தனிப்பெரும் துணையே – 4

தனிப்பெரும் துணையே – 4

வளைகாப்பு நிகழ்ச்சி ஒருவழியாக முடிய, கவிதாவை கைத்தாங்கலாக மேலே அவர்கள் அறைக்கு அழைத்துச்சென்றான் அகிலன்.

சில நிமிடங்களில் செழியனிடம் கவிதாவிற்கு சாப்பிட ஏதோ கொடுத்தனுப்பினார் அவர்களின் சித்தி. அதை எடுத்துக்கொண்டு அவன் மேலே செல்ல, அங்கே அகிலன் கவிதாவை உட்காரவைத்து, வளையல் அணிவித்துக்கொண்டிருந்தான்.

செழியன் அவர்கள் அறையின் கதவருகே செல்லும்போது அவர்கள் பேசுவது காதில் கேட்டது.

“சூப்பரா இருக்கு அகி. ஏன் கீழயே போட்டுவிடல?” என கவிதா கேட்க,

“எனக்கு தோணுச்சு பேபி. செழியன் உனக்காக வாங்கிட்டு வருவான்னு. அவன் எவ்ளோ ஆசையா உனக்கு போட்டுவிட்டான். அந்த ஸ்வீட் மெமரி எப்பவுமே இருக்கணும். நானும் அங்கேயே போட்டுவிட்டிருந்தேன்னா அவனுது தனியா தெரியாம போயிருக்கும். என்னோட பேபிக்கு நான் எங்க போட்டுவிட்டா என்ன?” என்ற பதில் வந்தது.

அதை கேட்டுக்கொண்டிருந்த செழியன் மனதில் இனம் புரியாத உணர்வு. அகிலன் முதல் முறையாக உயர்ந்து தெரிந்தான்.

“ஏய், குட்டிப்பொண்ணு இப்போவே என் பொண்டாட்டி என்னை கொஞ்சினா சண்டைக்கு வர்றயா நீ?” என்று வயிற்றில் இருந்த குழந்தையுடன் அவன் பேசுவது கேட்க, உள்ளே இருவரையும் இப்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து திரும்பினான்.

அப்போது அவன் முன் வந்து நின்றாள் ப்ரியா. சொந்தங்கள் அனைவரும் கீழே இருக்க, எதிரே நின்ற ப்ரியாவை பார்த்து புன்னகைத்தான் செழியன்.

“ஹாப்பியா?” அவள் கேட்க, அதன் பொருள் புரிந்து, ஆம் என்பதுபோல புன்னகையுடன் தலையசைத்தான்.

“தம்பி கலக்கிட்டீங்க. அப்புறம் நெப்போலியன் மேல சந்தேகம் போச்சா?” என அவள் குறும்பாக சிரிக்க, மறுபடியும் ஆம் என தலையை ஆட்டினான்.

‘ஒஓ பதில் சொல்ல மாட்டயோ… இப்போ பாருடி’ என எண்ணி, புருவங்கள் உயர்த்தி, “அப்புறம் நான் கேட்ட கிஃப்ட் எங்க?” இதற்கு அவன் பதில் பேசியே ஆகவேண்டும் என நினைத்து கேட்டாள்.

ஆனால் அவனோ பதிலுக்கு புன்னகைத்து, பேண்ட் பாக்கெட்டில் இருந்து துணியால் ஆன ஒன்றை அவளிடம் நீட்டினான்.

அதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் மறந்திருப்பான். இல்லை, அவள் கேட்டதை பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டான் என நினைத்தாள்.

அவன் கையை நீட்டியபடி இருக்க, கண் இமைகள் விரித்து திகைத்துப் பார்த்தாள். இதயம் மகிழ்ச்சியால் சத்தம் வெளியே கேட்கும் அளவிற்கு வேகமாக துடித்தது. கைகளில் நடுக்கம். வயிற்றில் கடகடவென சத்தம்.

அவளைப் பார்த்த செழியன், “ம்ம்” என மறுபடியும் அவள் முன்னே நீட்ட, நடுக்கத்துடன் அதை வாங்கிகொண்டாள்.

“பிடிச்சிருக்கான்னு பாரு” என்றதும் தான் கண்ணை அவனிடத்தில் இருந்து பிரித்து அந்த கிஃப்ட்டை பார்த்தாள்.

அழகாக வெல்வெட் துணியினால் ஆன சின்ன பெட்டி. மறுபடியும் அவனைப் பார்த்தாள். எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவள் ஏனோ பேசமுடியாமல் தவித்தாள்.

அவன், “ஓபன் பண்ணு” என்க, அதை திறந்தாள்.

உள்ளே அழகான ஒரு கைக்கடிகாரம். அவ்வளவு அழகான வேலைப்பாடுகள். நிச்சயம் விலை அதிகமாக இருக்கும் என தெரிந்தது. மறுபடியும் அவனைப் பார்த்தாள்.

“பிடிச்சிருக்கா?” அவன் கேட்க, பதில் இல்லை அவளிடம். இன்ப அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவள் மீளவில்லை.

“அக்காக்கு வளையல் வாங்க போன இடத்துல வாங்கினேன். வேற என்ன வாங்கறதுன்னு தெரியல. இது ஓகேவா?” என கேட்க, இப்போது அவள் பதில் பேச முடியாமல் தலையை ஆட்டினாள்.

அப்போது கவிதா அகிலன் அறையில் இருந்து, “நான் சொன்னா கேட்கவே மாட்டியா? படுத்தாத. சொல்றத செய்” என அகிலன் கிட்டத்தட்ட அதட்டிக்கொண்டிருந்தான்.

அதைக்கேட்ட செழியன் என்னவோ ஏதோ என நினைத்து பதட்டத்துடன் பார்க்க, ப்ரியா அதை புரிந்துகொண்டு, “ஹஸ்பண்ட் வைஃப்… ஏதோ பேசிக்கறாங்க” என்றாள்.

“அக்கா எங்க பேசினா? அவர்தான் திட்டிட்டு” என அவன் சொல்லி முடிப்பதற்குள், “ஏன் என் உயிரை வாங்கற? உனக்கு இப்போவே எல்லாம் பண்ணணுமா?” என கவிதாவும் சத்தமாக பேசினாள்.

“அவங்க ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெரி. உன் அக்கா உன்ன மாதிரிலாம் இல்ல, நல்லா பேசுவாங்க” நக்கலுடன் சொன்னவளைப் பார்த்து முறைத்த செழியன், “நான் போய் என்னனு பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென, “அக்கா” என கதவை தட்டினான்.

“வாடா செழியா” என்றதும், அவசரமாக உள்ளே சென்றவன், அங்கு நடப்பதைப் பார்த்து சட்டென நின்றுவிட்டான்.

கவிதா சேரில் உட்கார்ந்திருக்க, அகிலன் மண்டியிட்டபடி அவள் பாதங்களை ஒரு டப் வெதுவெதுப்பான தண்ணீரில் வைக்கச்சொல்லி போராடிக் கொண்டிருந்தான்.

செழியனை பார்த்த அகிலன், “எப்படி இவளை கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க சமாளிச்சீங்க? சொல் பேச்சு கேட்கறதே இல்ல” என கவிதாவை பார்த்து முறைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக பாதங்களை தண்ணீருக்குள் விட்டான்.

பதிலுக்கு கவிதா முறைத்து, “நம்ம ஃபங்ஷனுக்கு தான் எல்லாரும் வந்துருக்காங்க அகில். நாம இப்படி தனியா மேல இருந்தா என்ன நினைப்பாங்க?”

“அதெல்லாம் இருக்கட்டும். நீ உட்கார்ந்தே இருந்து கால் வீங்கிடுச்சு” என்றவன், “உன் அக்காக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லு” என்றான் செழியனை பார்த்து.

அதைக்கேட்டு விழித்த செழியன், பின், “உன் நல்லதுக்குதானே க்கா” என நிறுத்தி, “சித்தி இதை குடுத்துட்டு வரச்சொன்னாங்க” என்று அவன் கையில் இருந்த டப்பாவை கொடுத்துவிட்டு வெளியேறினான்.

அங்கே அவனுக்காக காத்திருந்தாள் ப்ரியா. அவனைப் பார்த்ததும், கேலியாக புன்னகைத்து, “என்ன நடந்துச்சு?” என கேட்க, கொஞ்சம் தயங்கி நடந்ததை சொன்னான் செழியன்.

அவன் முகபாவத்தைப் பார்த்து சிரித்த ப்ரியா, “நான்தான் சொன்னேனே. நீ யோசிக்கற அளவுக்கு ஒன்னும் இல்ல இளா. உன் அக்கா இங்க சந்தோஷமாதான் இருக்காங்க” என்றாள்.

பின், “சரி… இது எப்படி இருக்கு?” என கையில் அவன் தந்த கடிகாரத்தைக் காட்டி கேட்க, அதைப் பார்த்தவன் முகத்தில் புன்னகை. “அழகா இருக்கு” என்றான் அதைப் பார்த்தவண்ணம். கண்கள் ஓரிரு நொடிகள் அவள் கைகளில் நிலைத்தது.

“ஹ்ம்ம் தேங்க்ஸ் ஃபோர் திஸ் லவ்லி கிஃப்ட்” என்றாள் ப்ரியா.

உடனே அவளைப் பார்த்த செழியன், “தேங்க்ஸ் சொன்னது போதும். பதிலுக்கு ஏதாச்சும் நீ கிஃப்ட் குடு” என புன்னகைத்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

‘இது நான் அவன்கிட்ட சொன்னது. எனக்கே சொல்லிட்டு போறான்? அதுவும் சிரிச்சுட்டு வேற போறான்’ என இன்பமாக அதிர்ந்தாள் ப்ரியா.

நாட்கள் இன்னமும் அழகாக நகர்ந்தது. அவள் வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும் தினமும் குறுஞ்செய்தியில் பேசுவார்கள். அவன் அதிகம் பேசாவிட்டாலும், அவளுக்கு ரிப்ளை செய்துவிடுவான்.

இப்படியாக நாட்கள் மாதங்களாக கடந்தது.

கவிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அதைப் பார்க்க ஒருமுறை அவன் வந்த போது, தேர்வுக்காக அவள் செங்கல்பட்டு சென்றிருந்தாள். சென்னையில் இருந்தால் அலைச்சல் அதிகம் என நினைத்து. அதனால் அவன் வந்த போது அவளால் பார்க்க முடியவில்லை.

பின் ப்ரியா கல்லூரி இறுதியாண்டுக்கு வந்திருந்தாள். கல்லூரியில் இன்ப்ளாண்ட் ட்ரைனிங்கிற்காக புனே போக திட்டமிட்டிருந்தனர். கூடவே இறுதியாண்டு சுற்றுலாவும் முடித்து, மும்பையில் இருந்து ட்ரைனில் சென்னைக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர்.

இரவு உணவு உண்ணும்போது வீட்டில் உள்ளவர்களிடம் அவள் சொன்னபோது, அகிலன் அவளிடம், “காலேஜ்ல அரேன்ஞ் பண்ணதா இல்ல, நீங்களே பண்ணதாடா?” என்று கேட்டவுடன், ஒரு நொடி திடுக்கிட்டாள்.

பின் சாதாரணமாக, “ஒவ்வொரு வருஷமும் ஃபைனல் இயர் (final year) ஒவ்வொரு கோர் கம்பெனிக்கு (core company) கூட்டிட்டு போவாங்கண்ணா. இந்த டைம் புனே. அப்படியே ட்ரிப்பும் பிளான் பண்ணிருக்காங்க” என்றாள்.

“ஹ்ம்ம். சரி, பார்த்து போய்ட்டு வா” என்று மட்டும் சொன்னான்.

‘அண்ணன் கண்டுபிடித்திருப்பானோ தன்னுடைய திட்டத்தை’ என கொஞ்சம் திடுக்கிட்டாலும், தைரியமாகவே பேசினாள். அதனால் அகிலனுக்கும் சந்தேகம் வரவில்லை.

இந்த ட்ரிப்பை குறித்து செழியனிடம் எதுவும் அவள் சொல்லிக்கொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் புனே சென்றனர். அங்கு ட்ரைனிங் முடித்துவிட்டு, இரண்டு நாட்கள் அவுரங்காபாத்தில் சுற்றுலா.

பின், மும்பை புறப்பட்டனர். ஒருநாள் மும்பையில் சுற்றிவிட்டு சென்னை பயணத்தை ஆரம்பிப்பதாக இருந்தனர்.

மும்பை வந்தடைந்ததும், ப்ரியா செய்த முதல் வேலை!

“நான் மும்பை வந்துருக்கேன். இப்போ மெரைன் டிரைவ்கிட்ட இருக்கேன். வர முடியுமா?” பட்டென்று கேட்டாள் செழியனிடம். ஆனால் எதிரிலிருப்பவனிடம் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

***

 

புனேவிற்கு மட்டும்தான் இண்டஸ்ட்ரியல் விசிட் பிளான் செய்திருந்தார்கள் அவள் டிபார்ட்மெண்டில். இந்த அவுரங்காபாத் மற்றும் மும்பை சுற்றுலா, ப்ரியாவின் ஏற்பாடு.

தன்னுடன் படிக்கும் மாணவர்களின் துணையுடன், ஒரே போக்குவரத்து செலவில் ட்ரைனிங் மற்றும் ட்ரிப் என பேசியே காலேஜ் நிர்வாகத்தை சம்மதிக்கவைத்தனர்.

நன்றாக படிக்கும் பெண். ஆசிரியர்களுடன் நெருக்கம். ஆகவே அவள் பேச்சு எடுபட்டது. தனக்கு மிகவும் நெருக்கமான ஆசிரியர்கள் சுற்றுலா பொறுப்பேற்றுக்கொண்டது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.

இவள் செழியனிடம், ‘வருகிறாயா?’ என கேட்க, அவனிடம் பதில் இல்லை.

“ஹலோ லைன்ல இருக்கியா? வர முடியுமா முடியாதா?” என்று கொஞ்சம் கடுப்புடன் கேட்க, “நான் பவய்ல இருக்கேன். வரணும்னா எப்படியும் ஒன்னரை டு ரெண்டு மணிநேரமாவது ஆகும். ஐ டோன்ட் ஹவ் எ வெஹிகள்” என்றான்.

“ஒரு நிமிஷம் இரு” என்றவள், “மேம். நான் சொன்னேனே, அவர் வர டூ அவர்ஸ் ஆகுமாம். நாம எவ்ளோ நேரம் இங்க இருப்போம்?” என்று கேட்டாள்.

“எப்படியும் சாப்பிட்டுட்டு போக டைம் ஆகும். சோ நோ இஷ்யூஸ்” என்றார் அந்த பெண்மணி.

“தேங்க் யூ மேம்” என்றவள், அழைப்பில் இருந்தவனிடம், “நான் இங்கதான் இருப்பேன். இப்போ வர முடியுமா?” என கேட்க, சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, “ஹ்ம்ம்” என்றான்.

சொன்னதை விட அரை மணிநேரம் முன்னதாக வந்தடைந்தான்.

அவனைப் பார்த்த ப்ரியா மனதில் சொல்லமுடியாத ஒரு சந்தோஷம். பார்த்து பல பல மாதங்கள் ஆகிவிட்டது. அந்த பக்கம் ரோட்டில் இருந்து கிராஸ் செய்து இவள் இருக்கும் பக்கம் வந்துகொண்டிருந்தான்.

கொஞ்சம் மெதுவாகவும், கொஞ்சம் வேகமாகவும் போக்குவரத்துக்கு ஏற்றாற்போல, கடல் காற்றுக்குப் பறக்கும் சிகையை சரிசெய்துகொண்டு அவளைப் பார்த்ததும் வேகம் குறைத்து நெருங்கினான்.

கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் தோன்றியது, ‘எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டான்’ என்பதே.

அவள் எதிரில் வந்து அவன் நிற்க, ப்ரியா புன்னகைத்தாள். கையில் கட்டியிருந்த அவன் கொடுத்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு மறுபடியும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

அதன் பொருள் புரிந்து அவனும் இப்போது புன்னகைத்தான்.

பின், “இன்னைக்கு டிராஃபிக் கம்மி. பிளஸ் டாக்ஸில வந்தேன்” என்றான்.

“தேங்க்ஸ் வந்ததுக்கு” அவள் சொன்னதற்கு, “தேங்க்ஸ் போதும் கிஃப்ட் எங்க?” என குறும்பாக சிரித்துக்கொண்டே கேட்டான்.

ஒரு நொடி அந்த சிரிப்பில் மூழ்கி திளைத்து வெளி வந்தவள், “நான் உன்ன பார்க்க வந்ததே உனக்குக் கிஃப்ட்தான்” என்றாள் கண்ணடித்து. இப்போது அவன் போலியாக முறைத்தான்.

“என்ன திடீர்னு மும்பைக்கு?” அவன் கேட்க, “புனேல ட்ரைனிங் வந்தோம். அப்படியே ஒரு சின்ன ட்ரிப். சரி உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறயா?” என அன்றைய தினத்திற்கான அடுத்த குண்டை போட்டாள்.

அவன் விழிகள் விரித்து பார்க்க, “என்ன” என்றாள் அவனின் செய்கையை பார்த்து.

“ட்ரிப் வந்துட்டு எப்படி விடுவாங்க?” என அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவன் கேட்க, “அதெல்லாம் அப்புறம் சொல்றேன். கூட்டிட்டு போவியா?” என விடாமல் கேட்டாள்.

“உன் வீட்ல தெரியுமா? உன் அண்ணனுக்கு?” சந்தேகத்துடன் அவன் கேட்க, “சரி நீ கிளம்பு. தேங்க்ஸ் ஃபோர் கமிங்” என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

“நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்?” கேள்வியாக அவன் பார்க்க, “நீ என் அண்ணியோட தம்பி. உன் வீட்டுக்கு வர்றதுக்கு நான் எதுக்கு பெர்மிஷன் கேட்கணும்? நான் தப்பு ஒன்னும் பண்ணலையே” என்றாள் நேராக.

அவன் முகமே காட்டியது அவன் அதிர்ச்சியை. அப்போது அவளின் ஆசிரியர் அங்கே வர, அந்த பெண்மணி செழியனை பார்த்தார்.

அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, ப்ரியாவிடம், “அஞ்சு மணிநேரம்தான், சீக்கிரம் வந்துடணும் ப்ரியா. நான் ரிஸ்க் எடுத்து உன்ன அனுப்பறேன். ஸார வேற நான் சமாளிக்கணும். ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட்”

“கண்டிப்பா மேம். நான் ஈவினிங் நாலு மணிக்கு இங்க இருப்பேன். ஃபோர் அவர்ஸ் போதும். ஐ வில் பி பேக்” என்றாள் திடமாக.

இதை அனைத்தையும், ‘பே’ என பார்த்தான் செழியன்.

மறுபடியும் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

“சரி போலாமா?” என ப்ரியா கேட்டவுடன், தன்னிலைக்கு வந்த செழியன் தலையை ஆட்டினான்.

அவளும் புன்னகைத்துக்கொண்டே அவனோடு சென்று டாக்ஸியில் ஏறினாள். பின் சீட்டில் அவள் ஒரு ஜன்னல் பக்கம். அவன் மற்றொரு ஜன்னல் பக்கம்.

“உண்மைய சொல்லு. அவங்க உன்னோட ஸ்டாஃப் ஆஹ்? இல்லே நீயே செட் பண்ண ஆளா?” என்றதுதான் அவன் கேட்ட அடுத்த கேள்வி.

அதற்கு சட்டென சிரித்த ப்ரியா, “அவங்க என்னோட இன்ச்சார்ஜ் தான். என்னை பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும். என்னை விட அண்ணனை பத்தி இன்னமும் தெரியும். உன் அக்காவையும்” என்றாள்.

அவன் புரியாமல் பார்க்க, அவள், “அவங்களும் அண்ணனும் ஒரே பேட்ச். காலேஜ் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் கிளப் மெம்பர்ஸ் ரெண்டு பேரும். மேம் இப்போ எங்க காலேஜ்லயே ப்ரொஃபஸர் ஆகிட்டாங்க. அண்ணனோட ரிசெப்ஷனுக்கு கூட வந்திருந்தாங்க. சோ அண்ணியையும் பார்த்துருக்காங்க. இந்த விளக்கம் போதுமா?” என புருவங்கள் உயர்த்தி கேட்டாள்.

மறுபடியும் திகைத்துப் பார்த்தான் செழியன். ப்ரியா புன்னகைத்தாள்.

‘அவங்க கிட்ட என்ன சொல்லிட்டு வந்தன்னு கேட்கறயா நீ? எனக்கு உன்ன பிடிக்கும்ன்னு அவங்களுக்குத் தெரியும், ஆனா உனக்கு? புரியவே மாட்டேங்குது. ஒரு பொண்ணு இவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்திருக்கேன், ப்ச் இன்னைக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்’ என நினைத்துக்கொண்டு அவனைப் பார்க்க, அவன் பேசாமல் வந்தான்.

“ஆமா ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுட்டியா?” ப்ரியா கேட்க, அவன் சற்று தயங்கி ஆம் என்றான்.

‘வாய் திறந்துடாத. முத்து உதிர்ந்திடப்போகுது’ முணுமுணுத்தவாறு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்தில், கண்கள் சொருகி, தூங்க ஆரம்பிக்க, ஒருநிலையில் இல்லாமல் ஆடிக்கொண்டே தூங்கும்போது, திடீரென ஓட்டுனர் வேகத்தடையில் பிரேக் போட்டவுடன், அவள் விழாமல் இருக்க, அவள் கையை பற்றிக்கொண்டான்.

தூக்கத்தில் மெதுவாக கண்விழித்த ப்ரியா, அவன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, அவன் தோள் மேலே சாய்ந்து, அவன் கையை நன்றாக பற்றிக்கொண்டு உறங்க ஆரம்பிக்க, அவன் அவள் கையைத் தட்டிக்கொடுத்தான்.

ஏதோ சொர்க்கத்தில் அவனுடன் பயணிப்பதுபோல உணர்ந்தாள். அவன் தட்டிக்கொடுப்பது, முதலில் சுகமாக இருந்தாலும் இப்போது, கொஞ்சம் தட்டிக்கொடுக்கும் அழுத்தம் அதிகமாக… கூடவே, “வீடு வந்துடுச்சு” என்ற குரல்.

கஷ்டப்பட்டு கண்கள் திறந்து பார்க்க, அவன் அவனிடத்தில்தான் இருந்தான். இவள் இவளிடத்தில்தான் இருந்தாள்.

இவள் ஜன்னல் மேல் சாய்ந்து இருக்க, சற்று முன் நடந்தது எதுவுமே நிஜத்தில் நடக்கவில்லை என்று நினைத்தபோது, சட்டென சிரிப்புதான் வந்தது அவளுக்கு.

அவனைப் பார்த்தாள். இவள் சிரிப்பதைப்பார்த்து அவன் குழப்பத்தில், “கனவெதாச்சும் கண்டயா?” என கேட்க, “ஹ்ம்ம்” என்றாள். அதற்கு அவனோ தலையை ஆட்டிவிட்டு இறங்கினான்.

‘அடப்பாவி, என்ன கனவுன்னு கேட்கமாட்டயா டா? இவனையெல்லாம்’ என நினைத்து சலித்துக்கொண்டு அவளும் இறங்கினாள்.

அது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. கொஞ்சம் பழையதாக இருந்தாலும் நன்றாகவே பராமரிக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் உயர்ரக குடியிருப்புகளும் இருந்தது.

அதைப் பார்த்தபடியே அவள் அவன் பின்னே சென்றாள். அவன் வீடு ஒன்பதாவது தளத்தில் இருந்தது. வீட்டை அவன் திறந்து உள்ளே அழைக்க, ஒரு கணம் யோசித்தாள், ‘வலது காலா? இடது காலா?’ என.

பின் தன் நினைப்பை நினைத்து புன்னகைத்துக்கொண்டே உள்ளே சென்றாள். மிகவும் சிறிய ஒற்றை அறை வீடு. சுத்தமாக இருந்தது.

ஹாலின் ஒரு புறத்தில் பிரென்ச் டைப் பால்கனி அதை ஒட்டியபடி ஒரு சின்ன பெட். ‘ஹாலில் பெட்டா?’ என நினைக்கும்போது, அவளை உட்காரச்சொன்னான் செழியன்.

அவள் நின்றுகொண்டே சுற்றியும் முற்றியும் பார்க்க, அவன் தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதை வாங்கிக்கொண்டு சமையலறை எட்டிப்பார்த்தாள். இரண்டு நபர் மட்டுமே நிற்க முடியும். பின் கண்கள் அங்கிருந்து திரும்ப, அடுத்து தெரிந்தது பெட் ரூம்.

அதைப் பார்த்த அவள் யோசனையுடன் செழியனை பார்க்க, அவன் சொன்ன விஷயத்தை கேட்டு ஆச்சர்யத்துடன் அதிர்ந்தாள்.

***

7
4
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved