தனிப்பெரும் துணையே – 23

தனிப்பெரும் துணையே – 23

Trigger warning!! Might be heavy! Readers discretion advised. கொஞ்சம் அழுத்தமான பதிவு. பலவீனமானவர்கள் தவிர்த்து விடவும்.

ப்ரியா செழியன் கை ஓங்கியதையெல்லாம் பார்க்கவே இல்லை. அவள் பார்த்தது கண்முன்னே உடைந்திருந்த லாம்ப் மற்றும் அவள் கேட்டது, அவன் உதிர்த்த வார்த்தைகள் மட்டுமே. பயந்து அவனைப் பார்த்தாள் முதல் முறை.

அவள் கண்களில் பயத்தைப் பார்க்கப் பார்க்க, அவன் இதயத்தை யாரோ ஊசியால் குத்திக்கொண்டே இருப்பதை போல உணர்ந்தான்.

முதல் முறை அவளைக் கவிதாவுடன் பார்த்தபோது அவள் கண்களில் அன்பை பார்த்தான்.

பின் அவனை யார் என்று தெரியாமல் பேசிய போது கண்களில் அலட்சியத்தைப் பார்த்தான்.

கவிதா கல்யாணத்தின் போது அவள் கண்கள் காட்டிய ஆச்சரியத்தைப் பார்த்தான்.

பின் அவனிடம் பேசிய சில சமயங்களில் கண்களில் குறும்பை பார்த்தான்.

அவள் ட்ரைனிங் என்ற பெயரில் அவன் வீட்டிற்கு முதலில் வந்தபோது, அவள் கண்களில் ஆசையை பார்த்தான்.

அவள் அலுவலகத்தில் அவளை சந்தித்த போது அவள் கண்களில் காதலை பார்த்தான்.

அவனுக்கு உடம்பு சரியில்லாதபோது, பார்த்து பார்த்து அவள் செய்த ஒவ்வொன்றிலும் கனிவை பார்த்தான்.

ஆனால் இப்போது இந்த பயம், அதனுடன் சேர்ந்த அழுகை அவனை ஏதோ செய்தது. அவன் நெஞ்சை பிசைந்தது. இதுவல்ல அவன் அவளிடம் பார்க்க நினைத்தது. தன்னுடனான வாழ்க்கையில், அந்த கண்களில், சந்தோஷத்தை மட்டுமே பார்க்கவேண்டும் என நினைத்திருந்தான். ஆனால் இப்போது?

ப்ரியா கண்களில் கண்ணீருடன், “இளா. நீயா பேசற இப்படியெல்லாம்? உன்ன நான் ஒருபோதும் குறைச்சலா நினைச்சதே இல்ல. நான் ரொம்ப அட்மயர் பண்ற ஒரு ஆள் நீ. நீ படிச்ச படிப்புக்கு நீ நினைச்சிருந்தா எவ்வளவோ தற்பெருமை பட்டுருக்கலாம். ஆனா ஒரு நாளும் உன்கிட்ட அதை நான் பார்த்ததில்லை. எனக்கு அது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

பட் என் இளா கொஞ்ச நாளா ரொம்ப தற்பெருமையோட பேசறான். ஆனா அதை கூட நான் ரசிச்சேன் இளா. ஆனா வர வர நீ ரொம்ப ஹர்ட் பண்ற, வார்த்தையால. யு ஆர் ஹர்டிங் மீ அ லாட். ரொம்ப வலிக்குது இளா” அவள் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசினாள்.

அவன் எதுவுமே பேசவில்லை. அவள் பேசிய அனைத்தையும் எப்போதும் போல உள்வாங்கிக்கொண்டான்.

“எனக்கு மூட் சரியில்ல. ப்ராஜக்ட் ஒர்க் கொஞ்சம் இருக்கு. நான் காலேஜ் வரை போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அமைதியாக குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.

செழியன் அமைதியாக உட்கார்ந்தான். அவள் சொன்ன ‘யு ஆர் ஹர்டிங் மீ எ லாட். ரொம்ப வலிக்குது இளா’ மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ப்ரியா வெளியே வந்தது, கிளம்பியது, புறப்படுகிறேன் என்று சொன்னது… எதுவுமே அவன் காதுகளை அடையவில்லை. அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது, ‘யு ஆர் ஹெர்டிங் மீ எ லாட்’ என்பது மட்டுமே.

ப்ரியா சென்றுவிட்டாள். அவனுக்கு ஹர்டிங் என்ற வார்த்தை சம்மட்டியால் அடிப்பது போல ஒரு உணர்வு.

அமைதியாக குளியலறைக்குள் சென்றான். பின் ஹீட்டர் ஆன் செய்தான். சில நிமிடங்கள் அப்படியே நின்றான். பின் கொதி நிலையில் இருந்த சுடு தண்ணீரை திறந்தவன், அவளை அடிக்க ஓங்கிய கையை அதில் காட்டினான். கை தகித்தது. பின் சிவக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக நிலைகுலைந்தது.

அவன் கையில் ரணம் அதிகமானது. கண்களில் கண்ணீர் கோடாக வந்தது. ஆனால் அவளுக்கு இதுவரை தந்த வலியை காட்டிலும் இது பெரிதல்ல என்றே தோன்றியது.

இப்போது சுடு தண்ணீர் தீர்ந்து, குளிர்ந்த தண்ணீர் வர, கையை எடுத்தான்.

பின் வெளியே வந்தவன், முகத்தை துடைத்துக்கொண்டு உடை மாற்றிக்கொண்டு கல்லூரிக்குக் கிளம்பினான். கை ரணத்துடனே அனைத்து வேலையும் செய்ததால், கொப்பளம் ஆகிவிட்டது. அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை.

முதலில் அவளிடம் மன்னிப்பை கோரவேண்டும் என நினைத்து, அவள் டிபார்ட்மென்ட்க்குச் சென்றான். அங்கு அவளைப் பார்க்க முடியவில்லை. பின் லைப்ரரியில் இருப்பாளோ என நினைத்து அங்கே சென்றான்.

ப்ரியாவோ, அவனிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு வந்தவள், ப்ராஜக்ட் வேலை செய்ய மனமில்லாமல், லைப்ரரி சென்றாள். சொல்லமுடியாத வலி அவள் மனதில்.

யாரிடமேனும் சொன்னால் கொஞ்சம் மன நிம்மதி கிடைக்கும் என நினைத்து, முன்பு அவள் ஹாஸ்டல் அறை தோழி காயத்ரியை லைப்ரரிக்கு வரச்சொன்னாள்.

அங்கே காயத்ரியுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். அவள் மராத்தி. தமிழ் தெரியாது.

ப்ரியாவின் முகமே காயத்ரிக்கு காட்டியது ஏதோ சரியில்லை என.

காயத்ரி என்ன ஆயிற்று என்று கேட்க, முதலில் தயங்கிய ப்ரியா, பின் அனைத்தையும் சொல்லாமல், செழியனின் கோபம், கோபத்தின் போது அவன் பேசுவது என்பதை மட்டும் சொன்னாள். காயத்ரிக்குச் செழியன் மேல் கோபம் கோபமாக வந்தது.

“என்னன்னே தெரியல காயு. இளாகிட்ட கொஞ்சம் சேஞ்சஸ் தெரியுது இப்போல்லாம்” என்றதும், “நான் அப்போவே சொன்னேன். எல்லாம் அளவோட இருக்கணும்னு. நீ ரொம்ப அவன் மேல ஆசை வச்சு, இப்போ பாரு கஷ்டப்படற. டூ மச் அஃப் எனிதிங் இஸ் குட் ஃபோர் நத்திங். அது இதுபோல லவ்கும் பொருந்தும்” கோபத்துடன் காயத்ரி பேச பேச, அவர்கள் உட்கார்ந்து பேசும் மரத்தடியில், ப்ரியாவை பார்த்ததும் செழியனும் அங்கே வந்தான்.

காயத்ரி சொன்னது அனைத்தும் மரத்திற்கு அந்த பக்கம் நின்றிருந்த செழியனுக்கும் கேட்டது. ‘தன்னை பற்றித்தான் பேசுகிறார்கள்’ என்று தெரிந்ததும், மனதின் அழுத்தம் அதிகமானது.

காயத்ரி பேசியபின் ப்ரியா மெளனமாக கண்ணீருடன் இருக்க, அதைப் பார்க்க பொறுக்காமல், “ஹி மஸ்ட் பி அ சைக்கோ” என்றாள் காயத்ரி கோபத்தின் மிகுதியில்.

அந்த வார்த்தை… சைக்கோ நடு மண்டையில் ஆணி அடித்தாற்போல இருந்தது செழியனுக்கு. அதற்கு மேல் அவர்கள் பேசியது எதுவுமே அவனுக்கு கேட்கவில்லை.

‘அது உண்மையோ!’ மூளை யோசிக்க, கண்கள் கலங்கியது. ‘இல்லவே இல்லை’ என்று கதறியது அவன் மனது. ‘இல்ல நீ சைக்கோ!’ மறுபடியும் அதே ஒலி கேட்டது அவனுள்.

கத்தியால் குத்தியோ, இல்லை பெரிய கடப்பாரை கொண்டு அடித்தால் மட்டும்தான் அதுபோல வலி வருமா என்ன? அந்த ஒரு வார்த்தை ‘சைக்கோ’ அவனுக்கு மனதில் அந்த வலியை தந்தது. துவண்டுவிட்டான். கைகாயமெல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது.

அதையே யோசித்துக்கொண்டு ஒரு ஜடத்தை போல அங்கிருந்து நகர்ந்தான்.

காயத்ரி சைக்கோ என்று சொன்னதும், “காயு. மைண்ட் யுவர் வெர்ட்ஸ்” என்று கிட்டத்தட்ட கத்திவிட்டாள் ப்ரியா.

அதேநேரம் பக்கத்தில் இருந்த மராத்தி பெண், காயத்ரியின் தோழி ஆங்கிலத்தில், “காயத்ரி நம்ம ஹுயுமானிட்டிஸ் ஸ்டூடென்ட்ஸ். இதுபோல ஒருத்தர செக் பண்ணாம, கவுன்செல் செய்யாம சைக்கோனு சொல்லலாமா?” என்றாள் கூர்மையாக.

ப்ரியா அந்த பெண்ணை பார்க்க, “உங்க ப்ராப்ளம் என்னன்னு தெரியல. பட் டோன்ட் கம் டு எனி கண்க்ளுஷன் வித்அவுட் அ ப்ராபர் கன்சல்டேஷன்(Don’t come to any conclusion without a proper consultation)” என்றாள் அந்த பெண். ப்ரியா அதை கேட்டுக்கொண்டாள்.

காயத்ரி பின், “ஸாரி ப்ரியா. நீ கஷ்டப்படறத பார்க்க முடியல. அதான் அப்படி சொல்லிட்டேன். பட் என்ன சொன்னாலும் ஹி இஸ் ராங். உன் அருமை அவனுக்குத் தெரியல. நீ கொஞ்ச நாள் அவன் கூட பேசாத. இல்ல ஊருக்கு போ. அப்போதான் அவனுக்கு புரியும்” என்றாள்.

ப்ரியாவிற்கு குழப்பமாகவே இருந்தது. காயத்ரியிடம் பேசிவிட்டு, மறுபடியும் டிபார்ட்மென்ட் சென்றுவிட்டாள்.

செழியன், அங்கிருந்து நடக்க ஆரம்பித்தவன்தான். கண்கள் வெறித்து, எங்கு செல்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. கால்கள் தானாக மூளையின் அறிவுறுத்தலில் வீட்டிற்கு போகும் வழியில் சென்றது.

ரோட் க்ராஸ் செய்தான். ஆனால் இருபுறமுமெல்லாம் பார்த்து செல்லவில்லை. கிட்டத்தட்ட வண்டியில் மோதும் அளவிற்கு அவன் எதையும் பார்க்காமல் நடந்தான். மனது முழுவதும், ‘நான் சைக்கோவா?’ என்ற கேள்வியே.

பலபேரின் திட்டெல்லாம் கேட்கவில்லை. காயத்ரி சொன்னது மட்டுமே கேட்டது. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவன், கதவை தாழிட்டுக்கொண்டு படுக்கையில் உட்கார்ந்தான்.

மனதில் கதறி அழ வேண்டும் என்று தோன்றினாலும், அழுகை வரவில்லை. கண்ணுக்கு முன் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் தெரிந்தது. பார்ட்டி சென்றபோது அவர்கள் எடுத்தது.

அவளின் சிரித்த முகம் அதில் தெரிய, திடீரென ஒரு ஒளி கண் முன்னே பளிச்சிட்டு நகர்ந்தது போல உணர்வு. சுற்றிப்பார்த்தான். ஒன்றும் இல்லை.

இப்போது திடீரென குரல் கேட்டது. ‘பார் அவள் சிரித்த முகத்தைப் பார். உனக்காக அதை தொலைத்துவிட்டு இப்போது நிற்கிறாள் பார்’ என்று சத்தமாக கேட்டது. அதை கேட்டவுடன் பதறிக்கொண்டு ஒரு மூலையில் சென்று பயத்தில் உட்கார்ந்தான்.

கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. சுற்றிலும் பார்த்தான் யாருமில்லை. இப்போது மறுபடியும் ஒரு ஒளி அவன் முன்னே பளிச்சிட்டு மறைந்தது. கண்களை மூடிக்கொண்டான்.

‘கண்களை மூடிக்கொண்டால்? நீ செய்ததெல்லாம் இல்லை என்றாகிவிடுமா?’ அதே குரல் மறுபடியும். காதை அடைத்துக்கொண்டு அவசரமாக கண்களை திறந்தான். யாருமில்லை.

சிலநொடிகளில் மறுபடியும் ஒரு ஒளி குறுக்கே ஓடிச்சென்றது. கண்களை மூடிக்கொண்டு காதை அடைத்துக்கொண்டான். கை சுட்டதின் வலி ஒருபக்கம். இருந்தும் கையை எடுக்கவில்லை. எங்கே எடுத்தால் அந்த ஒலி கேட்குமோ என்று.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ, வாசல் கதவு அதிரும் படி தட்டும் சத்தம் கேட்டு வியர்த்து விறுவிறுத்து அவசரமாக எழுந்தான்.

அவன் கதவை திறக்க, அவன் முன்னே நின்றாள் ப்ரியா. அவளைப் பார்த்ததும் இவ்வளவு நேரம் சீராக இல்லாத மூச்சை இப்போது நன்றாக வெளியிட்டான்.

அவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கடந்து உள்ளே சென்றாள் ப்ரியா.

சமையலறை உள்ளே சென்றவள், அதேவேகத்தில் திரும்பி வந்து, “சாப்பிடவே இல்லையா இளா? சமைக்கவே இல்லையா? ஏன் இப்படி பண்ற, இரு நான் ஏதாச்சும் பண்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இவ்வளவு நேரம் வராத கண்ணீர், அழுகை இப்போது கொட்டியது. கத்தி அழவேண்டும் என்பதுபோல இருந்தது.

குளியல் அறைக்குள் புகுந்துகொண்டவன், தண்ணீர் குழாயை திறந்துவிட்டு சத்தமாக கத்தி அழுதான்.

‘தன்னை இப்படி பார்த்துக்கொள்ளும் அவளுக்கு தான் செய்ததென்ன? அவளுக்குத் தந்ததெல்லாம் மனவருத்தம் மட்டுமே’ தொண்டை வறண்டு போகும்வரை அழுதான்.

பின் சைக்கோ என்பது மறுபடியும் ஞாபகம் வர, அவசரமாக தன்னிடம் இதுநாள் வரை தெரிந்த மாற்றங்கள் அனைத்தையும் யோசித்துப் பார்த்து ஒவ்வொன்றாக கூகுளில் பார்த்தான்.

கூகுள் மனிதனுக்குப் பல வகையில் உதவியாக இருக்கும் ஆனால் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சே. அவன் இருந்த மனநிலையில் அது புரியவில்லை.

அதில் இருந்த ஒவ்வொன்றையும் படிக்க, மனது இன்னமும் ரணமானது. கண்டிப்பாக தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று முடிவெடுத்தான்.

‘தனக்கு ஆனது இருக்கட்டும், ஆனால் இசையின் நிலை? தன்னை காதலித்தது தவிர வேறு எந்த தவறையும் அவள் செய்யவில்லையே. அவளுக்குத் தன்னுடன் வாழும் தண்டனை தேவையா? சைக்கோவுடன் வாழ வேண்டுமா?’ என்று அந்த கோணத்தில் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

இப்போது அமைதியாக வெளியே வந்தான். அவள் சமையலறையில்தான் இருந்தாள். மனது முழுவதும் பல கேள்விகள்.

எதற்காக இசை இதெல்லாம் பொறுத்துக்கொண்டு தன்னுடன் வாழ வேண்டும்? இதுபோல செயல்கள் ஓரிருமுறை செய்வதே தவறு. ஆனால் அடிக்கடி செய்தால், அது மனதளவில் அவளை எவ்வளவு பாதிக்கும்? இப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு தேவையா? தன் அக்காவிற்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்திருந்தால் எவ்வளவு கோபம் வந்திருக்கும் தனக்கு? அதே கோபம்தானே வரவேண்டும் இசையை நினைக்கும் போது?

இப்போது கேள்விகளுக்கான பதில்களும் யோசித்தான்.

‘அவன் சைக்கோவாக இருப்பானோ’ என்ற எண்ணம் எப்படியும் ஒரு மூலையில் அவளுக்கு வந்திருக்கும். அது அப்படியே இருக்கட்டும். நான் சைக்கோவாகவே இருந்து கொள்கிறேன். அவள் நன்றாக இருக்க வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை இசைக்கு தேவையே இல்லை.

‘இதுபோல ஒருவனுடன் வாழவேண்டுமா என்று அவள் நினைக்கவேண்டும். இதுபோல ஒரு வாழ்க்கை வேண்டாம் என அவள் முடிவெடுக்கவேண்டும். நான் வேண்டாம் என்று நினைத்து என்னைவிட்டு செல்லட்டும்.

எப்படி அவளிடம் பேச வேண்டும்… என்ன பேச வேண்டும்?’ என்பதையும் முடிவெடுத்தான்.

அதே நேரம் சீக்கிரம் உணவு தயார் செய்த ப்ரியா, “இளா சாப்பாடு ரெடி. வா சாப்பிடலாம்” என்று அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

அவளின் அந்த அன்பான முகம், ‘இதை இனி பார்க்க முடியாதா?’ என்ற ஏக்கம் மனதில் எழுந்து, தொண்டை அடைத்தாலும், அழுத்தம் அதிகமானாலும், முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு,

“வேலை செய்றப்போ தொல்லை பண்ணாதன்னு எவ்ளோ டைம் சொல்றது. கண் முன்னாடி நிக்காத போ” என்றான்.

இது போல பேச்சை கேட்பது அவளுக்கு புதிதில்லையே. அமைதியாக, “சரி சாப்பிட்டு செய்” என்றாள். உடனே கோபம் கொண்டு எழுவது போல, அவன் எழுந்தான். அவன் உட்கார்ந்திருந்த நாற்காலி இரண்டு அடி தள்ளி சென்று கீழே விழுந்தது.

ப்ரியா அதிர்ந்து அவனைப் பார்க்க, “எப்போ உன்னை கல்யாணம் பண்ணேனோ அப்போவே எல்லாம் போச்சு. இன்னும் உன்னால நான் எதுவெல்லாம் இழக்கப் போறேனோ. இப்போ சாப்பாடுதான் முக்கியமா?” என்று அவன் கத்த, அந்த வார்த்தைகள் ப்ரியாவை நிலைகுலையச் செய்தது.

“இளா” பரிதவிப்போடு பார்த்தாள் ப்ரியா அவனை.

ஒருவன் மனதளவில் அழுதுகொண்டு, வெளியில் கடுமையாக இருப்பது போல காட்டிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை நேர்த்தியாக செய்தான் செழியன். அவளின் அந்த பரிதவிப்பு அவனை உள்ளுக்குள் வதைத்தது.

இருந்தும், “என்ன? உண்மைய சொன்னா கஷ்டமா இருக்கா?” என்றான் அதே கோபத்துடன் இருப்பது போல.

ப்ரியா அப்படியே சிலையாக நிற்க, “அக்காக்காகன்னு ஒன்னொன்னும் பண்ணி என் வாழ்க்கை போனதுதான் மிச்சம்” என்று அவள் காதில் படும்படியே முனகினான்.

“என்ன சொன்ன இளா? எதா இருந்தாலும் சத்தமா சொல்லு” கூர்மையாக அவனை கேட்டாள்.

‘நான் சொல்றத நம்பாத இசை. ப்ளீஸ்’ அவன் மனம் தவித்தாலும் கதறினாலும் வெளியில், “எனக்கு சொல்ல பயமா என்ன? அக்கா வாழ்க்கைக்காகதான் உன்ன கல்யாணம் பண்ணிட்டேன். எங்க முடியாதுன்னு சொல்லி உங்க அண்ணன் என் அக்காவை கஷ்டப்படுத்துவாரோன்னுதான் சம்மதிச்சேன் போதுமா?” என்றான் இறுகிய முகத்துடன்.

இதை சொன்னபோது அவன் மனதளவில் உடைந்துவிட்டான். நெஞ்சில் மேல் யாரோ பலம் கொண்டு அடிப்பது போல ஒரு அழுத்தம் அவனுள்.

ப்ரியா அதை கேட்டவுடன் எந்த உணர்ச்சியும் காட்டாமல், “ஓ! அப்போ நீ என்னை லவ் பண்ணவே இல்ல, அப்படித்தானே. உன் அக்காக்காகத்தான் கல்யாணம் பண்ணிட்ட?” அவள் கேட்க,

“இதுல சந்தேகம் வேற இருக்கா? உன்னை பிடிக்கும் அவ்ளோதான். அது லவ் எல்லாம் இல்ல” திடமாக பதில் தந்தான்.

“ஹ்ம்ம், சரி இளா. பிடிக்காத ஒரு வாழ்க்கை நீ வாழவேண்டாம். நான் போய்டறேன். நீ இழந்தது எல்லாமே திரும்பி வந்துடும்” இதை சொன்னபோது ப்ரியா அழவில்லை. கோபப்படவில்லை. மனது இறுகிப்போனது.

“பட் நான் ரெக்ரெட் (regret) பண்றேன் இளா. உன்னை போய் அவ்ளோ லவ் பண்ணேனானு, நீ தந்த அளவுக்கு சந்தோஷத்தை எனக்கு யாரும் தந்ததில்லை. உன்னை தவிர என்னை யாரும் இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தியதும் இல்ல” கண்களில் கண்ணீர் இப்போது வரப்பார்த்ததோ? மூச்சை ஆழ இழுத்து வெளியிட்டாள் ப்ரியா.

செழியன் அவள் பேசியபின் ஒரு ஏளனப் புன்னகையை உதிர்த்தான் அவளைப் பார்த்து. இப்போது அவள் முன் நிற்பது வெறும் உடல் கூடு மட்டுமே. எப்போது அவள் காதலித்ததற்காக வருந்தினாளோ, அப்போதே அவன் உயிர் போய்விட்டது.

அவனின் அந்த புன்னகை அவளை வெகுவாக தாக்க, துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

செழியன் அங்கே நிற்காமல் பால்கனிக்குச் சென்று கதவை மூடி உட்கார்ந்தான்.

கைக்கொண்டு வாயை இறுக மூடிக் கொள்ள, அவன் அழும் சத்தம், ஏன் மூச்சு விடும் சத்தம் கூட யாருக்கும் கேட்காது.

மனம் விட்டு அழுவது வேறு, ஆனால் மனம் விட்டு கதற வேண்டும் அதுவும் எந்த சத்தமும் இல்லாமல் என்பது தொண்டை கிழியும் அளவுக்கு வலியை ஏற்படுத்தும்.

இப்போது, ஒரு குரல் பலமாக சிரித்தது. ‘நீ அவளை சந்தோஷமா வச்சுப்பயா? அவளே சொல்லிட்டா, உன்ன லவ் பண்ணது தப்புனு’ சத்தமாக சொல்லி கை தட்டி சிரிக்க, செழியன் பயத்தில் மூச்சு விடக்கூட சிரமப்பட்டான்.

ப்ரியா பால்கனி கதவை தட்டியவுடன், தன்னை சமநிலை படுத்திக்கொண்டு கதவை திறந்தான். இருந்தும் அழுது கண்கள் சிவந்திருந்தது.

ஆனால் அவளோ, ‘எங்கே அவன் முகம் பார்த்தால் மறுபடியும் மனம் இளகிவிடுமோ? அவனுக்கு தொல்லையாக இருந்துவிடுவோமோ?’ என நினைத்து அவன் முகம் பாராமல், “நான் கிளம்பறேன்” என்று விட்டு வேறெதுவும் பேசாமல் கிளம்பிவிட்டாள்.

அவள் சென்ற ஐந்து நிமிடங்கள் கழித்து, கதவை மூடியவன், கிட்டத்தட்ட பித்துப்பிடித்தவனை போல கத்தினான். அழுதான்!

****

டைரியில் அதற்கு மேல் எதுவும் இல்லை. ப்ரியா அந்த டைரியில் முகம் புதைத்து கதறி அழுதாள்.

‘எவ்வளவு மனதளவில் போராட்டம் அவனுள்? அந்த நிலையிலும் தனக்காக யோசித்திருக்கிறானே! ஒரே ஒரு முறை தன்னிடம் சொல்லியிருந்தால் அவனுக்காக இருந்திருக்க மாட்டேனா? குழந்தையை கலைத்துவிடு என்று இதற்குத்தான் சொன்னானா?’ அவள் அழுது அழுது ஒரு கட்டத்தில் நேரம் ஆகிக்கொண்டே போக, மணியை பார்த்தாள். இரவு எட்டு மணி ஆகியிருந்தது.

செழியன் காலையில் சென்றவன் இன்னமும் வரவில்லை. கதவை திறந்து வெளியே எட்டிப்பார்க்க, பக்கத்து வீட்டுப்பெண் அவளைப் பார்த்து, ‘இவ்வளவு நாள் எங்கே சென்றாய்?’ என விசாரித்தாள்.

ப்ரியாவும் பதில் தந்து விட்டு, உள்ளே வர, ஏதோ ஒன்று மனதில் பொறித்தட்ட, அந்த பெண்ணிடம், “நான் இல்லாதப்ப ஏதாச்சும் நடந்ததா வீட்ல?” என்று கேட்டதும், அந்தப்பெண் கொஞ்சம் தயங்கி, பின்,

“சில சமயம் சத்தம் கேட்டுச்சு ப்ரியா. என்னன்னு தெரியல. அப்புறம் ரெண்டு நாள் முன்ன, இவர் ஷிஃப்ட்(shift) முடிஞ்சு வர்றப்ப, உன் கணவன் யாரோடவோ வெளிய போனார். மணி நைட் ஒரு பதினொன்னு இருக்கும்” என்றாள்.

செழியனுக்குத் தெரிந்தவரா? அது யார்? யாருடன் பேசுவான்? என்று ப்ரியா யோசிக்க, அவள் மூளையில் பளிச்சிட்டது குமாரின் முகம்.

அவசரமாக மொபைலில் அவன் போட்டோவை அந்த பெண்ணிடம் காட்ட, அந்த பெண் அவன்தான் அழைத்துச் சென்றான் என்றாள்.

உடனே கிளம்பினாள் ஹாஸ்டலுக்கு. குமாரின் அறைக் கதவை தட்ட, கதவை திறந்த குமாருக்கு அதிர்ச்சி.

“எங்கண்ணா இளா” வேறெதுவும் கேட்காமல் விஷயத்தை நேரடியாக கேட்க, சற்று தயங்கிய குமார் அவளை அழைத்துச் சென்றான் ஐஐடிக்குள் இருந்த மருத்துவமனைக்கு.

ப்ரியாவின் மனம் பதறியது. அவனுக்கு எதுவும் இருக்கக் கூடாது என்று. குமார் ஒரு இடத்தில் நிற்க, அங்கிருந்து பார்த்தவளுக்கு அவளை மீறியும் அழுகை வர, அவள் கண்ணெதிரில் துவண்டு போய் படுத்திருந்தான் செழியன்.

***

3
1
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved