்.

அவள் நடையே காட்டியது… நல்ல அர்ச்சனை அவனுக்காகக் காத்திருக்கிறது என்று…

 

 

காரில் ஏறியவுடன் எதுவும் பேசாமல் சாய்ந்து கண்கள் மூடி உட்கார்ந்திருந்தாள்.

“அம்மா என்ன சொன்னாங்க?” காரை ஓட்டிக்கொண்டே அகிலன் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தாள். பின், பதில் பேசாமல் ஜன்னல் புறம் திரும்பிக்கொள்ள “சொல்லு என்ன சொன்னாங்க?” என மறுபடியும் கேட்டான்.

“ஹ்ம்ம்… எதுக்கு கால் தெரியுற மாதிரிலாம் டிரஸ்? பாக்கறவங்க என்ன நினைப்பாங்க… தாலிய உள்ள மறச்சு வெச்சுருக்கியா இல்ல கழட்டி வெச்சுட்டுயா? இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு தான் வேலைக்குப் போக வேணாம்னு சொன்னேன்ன்னு சொன்னாங்க… போதுமா?” என்று மிகுந்த கோபத்துடன் கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்.

அவனுக்கு என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிக்க…

அவன் முகம் பாராமல் “என்னால முடியல. ஒரு டிரஸ் அதுக்கு… நீயே சொல்லு அந்த ட்ரெஸ்க்கு தாலி கயறு எப்படி இருக்கும்ன்னு? செயின்னா கூடத் தெரியாது. தடியா மஞ்சக் கயிறு… வைட் ஷர்ட்’க்கும் அதுக்கும் அப்பட்டமா தெரியும்”

“இதே மைண்ட்செட்ல நான் எப்படி நல்லா ப்ரெசென்ட்டேஷன் குடுக்க முடியும்? மூணு மாசம் ஹார்ட் வெர்க்” இப்போது கண்கள் நன்றாகவே கலங்கி இருந்தது.

“புரிது. ஐம் சாரி. நான் அம்மாட்ட பேசறேன். இதுனால இனி பிரச்சனை வராம பாத்துக்கறேன்” அவளைப் பார்த்து சொல்ல

“ஏன் இதை வெச்சு இன்னும் என்ன அவங்க பேசவா? போதும் டா சாமி. இந்த கல்யாணத்துனால வெறும் ஸ்ட்ரெஸ் மட்டும் தான் எனக்கு மிச்சம்… எந்த வகைலயுமே சந்தோஷமில்லாத வாழ்க்க. நிம்மதியே போச்சு. இதே மாதிரி போனா பைத்தியமா தான் சுத்துவேன்”

கலங்கிய கண்களுடன் சொல்லிவிட்டுத் திரும்பிக்கொள்ள, அவன் முகத்தில் அடிபட்ட வலி. எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் ஓட்டிக்கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து அவன் முகம் பார்த்தாள். அதுவே காட்டியது அவன் நிலைமையை.

அவளை மிகவும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும்… அவள் எதற்கும் வருந்தக்கூடாது என்று அவன் நினைத்து ஒன்றொன்றும் செய்ய, ஏதொ ஒன்று இது போல் நடந்துவிடுகிறது.

பல நிமிடங்கள் இருவரிடையே கனத்த மௌனம் நிலவ…

‘எப்போதும் ஏதாவது பேசுபவன், அமைதியாக வருகிறான் என்றால் தான் சொன்ன அந்த வரிகளால் தான்… அவன் எந்தத் தவறும் செய்யவில்லையே…’ என நினைத்து “ஐம் சாரி” என சொல்லிவிட்டு மறுபடியும் திரும்பிக்கொண்டாள்.

அந்த மனநிலையிலும், அவள் கேட்ட ஒரு மன்னிப்பில் என்ன உணர்ந்தானோ, புன்னகை மறுபடியும் ஒட்டிக்கொண்டது அவன் முகத்தில்.

“இத எதையும் யோசிக்காத பேபி. அம்மா கொஞ்சம் பழைய டைப். அவங்களுக்கு நான் புரிய வைக்கறேன். ஐ நோ… நீ கண்டிப்பா நல்லா பண்ணுவ. ஜஸ்ட் ரிலாக்ஸ்” என புன்னகைத்தான்.

ஏனோ அந்த ஒரு புன்னகை அவளுக்கு அப்போதிருந்த மனநிலையை மாற்றியது. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.

“உனக்கு மஞ்சள் கயிறு அனீஸி’யா (uneasy) இருந்தா கார்’லயே கழட்டி வச்சுடு பேபி. எனக்கு இதுல பெரிய நம்பிக்கையெல்லாம் இல்ல”

“முழுநேரமும் தாலி கழுத்துல இருந்தும் வாழ்க்கைல பிரிஞ்சவங்க இருக்காங்க… தாலி கட்டிக்காம இன்டெர்காஸ்ட் மேரேஜ் பண்ணிட்டவங்க சந்தோஷமாவும் இருக்காங்க. இதெல்லாம் மனச பொறுத்தது. உனக்கு என்ன விருப்பமோ அத செய்” என்றான் காரை ஓட்டிக்கொண்டே.

சில நிமிட மௌனத்திற்குப் பின், அவள் அலுவலகம் நெருங்கும்போது… “எனக்கு கயிறை மாத்திட்டு தாலிய செயின்ல போட்டுகுடுக்க சொல்லு. அது போதும்” என்றாள். அவன் சரி எனத் தலையாட்டினான்.

அவள் அலுவலகமும் வர, அவன் “ஆல் தி பெஸ்ட்” என்றான்.

எதுவும் பேசாமல் இறங்கி சென்றுவிட்டாள். செல்லும் அவளையே பார்த்திருந்தவன், சில நிமிடங்களில் அவன் அலுவலகத்துக்கு வந்தான். போனை பார்த்தபோது அவளிடம் இருந்து “தேங்க்ஸ்” குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஆஃபீஸாக மட்டும் இல்லையென்றால் சந்தோஷத்தில் குதித்திருப்பான். அவளிடம் இருந்து வந்த முதல் குறுஞ்செய்தி. பதிலுக்கு சிரிப்பது போல் ஒரு ஸ்மைலி போட்டனுப்ப, அங்கே அவள் முகமும் புன்னகைத்தது.

இருவரும் மாலை திரும்பும்போது… அவளிடம் எல்லாம் சரியாகப் போனதா என்று கேட்டுத் தெரிந்துகொண்டான்.

இரவு நேரத்தின் போது லட்சுமிக்கு கால் வலி என்பதால் கவிதாவிடம் அனைவருக்கும் தோசை செய்யச்சொல்ல, அவன் உதவ செல்ல நினைக்கும்போது, லட்சுமி தடுத்தார்.

அவன் அம்மாவைப் பார்க்க “முடியலன்னு ஒரு நாள் தானே டா அவள போடச்சொன்னேன். என்னமோ உன் பொண்டாட்டிய கொடும பண்றமாதிரி லுக் விடற. விடு நானே போறேன்.” என்று அவர் எழ… “இருக்கட்டும். நானே போடறேன் அத்த” என்றுவிட்டு உள்ளே சென்றாள் கவிதா.

அவள் தோசை சுடும்போது “அகிலுக்கு பொடி தோசை பிடிக்கும். அத போட்டு குடுத்துடு கவிதா” என்று இன்னொரு பிட்’டை போட, அவனைப் பார்த்து முறைத்தாள். அவன் திருத் திருவென முழித்தான்.

‘எவ்வளவு நேரம் தோசை போட்டுக்கொண்டு மட்டுமே இருக்கிறேன். இதில் அவனுக்குப் பொடி தோசை’ என்று நினைத்தவள் கடைசி தோசையில் கொஞ்சமே கொஞ்சம் அதிகாமாக மிளகாய் தூள், மிளகு தூள், தூவி போட்டுவிட்டாள்.

ஒரு வாய் வைத்தவுடனே அவனுக்குப் புரிந்தது. அவளைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டான். முடித்துவிட்டு உள்ளேவந்தவன், கை கழுவி, அவள் அருகில் நின்று…

“பேபி… லாஸ்ட் தோசை செம்ம. உன் கையாள போட்டதுனாலவோ என்னவோ செம்ம டேஸ்ட். இனி அதே மாதிரி போடு…” என கண்ணடித்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

‘ஆஅஹ்’ என்று கத்த வேண்டும் என்பதுபோல் இருந்தது. எது செய்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவன் இருப்பது கடுப்பானது.

‘அவள் தன்னைவிட்டால் கோவத்தை யாரிடம் காட்டுவாள்? இதுவும் ஒருவகை உரிமை தானே…’ என்று அதையும் நல்ல எண்ணத்தில் எடுத்துக்கொண்டான்.

ப்ரியாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளுக்குப் போட்டுக்கொடுத்தான். கொஞ்சம் பயத்துடனே சாப்பிட்டாள் எங்கே மிளகாய் பொடி தோசை தனக்கு வந்துவிடுமோ என்று.

வற்புறுத்தி… அதட்டி… உருட்டி பக்கத்தில் அவன் அப்பா இருந்த தைரியத்தில் இன்னொரு தோசையைச் சாப்பிடவைத்தான். இதில் எதுவும் தனக்கு சம்பந்தமே இல்லை என்று லட்சுமி டிவி முன் உட்கார்ந்துகொண்டார்.

படுக்க அனைவரும் சென்றவுடன், தன் அம்மாவின் கால்களுக்கு மருந்து போட்டு நீவிவிட்டு, இதமாகப் பிடித்துவிட்டான். சின்ன வயதில் இருந்து அவன் செய்வதே. அவருக்கு மட்டும் இல்லை. அப்பாவிற்கும்… ப்ரியாவிற்கும் கூட…

மெதுவாக அவன் பேச நினைத்ததை பேச ஆரம்பித்தான்.

“அம்மா… அடுத்தவங்க போடற டிரஸ்ஸ வெச்சு அவங்கள தப்பா நினைக்கிறவங்க பார்வை தாம்மா தப்பு. அவங்கள பத்தி நாமே ஏன் கவலைப்படணும்?” என்றான் காலைப் பிடித்துவிட்டுக்கொண்டு.

“என்ன போட்டு குடுத்துட்டாளா உன் பொண்டாட்டி” என அவர் சீற “நான் வற்புறுத்தி கேட்டதால சொன்னாம்மா. அவ வேல அப்படி… ஏன் இந்த கம்யூனிடில எத்தனை பேர் இதுபோல டிரஸ் போடறாங்க. உன் ஃபிரண்ட் தங்கச்சி கூட அப்படித்தானே. இதெல்லாம் பெருசு பண்ண வேணாமேம்மா” என பொறுமையாகப் பேசினான்.

“அவ போடற ட்ரெஸ்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல அகில். ஆனா அதுக்காகத் தாலிய கழட்டி வெச்சுட்டுப் போறதெல்லாம் தப்பு. உடனே அதுக்கு ஏதாச்சும் விளக்கம் கொடுக்காத. அதெல்லாம் ஏத்துக்கற அளவுக்கு எனக்கு நவ நாகரிகம் இல்லனே வெச்சுக்கோ. எனக்குக் கவலயில்லை”

“நான் இல்லாம இருக்கப்ப எப்படியோ இருங்க. எனக்கு அது தேவையே இல்ல” என்றார் வெடுக்கென்று.

“ஹ்ம்ம். எப்போ தாலியெடுத்து செயின்ல போடப்போறோம்? நாளைக்கி போட்டுடலாமா?” என அவன் கேட்க “அதுக்கெல்லாம் நேரம் பாக்கணும். செயின் எடுக்கணும்… தாலி தாங்கற அளவுக்கு” என்றார்.

“அவளோட இப்போ இருக்குற செயின்லேயே போட்டுடலாம். அத அவ எல்லா ட்ரெஸ்க்கும் போட்டுக்குவா” என்றவுடன் “இதெல்லாம் சரியில்ல அகில். நீ ரொம்ப இடம் குடுக்கற அவளுக்கு. ஆனா அவ???” என நிறுத்தி

“இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ” என்று வருத்தப்பட, அவன் அப்பா அவனிடம் ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்றார் கண்களாலேயே.

அறைக்கு வந்தவன் பால்கனியில் அவள் நின்றிருப்பதைப் பார்த்தான். ரைலிங்கில் சாய்ந்து… கைகளைக் கட்டிக்கொண்டு, வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்டிப்பாக இன்று நடந்ததைத் தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என நம்பினான்.

அவளும் தன் வாழ்க்கையைப் பற்றித் தான் நினைத்துக்கொண்டிருந்தாள்.

அவள் அருகில் நின்று அவளுடன் கைகோர்த்து, இதே வானத்தை மனநிறைவுடன் பார்க்கத்தான் அவனுக்கும் ஆசை… இப்போது முடியாதே… அதற்கான நேரம் எப்போது வரும்… வருமா? என யோசித்துக் காத்திருந்தான்…

———இன்று———

இப்போது அவன் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான். இடம் தான் வேறு.

ஆனால் மனநிலை? அன்றிருந்ததை விட மிகவும் நொடிந்துவிட்டது . அவள் அஜய்யுடன் செல்ல விரும்பினாலும் தனக்கு சம்மதம் என்று வெளியில் சொன்னாலும்… அதை மனம் ஏற்றுக்கொள்ளுமா?

‘இனி காத்திருப்பு மட்டும் தான் வாழ்க்கையோ?’ என்ற எண்ணம் வேறு வாட்டியெடுத்தது…

9
1
1
1
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved