தனிப்பெரும் துணையே – 19A

தனிப்பெரும் துணையே – 19A

இருவர் முகத்திலும் ஒரு சின்ன ஆசை, தவிப்பு. இத்தனை நாட்களில் இதுபோல உணர்வுகளுக்கு அதிகம் ஆட்படாமல் இருந்தார்கள். இப்போது உரிமையின் எல்லை அதிகரிக்க, அவர்களுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்.

“நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்” தயக்கத்துடனும் தவிப்புடனும் சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட, ப்ரியாவிற்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது அவளுடைய உடை கீழே இருக்கிறது என்று.

‘இவன் வேறு உள்ளே சென்றுவிட்டான், என்ன செய்வது’ என்ற யோசனையுடன் மழையிலே நின்றாள்.

உடை மாற்றாமல் வெளியே வந்த செழியன், “மழைலயே நிக்காத இசை. உடம்புக்கு வந்துடும். இங்க வா” என்று அழைத்து, “உன் டிரஸ் எதுவும் இங்க இல்லைல. இப்போ கீழ போக வேணாம். இந்தா டவல். அப்புறம் இந்த டிரஸ் மாத்திக்கோ. பாத்ரூம்ல போய் மாத்திக்கோ” என அவனுடைய ஒரு உடையை கொடுத்தான்.

அவள் முகத்தில் புன்னகை. எட்டி அவன் கன்னத்தில் ஒரு சின்ன முத்தத்தை கொடுத்த ப்ரியா, “தேங்க்ஸ் இளா” என்று சொல்லிவிட்டு அதே புன்னகையுடன் சென்றுவிட்டாள்.

செழியன்தான் அப்படியே விழி விரித்து நின்றான். கை தானாக அவள் இதழ் பட்ட இடத்தை தொட்டு பார்க்க, அவன் முகத்திலும் புன்னகை.

முன்பு அவன் உடையை அவள் உடுத்திய போது இருந்த தயக்கம் இப்போது இல்லை அவளிடம். உடை மாற்றிக்கொண்டு அவள் உள்ளே வர, அவனும் உடை மாற்றிவிட்டு அறையை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான்.

“என்ன இளா இதெல்லாம். ரொம்ப பழசா இருக்கே” என கேட்டபடி அவன் பக்கத்தில் வந்து பார்க்க, “பழைய புக்ஸ் இசை. நான் எதையுமே டிஸ்க்கார்ட் (discard) பண்ண மாட்டேன். என்னோட KG புக்ஸ் கூட இருக்கு” புன்னகைத்துக்கொண்டே பெட்டியில் அடுக்கி வைத்தான்.

அனைத்தையும் மேல் அடுக்கில் வைத்துவிட, அலமாரியில் ஒரு போட்டோ இருந்தது.

“ஆண்ட்டியா? அழகா இருக்காங்க” கேட்டபடி அவள் எடுக்க, “ஹ்ம்ம்” மிகவும் குறைந்த குரலில் பதில் தந்தான்.

அவள் திரும்பிப்பார்க்க, அவன் புன்னகைக்க முடியாமல் புன்னகைத்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

“ஸாரி இளா” அவள் சொன்னதும், “ஹே எதுக்கு ஸாரி. நீ டையர்ட்டா தெரியற. படுத்துப்போமா” என்று அவன் படுக்கையை சரி செய்தான்.

அவளுக்காக புது படுக்கை என அனைத்தையும் மாற்றியிருந்தான் செழியன்.

அவளுக்குப் படுப்பதில் இப்போது விருப்பம் இல்லை என்பதுபோல, “இந்துமதி பத்தி சொல்றேன்னு சொன்னியே இளா. இப்போ சொல்லு” நன்றாக சம்மணமிட்டு அவள் படுக்கையில் உட்கார்ந்தபடி கேட்டாள்.

செழியன் திருமணத்திற்கு கணவன் குழந்தையுடன் இந்துமதி வந்திருந்தாள். அவள் வருவாள் என்று நினைக்கவே இல்லை செழியன். அவன் நண்பர்கள் என்று வந்தது அவளும், மற்றொரு கல்லூரி நண்பனும் மட்டுமே. அப்போது இந்துமதி குறித்து சொல்கிறேன் என்று சொல்லியிருந்தான்.

ஒரு பக்கமாக படுக்கையில் படுத்தவன், இந்துமதியை பார்த்தது, பின் அவளுக்கு திருமணம் ஆனது என அனைத்தையும் சொன்னான்.

“நீ ரிசல்ட் பத்தி கேட்டப்ப சொன்னேனே, ப்ராஜக்ட் மார்க் குறைஞ்சுடுச்சுன்னு? ஒரே ஸ்ட்ரெஸ்ட் ஆஹ் இருந்தேன் இசை. நான் நல்லா பேசுற அக்கா, இந்துமதி ரெண்டு பேரும் ஒரே சமயம் என்னை விட்டுட்டு போனது, அவங்க லைஃப். எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரி ஆயிடுச்சு” விட்டத்தைப் பார்த்து சொன்னான்.

அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த ப்ரியா, “சரி அதான் இப்போ உன் அக்காவும் இந்துமதியும் சந்தோஷமா இருக்காங்களே. மார்க் அதுல போனா என்ன இளா, மாஸ்டர்ஸ்ல சேர்த்து வச்சு எடுத்துட்டயே” என்றவுடன், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

ப்ரியா மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க திடீரென, “இளா அந்த சிவா இருக்கானே, அவனுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுபோல. எஃபில அப்டேட் பண்ணிருக்கான்” ப்ரியா சொன்னதும், “யாரு?” என்று புரியாமல் பார்த்தான்.

“அதான் அந்த அமெரிக்கா செட்டில்ட். வீட்ல மொதல்ல பார்த்தாங்களே” என்றாள்.

“ஓ” என்றவன், சில நொடிகள் மௌனத்திற்கு பின், “நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே இசை?” அவன் கேட்டவுடன், இப்போது ப்ரியா புரியாமல் பார்த்தாள்.

“உனக்கு ஏதாச்சும் வேணும்னா, இனி என்கிட்ட கேளு ப்ளீஸ். ஏதாவது வழி பண்ணி நம்மளே மேனேஜ் பண்ணிடலாம். பட் வீட்ல கேட்காத. ஏற்கனவே அப்பா அன்னைக்கு, நான் சரியா சம்பாதிக்கல. உன்னை நான் நல்லா பார்த்துக்கறது கஷ்டம். அந்த அமெரிக்கா பையனுக்கே கல்யாணம் பண்ணிடுங்கன்னு பேசினது ரொம்ப சங்கடமா இருந்துச்சு”

அவன் கொஞ்சம் தயங்கி சொன்னவுடன், ‘அன்று அவன் மனநிலை எப்படி இருந்திருக்கும், யாருக்குமே அது தன்மான பிரச்சனைதானே’ என்று புரிந்த ப்ரியா, அவன் அருகில் படுத்துக்கொண்டு,

“நான் அன்னைக்கே பேசியிருப்பேன் இளா. பட் அப்போ நான் ஏதாச்சும் சரியா பேச தெரியாம பேசி வச்சு, புதுசா ஏதாச்சும் ப்ராப்ளம் வந்துடுமோன்னுதான் பேசல. எல்லாம் நல்லபடியா முடியணும்னு கொஞ்சம் சுயநலமா யோசிச்சுட்டேன் ஸாரி.

அம்மா கூட சொன்னாங்க. நீ கல்யாணத்துக்குச் செயின், ரிங், பிரேஸ்லெட் எதுவும் வேணாம்னு சொல்ற. உன்கிட்ட பேச சொல்லி சொன்னாங்க. நான் அவனுக்கு வேணாம்னா விட்டுடுங்கன்னு சொல்லிட்டேன். அப்புறம் அக்கௌன்ட்ல பணம் போடறோம் செலவுக்குனு வீட்ல சொன்னாங்க. அது கண்டிப்பா உனக்கு கஷ்டமா இருக்கும்னு தெரியும்… வேணாம், நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லிட்டேன்” என்றாள்.

அவன் முகத்தில் புன்னகை. ‘தன்னை பற்றி எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறாள்’ என நினைத்து, “தேங்க் யு” என்றான்.

“இரு இன்னும் முடிக்கல. என் கல்யாணத்துக்குன்னு சேர்த்து வச்ச பணம்னு சொன்னாங்க. அவங்களையும் கஷ்டப்படுத்த மனசில்லை. சோ அதை எஃப்டில போட்டு குடுத்துடுங்க, நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். நம்ம அதை எடுக்க வேண்டாம். ஒகேதானே” அவள் அவனைப் பார்க்க, அவள் முகத்தில் புரண்ட கூந்தலை காதுக்கு பின் தள்ளி, “அது உனக்கு அவங்க பண்றது. அதைத் தடுக்க எனக்கு உரிமை இல்ல” என்றான் புன்னகையுடன்.

பின் அவன், “அப்புறம் நீ படிச்சு முடிச்சிட்டு கரியர் பர்சியூ (career pursue) பண்ணணும் இசை. இவ்ளோ படிச்சது வீணாகக்கூடாது. ஸெல்ஃப் இண்டிபெண்டன்ஸ் இஸ் மோர் இம்பார்ட்டண்ட் (self independence is more important). யார் இருந்தாலும் இல்லைனாலும், உன்னோட படிப்பு, வேலை உன் கூடவே உனக்குத் துணையா இருக்கும்” அவன் சொன்னவுடன், கண்கள் கலங்கியது ப்ரியாவிற்கு.

நீட்டியிருந்த அவன் கைகளில் வந்து அவனிடம் ஒடுங்கிக் கொண்டாள்.

“ஹே என்னாச்சு இசை” அவன் கேட்டவுடன், கண்களில் கண்ணீர் கோர்க்க, “அம்மா சொன்னாங்க இளா. வேலைக்கு போறேன்னு அடம் பண்ணாத. கல்யாணம் ஆனா பொண்ணுங்களுக்கு வீடுதான் முதல் ப்ரையாரிட்டி, வீட்டை பார்த்துக்கோ வேலை எல்லாம் வேணாம்ன்னு சொன்னாங்க. நானே உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்”

“ஹ்ம்ம் தெரியும் இசை என்கிட்டயும் சொன்னாங்க. அப்போ ஆர்கியூ பண்ண வேணாம்னு விட்டுட்டேன். உன்கிட்ட பேசிக்கலாம்னு இருந்தேன். நம்ம வீட்டை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துப்போம்”

சேர்ந்து என்ற வார்த்தையில் அழுத்தம் தந்து அவன் சொன்னவுடன், கலங்கிய கண்களுடன் புன்னகைத்தாள்.

சில நொடிகளுக்கு பின், “அப்புறம் இளா” அவள் கொஞ்சம் தயங்கி, “படிச்சு முடிக்கறவரை, அந்த விஷயத்துல நம்ம கொஞ்சம் சேஃப்பா இருந்துப்போமா” மறைமுகமாக கேட்க, “நீ சொல்லவே வேணாம். எல்லாம் நம்ம கைலதான் இருக்கு, பார்த்துப்போம்” என்றான் புன்னகை முகம் மாறாமல்.

அவன் கைவளைவிற்குள் அவள். அவளை அணைத்தபடி அவன். இருவரும் சிறிது நேரம் அப்படியே வாழப்போகும் வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பற்றி பேசினார்கள்.

பின் தூக்கம் வருகிறது என்று சொல்லி அவள் அப்படியே தூங்க, அவளைப் பார்த்தபடி அவனும் தூங்கிவிட்டான்.

அடுத்தநாள், கிட்டத்தட்ட மதியம் நெருங்கும் போதுதான் அவன் எழுந்தான். ப்ரியா அப்போதும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் முழித்தவனுக்கு கனவு போல இருந்தது. மெதுவாக அவள் ஏழாவண்ணம் நெற்றில் இதழ் பதித்துவிட்டு வெளியில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

வெளியே கவிதா, மொட்டை மாடி கதவை தட்டி தட்டி திறக்கப்படாமல் போக, மெதுவாக தள்ளினாள் கதவு திறந்தது.

செழியன் அறைக்கதவும் திறந்திருக்க, “செழியா” என குரல் கொடுத்தாள். குளியல் அறையில் இருந்து அவன் குரல் கேட்டது.

அறைக்கதவைத் தட்டிக்கொண்டே கவிதா ப்ரியாவை அழைத்தவுடன், தன் வீடு என நினைத்த ப்ரியா, “குட் மார்னிங் அண்ணி” சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்தாள்.

கவிதா அவளைப் பார்த்து புன்னகைக்க, அப்போதுதான் சுற்றி பார்த்தாள் ப்ரியா. பின் தன்னை பார்த்தாள். செழியன் உடையில் இருந்தது அப்போதுதான் உறைத்தது.

அவள் முகம் வெட்கத்தைக் காட்ட, “உன் டிரஸ் எல்லாமே கீழ இருந்துச்சு. அத்தை வேற நீ எந்திரிக்கலன்னு உன்னை எழுப்ப அனுப்பினாங்க” என்று ப்ரியாவின் உடையை கொடுக்க, அது புடவை.

“ஐயோ அண்ணி. மறுபடியும் புடவையா” சலித்தபடி கேட்டாள் ப்ரியா. “அத்ததான் குடுத்தாங்க” என்று சொல்லும்போது செழியன் வந்தான்.

“இந்த அம்மாவ…, அண்ணி நீங்க இங்கயே இருங்க. நான் குளிச்சிட்டு வந்துடறேன். கட்டி விடுங்க” என்று அவள் அவசரமாக குளியல் அறைக்குள் சென்று விட்டாள்.

“ஏன்க்கா, வேற டிரஸ் குடுக்கலாம்ல பாவம்” புன்னகையுடன் அவன் கேட்க, “நான் என்ன பண்ணுவேன், அவங்கதான் குடுத்தாங்கடா” என்று இருவரும் கொஞ்ச நேரம் பேசினார்கள்.

கவிதாவும் ப்ரியாவும் உள்ளே புடவை கட்டிக்கொண்டிருந்தனர். செழியன் வெளியில் காத்திருந்தான்.

‘இவர்களை இன்னமும் காணவில்லையே’ என்று அகிலனும் மேலே வந்தான் கையில் காபி ட்ரேயுடன்.

செழியன் வெளியில் நிற்பதை புரியாமல் அகிலன் பார்க்க, “அக்கா உள்ள சாரீ கட்டிவிட்டுட்டு இருக்காங்க” என்றான் கொஞ்சம் தயங்கி.

“அம்மா, அப்பா பக்கத்துல கோவிலுக்கு போயிருக்காங்க செழியா. மாமாவும் கூட போயிருக்கார். எதுவும் சாப்பிடாம இருக்கீங்களே ரெண்டு பேரும். டீயும் ஆறிடும்னு எடுத்துட்டு வந்தேன். ப்ளாக் டீதானே” என்று புன்னகையுடன் அகிலன் அவனுக்குத் தந்தான்.

செழியனுக்கு ஏதோ ஒரு நல்ல உணர்வு மனதினுள். இதுபோல சொந்தமெல்லாம் அவன் பார்த்ததில்லை, பழகியதில்லை.

அப்போது சரியாக ப்ரியாவும் கவிதாவும் வெளியே வந்தனர்.

அகிலன் ப்ரியாவுக்கும் டீயை கொடுத்து, “அம்மா வர்றதுக்குள்ள வந்துடுங்க. இல்ல திட்டு விழும் ப்ரியா” புன்னகையுடன் கவிதாவை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.

“ஏன் திட்டுவாங்க?” செழியன் புரியாமல் கேட்க, “காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சுடணும். சமையல் முழுசும் பார்த்துக்கணும். ஒழுங்கா குடும்பத்தைப் பார்த்துக்கணும். உன்னை வா போன்னு சொல்லக்கூடாது. மரியாதையா கூப்பிடணும்னு நிறைய அட்வைஸ் பண்ணினாங்க. டிபிக்கல் ஓல்ட் டைப்” சலிப்புடன் சொன்னாள்.

அவன் சிரித்தான். அந்த சிரிப்பு அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை ரசித்துக் கொண்டே, இருவரும் படியிறங்க, ப்ரியாவிற்கு அவனிடம் அந்த படியில் நின்று, அகிலன் திருமண சடங்கின் போது, ‘எப்படி உடை உடுத்த வேண்டும்’ என்று சொன்னது, அதற்கு அவன் முழித்தது என்பதெல்லாம் நினைவுக்கு வர, திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவன் என்ன என்று பார்க்க, எம்பி அவன் கன்னத்தில் ஒரு சின்ன முத்தம் கொடுத்து, “ஐ லவ் யு” சொல்லிவிட்டு புடவையை தூக்கியபடி ஓடிவிட்டாள்.

இப்போதும் செழியன் ‘பே’ என விழித்தான். பின் புன்னகை ஒட்டிக்கொண்டது.

அன்றைய தினம் அப்படியே கழிய, இருவரும் மும்பை கிளம்பத் தயாரானார்கள் புது வாழ்வை அழகாக துவங்க, ஆனால் அவர்களுக்காக அங்கே காத்திருப்பது?!

2
2
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved