என்னுள் நீ வந்தாய் – 9

என்னுள் நீ வந்தாய் – 9

‘உன் அன்பு எனக்கு மருந்தானால், வலி கூட சுகமே

உன் அரவணைப்பு எனக்குக் கிடைக்குமானால், சோகம் கூட சந்தோஷமே!’

காலை எழுந்தபோது, கவிதாவின் உடம்பு சுட்டது. தரையில் படுத்திருந்தவள், கதவு தட்டும் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்து கதவைத் திறந்தாள்.

வெளியே தாமஸ். “கவிதா. என்னாச்சு ம்மா. இவ்ளோ நேரம் ஆச்சு எந்திரிக்காம” என்றவுடன் தான் மணி பார்த்தாள். காலை ஒன்பது மணி.

“முடியலண்ணா. ஆஃபீஸ் போகல இன்னைக்கு. பத்து நிமிஷத்துல வரேன்” என்றுவிட்டு ஃபிரெஷ் ஆகி வெளியே வந்தாள்.

“என்ன கவிதா… முகமே சரியில்லையே” என தாமஸ் கேட்க “தெரியலண்ணா. காய்ச்சல் மாதிரி இருக்கு” என்றவுடன் “அச்சோ இரு நான் சூடா சூப் போடறேன்” என்று அவசரமாக உள்ளே சென்றார்.

அவரின் இந்தக் கனிவு, அப்பாவின் ஞாபகத்தை வேறு வரச்செய்தது. பெரிதாக அப்பாவுடன் நேரம் கழிக்காவிட்டாலும், அவளின் குரலை வைத்தே சரியில்லை என்று புரிந்துகொள்வார்.

அஐய்யை அளவுக்கதிகமாகப் பிடித்ததன் காரணம் கூட, தந்தையின் கனிவை அவனிடம் அதிகம் கண்டதால்…

முந்தையதினம் அவன் அவனுடைய நண்பனுடன் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தபோது, தற்செலயாக அவனைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது கூட அவளுடைய முகமாற்றத்தை உடனே கண்டுகொண்டானே.

தாமஸ் அவளுக்கு சூப் வைத்ததுமட்டுமில்லாமல் இட்லியும் தட்டில் வைத்தார், இரவு அவள் சாப்பிடாமல் படுத்துவிட்டாள் என்றறிந்து…

“அண்ணா எனக்கு சாப்பாடு வேணாம்ணா. வயிறு பிரட்ற மாதிரி இருக்கு” முடியாமல் அவள் பேச “நேத்துல இருந்து சாப்பிடலன்னு நினைக்கறேன். சாப்பிடு மா. பசி எடுக்கும்” என வற்புறுத்தி அவளைச் சாப்பிட வைத்தார்.

“லயா கிளம்பிட்டாளா?” கவிதா கேட்க “ஆமாம்மா. கிளம்பிட்டா” என்றுவிட்டு உள்ளே சென்றார்.

என்ன முயன்றாலும், அகிலனின் நினைவு அவளை விட்டு விலகுவேனா என்றது. இன்று தாமஸ் செய்தது போல அவன் செய்ததே நினைவிற்கு வந்தது.

வெறும் மூன்று நாட்கள் மட்டுமே அவனுடன் கடந்திருந்தது. இருந்தாலும் அவளைப் புரிந்துகொண்டானே. அது இன்னமும் புரியாத புதிர் அவளுக்கு…

———அன்று———

அன்றைய இரவு உணவுக்காக அனைவரும் தயாராக, அகிலன் அவன் அம்மாவிடம் “அம்மா… இன்னிக்கி ஏன் தோசை செஞ்சுட்டு எல்லாரும் சேர்ந்து சாப்பிடக்கூடாது?” என காதைக் கடிக்க… அவன் அம்மாவுக்கா தெரியாது? ஏன் அவன் சொல்கிறானென.

கவிதாவை மட்டும் எங்கு செய்யச் சொல்லிவிடுவாரோ என்று நினைத்துத்தான் அவன் கேட்டது.

“தோசை சுட சுட சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். நீங்க எல்லாரும் உட்காருங்க. நான் உங்களுக்கு செஞ்சுட்டு, அப்புறமா சாப்பிடறேன்” என்று சொல்லிவிட்டு…

“கவிதா உனக்கு தோசை போட வருமா?” என கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் அவர் நுழைய, அவர் கேட்ட விதமே சொன்னது ‘உள்ளே வந்து எனக்கு உதவு’ என்பது போல்.

அதுபுரியாதா அவளுக்கு. பெண் பார்க்க வந்தபோதே கேட்டாரே. அகிலன் அவளைப் பார்க்க, அவள் அமைதியாக உள்ளே சென்றாள்.

இருவரும் சேர்ந்து தோசையைச் செய்து மூவருக்கும் பரிமாறினார். ஏனோ முன் இருந்த பசி முற்றிலுமாகப் போயிருந்தது கவிதாவிற்கு.

பின் ப்ரியா அவள் அம்மாவிற்கும் கவிதாவிற்கும் செய்யச் செல்லும்போது அகிலன்…

“குட்டிப்பிசாசு… போ நீ படிக்கற வேலையப்பாரு. நான் போடறேன்” என சொல்லி அவன் அம்மா பேசும்முன் சமையலறைக்குச் சென்றான். இருவருக்கும் அவன் தோசை செய்ய ஆரம்பித்தான்.

கவிதா இரண்டு தோசையுடன் போதும் என சொல்ல “ரெண்டு தான் சாப்பிட்டுருக்க. ஒழுங்கா இன்னும் ரெண்டு சாப்பிடு பேபி. அப்புறம் பசிக்கும்” என்றான் குனிந்து மெதுவாக.

“நான் வேணாம்ன்னு சொன்னேன்… கேக்கல?” என அவளும் மெதுவாக அழுத்தமாகச் சொல்லிவிட்டு எழுந்தாள்.

“விடு அகில். பசிச்சா அவளே கேட்க மாட்டாளா? தொல்லை பண்ணாத” என்றார் லட்சுமி இருவரின் கிசுகிசுப்பைக் கேட்டபின்.

ஏனோ யாருடனும் ஒட்ட முடியாமல் தவித்தாள் கவிதா.

‘இன்னும் ரெண்டு நாள் வீட்ல இருந்தா, ஒன்னு பைத்தியம் ஆவேன்… இல்ல கோவில் குளம்ன்னு போய் சாமியார் ஆவேன்… இல்ல முழு நேர செஃப் (chef) ஆயிடுவேன்’ என நினைத்து…

“ஆண்ட்டி… நான் நாளைலயிருந்து ஆஃபீஸ் போலாம்ன்னு இருக்கேன்” என்றாள் லட்சுமியிடம்.

உண்டு முடித்து சோபாவில் உட்கார்ந்திருந்தவர் அதைக் கேட்டு முற்றிலும் மாறிப்போன முகத்துடன் “நீ வேலைக்கு போக அவசியம் இல்லனு உன் அப்பாகிட்ட சொன்னோமே… நீ சம்பாதிக்கணும்ன்ற தேவ இப்போ இல்ல” என்றார் ‘நீ செல்வதில் எங்களுக்கு விருப்பமில்லை’ என்பதைப் போல்.

“இல்ல எனக்கு… நா… போக…” கவிதா தடுமாறினாள். அவள் கண்கள் தானாகச் சென்றது அகிலனிடம்.

அவள் நிலைமை அவனுக்குப் புரிய… “அம்மா… நான் தான் சொன்னேனே.. அவ முன்னாடியே வேலைக்கு போவேன்னு என்கிட்ட சொல்லிட்டான்னு. அவளுக்கு எது விருப்பமோ அத செய்யட்டுமே… அதுவும் இல்லாம வீட்ல அவளுக்குப் போர் அடிக்கும் ம்மா” என்றான் அவளுக்காக.

அதற்காக அம்மாவிடம் முறைப்பையும் வாங்கிக்கொண்டான்.

“எனக்கென்னமோ சரிப்படல. அப்புறம் உங்க இஷ்டம். இப்போவே என் பேச்சுக்கு இங்க மதிப்பு இல்ல” என லட்சுமி கடிந்துகொள்ள, அவள் நின்றுகொண்டே இருப்பதைப் பார்த்த அகிலன், கண்களால் கவிதாவை உட்காரச்சொன்னான்.

“அம்மா” என்றவன் அவர் பக்கத்தில் இடித்துக்கொண்டு உட்கார்ந்து, அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “நம்ம ப்ரியா நல்லா படிச்சு முடிச்சப்பறம், கல்யாணம் ஆயிடுச்சேன்னு வீட்ல உட்கார்ந்தா நமக்கு கஷ்டமால்ல இருக்கும்… அது போல…” என அவன் முடிக்கும் முன் அவர் தொடர்ந்தார்.

“கண்டிப்பா கஷ்டமா இருக்காது அகில். கல்யாணம் ஆயிடுச்சுன்னா குடும்பம் தான் முக்கியம். அப்புறம் தான் மத்ததெல்லாம். அது யாரா இருந்தாலும் சரி” என்றார் கவிதாவைப் பார்த்து.

“ம்மா… மா. என்னால குடும்பமும் பிஸ்னஸும் பாத்துக்க முடியும்ன்னு நம்பறீங்கல்ல… அதுபோல தான் ம்மா. அவளால முடியும்ன்னு நினைக்கறா. படிச்ச படிப்பு வீணாகக்கூடாது. முடியற வர போகட்டுமே” என்றான் மறுபடியும் அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக.

‘அதென்ன முடியறவரை? என்னால முடியும்’ என மனதில் கூறிக்கொண்டாள் கவிதா.

“நாங்க இங்கயே இருக்க முடியாது அகில். செங்கல்பட்டு போகணும். ப்ரியா’க்கு காலேஜ் இங்க இருந்து ரொம்பத் தூரம். நான் இருக்கேன் இப்போ… சரி. இல்லாட்டி அவ தானே வீட்டை பாத்துக்கணும்.

கல்யாணத்துக்கு முன்னாடி தான் நீயே சமைச்சு சாப்பிட்ட. ஆனா இப்போ…? என்னமோ பண்ணுங்க. இந்த மனுஷன் எதுலயும் தலையிடமாட்டாரு. எப்பப்பாரு மொபைல் தான்” என்று புலம்பிக்கொண்டு அவர் அறைக்குப் போய்விட்டார்.

அவர் சென்றவுடன்…

“ஏய்… நான் என்ன உனக்கு சமையக்காரியா? என்னமோ கல்யாணத்துக்கு முன்னாடி நீயே சமைச்சயாம். ஏன் சமையக்காரி வெச்சுக்க வேண்டியதுதானே. டூ மச் இதெல்லாம் சொல்லிட்டேன்” என மெதுவாக அவன் கேட்கும் படியாக அவள் சொல்ல, அவன் சிரித்துவிட்டான்.

“சிரிக்காத. காண்டாவுது” என்றவள் திடீரென “அவங்க எப்பவும் இங்க இருக்க மாட்டாங்களா? உன்கூட நான்” என்று ஆரம்பித்து ‘உன்கூட நான் இங்க தனியா இருக்கணுமா’ என சொல்லவந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, யோசனையுடன் அவனைப் பார்க்க…

“ஹாஹாஹா. ப்ரியா காலேஜ் அங்கேயிருந்து தான் பக்கம். அப்புறம் நான் என்ன பேயா இல்ல பூதமா. இப்படி யோசிக்கற” என குறும்புடன் கேட்க, “அதெல்லாம் எவ்வளவோ பரவால்ல. உன்னோட கம்பேர் பண்றப்ப” கவிதா சொன்னவுடன்… 

“அப்படியா பேபி? என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு?” அவன் ஆச்சர்யம் கலந்த குறும்புடன் சிரித்தான்.

அவன் சிரிப்பதே சரியில்லை, மற்றும் பேச்சு மிகவும் சாதாரண முறையில் சென்றுகொண்டிருப்பது ஏதேதோ தோன்ற “எனக்கு தூக்கம் வருது” என்று அவசரமாக மேலே சென்றுவிட்டாள்…

அவள் அவசரமாகச் சென்றதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, சிறிதுநேரத்தில் அவனும் சென்றான்.

அவன் அறைக்குள்ளே நுழைய, அவள் மெத்தையில் புதிதாகப் போடப்பட்ட தலையணைகளைக் கட்டம் கட்டியிருந்தாள். அதைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே…

“ஸ்வீட்டி. நீ சரியா சாப்பிடல. நைட் பசிக்கும். அதான் உனக்கு ப்ரெட் எடுத்துட்டு வந்துருக்கேன். ரெண்டு சாப்பிட்டு படுத்துக்கோ” என ஒரு டப்பாவை நீட்டினான்.

மனதுக்குள் மின்னலென ஒரு சிறிய சந்தோஷ கீற்று. தனக்கு நடு இரவில் பசி எடுக்கும் என்று எப்படித் தெரியுமென.

ஏனோ அவன் சில இடங்களில் காட்டும் அக்கறை மனதில் ஒரு மூலையில் சின்ன நிறைவைத் தந்தாலும், பெரும்பாலும் எந்த அக்கறையும் வேண்டாம்… அதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம் என்று அதே மனது அடம் பிடிக்கவும் செய்தது.

அதன் விளைவே “ஸ்வீட் ப்ரெட்’டா…? எனக்கு ஸ்வீட் பிடிக்காது” என்றாள் அவனைப் பாராமல். ‘உனக்கு ஸ்வீட் பிடிக்காதா?’ என நினைத்துப் புன்னகைத்துக்கொண்டு “இது அல்மன்ட் ப்ரெட்” என்றான் புன்னகை மாறாமல்.

எதிர்த்துப் பேசினால் இவன் விடமாட்டான் என்றெண்ணி “நான் தான் வேணாம்ன்னு சொல்றேனே… இப்போ ப்ரெட் சாப்ட்டா ஒரு மாதிரி இருக்கும். எனக்கு தூக்கம் வருது ப்ளீஸ்” என பொறுமையாக அவள் சொன்னவுடன்…

“சரி. டேபிள்’ல வெக்கறேன். வேணும்ன்னா நைட் சாப்டுக்கோ. அப்புறம்… உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான் டப்பாவை மேஜை மேல் வைத்துவிட்டு.

அவள் என்ன என்பது போல் பார்க்க, “அதான் இவ்வளோ பில்லோ இருக்கே. நான் நல்லா தூங்கி நாலு நாள் ஆச்சு. அப்படியே நானும் இங்கயே படுத்துடறேனே. நீ ரெண்டு பில்லோவ நடுல போட்டுக்கோ” என சொல்லிக்கொண்டே அவள் பேசும்முன் படுத்துவிட்டான்.

தனக்காகப் படுக்கை வரை மாற்றியனவனை எதுவும் சொல்லமுடியாமல்… மேலும் அவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படித் தூங்குவது என முழித்துக்கொண்டிருந்தாள் கவிதா.

அவள் பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்து… அவள் புறம் திரும்பியவன் “டோன்ட் ஒர்ரி. நான் கோட்ட தாண்ட மாட்டேன். நீயும் தாண்டிராத ஸ்வீட்டி” என மர்மமாகப் புன்னகைத்துவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்.

‘என்மேல தான எனக்கு பயமே… ஏதாச்சும் புரண்டு கிரண்டு வந்துட்டேன்னா…’ என நினைத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் முழித்திருந்த கவிதாவும் உறங்கிவிட்டாள்.

நடு இரவில், தூக்கம் களைந்து உறங்க முடியாமல் எழுந்தாள் கவிதா. பசி வயிற்றைக் கிள்ளியது.

திரும்பி அகிலனைப் பார்க்க, ‘அட்டென்ஷன்’ போன்று அதே நிலையில் உறங்கிக்கொண்டிருந்தான்.

அவன் பக்கம் இருந்த டேபிளில்… அவன் வைத்த டப்பா தெரிந்தது. கண்கள் மின்ன, மெதுவாக இறங்கி அதிலிருந்த பிரட்’டை எடுத்து உண்டாள்.

‘இவனுக்கு எப்படித் தெரியும் எனக்குப் பசிக்கும்ன்னு? ப்ச். இதென்ன பெரிய ராக்கெட் சயின்ஸா??? உலகத்துல முக்காவாசி பேருக்கு நடுராத்திரி பசிக்கும்’ என நினைத்தாலும்… அவன் அக்கறையை எண்ணி கொஞ்சம் புன்னகைக்கவும் செய்தாள்.

அடுத்த நாள் காலை, சீக்கிரம் எழுந்தவள், அடுப்பங்கரைக்குள் சென்று அவளுக்கு காபி போட்டுக்கொள்ள, சிறிதுநேரத்தில் லட்சுமி வந்தார்.

அவள் குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க… “உங்களுக்கு என்ன போடட்டும் ஆண்ட்டி?” எனக் கேட்க, அவர் மனம் கொஞ்சம் சாந்தமடைந்தது.

“என்ன ஆண்ட்டி? அத்தைன்னு கூப்பிடு… எனக்கு காபி ஸ்ட்ராங்’கா. அப்படியே மாமாக்கு சுகர் கம்மி… ஒரு டீ ஸ்பூன் போதும். அகில்’க்கு காபி பால் கலக்காம, சுகர் ஒரு டீ ஸ்பூன்… நான் ப்ரியாக்கு பூஸ்ட் போடறேன்” என்று முடிக்க, திருத்திருவென முழித்தாள் கவிதா.

அவள் முழிப்பதைப் பார்த்த லட்சுமி, “போகப் போகப் பழகிடும். நீ அகிலுக்கு எடுத்துட்டு போ. நான் எங்களுக்கு போட்டுக்கறேன். குடுத்துட்டு சீக்கரம் வா. ப்ரியா காலேஜ்க்கு போறா. காலைல… மதியத்துக்கு சமைக்கணும். அகிலும் ஆஃபீஸ் போறான்” என்றுவிட்டு வேலையில் மூழ்கினார்.

அவள் மனதிலோ ‘ஹலோ மிஸ்ஸஸ் லட்சுமி… நானும் ஆஃபீஸ் போறேனே… அதப்பத்திக் கூட கொஞ்சம் சொல்லலாமே? இதுல சாருக்கு ரூம்ல போய் காபி. கம்முனு சக்கரைக்குப் பதிலா உப்பு போட்டுடலாமா?’

‘ச்ச ச்ச. நேத்து ப்ரெட்’லாம் தந்தான்’ என தனக்குத் தானே புன்னகைத்துக்கொண்டு அவனுக்குத் தர எடுத்துச்சென்றாள்.

சிறிதுநேரத்தில், வீடே ரெண்டாகும் அளவிற்கு ப்ரியா பறந்துகொண்டிருந்தாள்.

“அம்மா… ரெடியா? லேட் ஆச்சுமா…” என கூப்பாடுபோட, “கவிதா… நீ இத கொஞ்சம் பாரு. நான் அவளைப் போய்ப் பார்க்கறேன்” என்று கவிதாவிடம் ஒரு வேலையைக் கொடுத்திவிட்டு, ப்ரியாவைப் பார்க்க சென்றார் லட்சுமி.

இது அனைத்தும் புதிதாக இருந்தது கவிதாவுக்கு. ஒவ்வொருமுறை சின்னச் சின்ன வேலைகளுக்கு ப்ரியா அம்மாவை அழைக்கும்போதெல்லாம் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்தது.

எட்டு வயதிலிருந்து இதுவரை தனக்குத் தேவையானதைத் தானே செய்துகொள்வாள். செய்துகொள்வாள் என்பதை விடக் கேட்கவும் செய்யவும் யாருமிருந்ததில்லை. ஹாஸ்டலே உலகம்.

அம்மா என்ற அழைப்பே மறந்திருந்தது. அது இதுவரை பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று… அம்மா மகள் உறவை நேரில் பார்க்கும்போது மனதில் இதுவரை என்றும் இல்லாத ஆசையெல்லாம் அலைமோதியது.

கண்கள் கலங்கப் பார்க்க, இப்போது கலங்கினால் கேள்வி கேட்பார்கள் என மெளனமாக வேலையில் தன்னை ஈடுபடுத்துக்கொண்டாள்.

“ம்மா மா மா. ப்ளீஸ் மா… ப்ளீஸ் மா” என கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் ஓடி வந்தாள் ப்ரியா.

“ஏன்டி ஏழுகலுத வயசாச்சு. இன்னமும் ஊட்டிவிடணுமா… ஒழுங்கா போய் சாப்பிடு” என லட்சுமி அதட்ட, “ப்ளீஸ் மா… ப்ளீஸ் மா. ஆஹ்” என வாயைத் திறந்தாள் ப்ரியா தோசையை வாங்க. பின் அம்மா மகளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார்.

“இன்னும் ரெண்டு வாய் வாங்கிக்கோடி” என திட்டினாலும் ஊட்டிவிட்டார். கவிதா அவர்களைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைக்க மட்டுமே செய்தாள்.

‘ஹாஸ்டலில் காலை உணவு கிடைக்கும். சாப்பிட்டால் சாப்பிடு… இல்லாவிட்டால் போ. பசித்தால் நீயே சாப்பிடுவாய். பிடித்ததுக்கூட சிலசமயம் கிடைக்காது. கிடைப்பதை பிடித்தமாக்கிக் கொள்ளவேண்டும்’ என்ற அணுகுமுறையே இருந்தது.

‘அவள் வாழ்க்கையில் இப்போது சாப்பாடுமட்டுமில்லை. வாழ்க்கை துணையையும்கூட, பிடித்தமாக்கிக்கொள்ளவேண்டுமோ?’ என்ற நிலைமையே இருந்தது.

‘தனக்கு ஏன் இதெல்லாம் நடக்கவே இல்லை? அம்மாவுடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ? ஒருவேளை அம்மா இருந்திருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு இருந்திருப்பேனோ?’

‘அஜய் தான் என் விருப்பம், இந்தத் திருமணம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்க முடியுமோ’ என பல எண்ணங்கள் அவள் மனதைத் தாக்க…

“ஓய்” என்ற மிக அருகில் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினாள்.

அங்கே அகிலன். சட்டெனக் கண்ணில் தேங்கியிருந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

“ஏ ஏன் அழற… என்ன ஆச்சு” பதறிக்கொண்டு அவன் கேட்க, “ஒன்னுமில்ல. ப்ளீஸ் சத்தம் போடாத” என்றாள் மெதுவாக.

“அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா…? அம்…” என அவன் கூப்பிடும்முன் “ஐயோ ஒன்னும் இல்ல… ப்ளீஸ். பழசெல்லாம் ஞாபகம் வந்துச்சு. பெருசு பண்ணாத” என கண்களால் கெஞ்ச “டேய் அண்ணாஆஆ” என ப்ரியா கத்தியதில் ப்ரியா புறம் திரும்பினான்.

“அண்ணா ண்ணா. நீ பஸ் ஸ்டாப்ல விடுண்ணா. நேரம் ஆச்சு” கேட்டுக்கொண்டு ப்ரியா அவன் முன் வந்து நின்றாள்.

அவன் மனதிலோ ‘கவிதா பழையது என்று சொன்னது அஜய்யாக இருக்குமோ?’ என்று எண்ண, “அண்ணாஆஆஆ” என்று சத்தத்தில் தன்னிலைக்கு வந்தான்.

“என்ன கொண்டு விடுண்ணா. ஆல்ரெடி லேட். அப்பாவோட போன ஸ்லோ’வா போவாரு” ப்ரியா மறுபடியும் கேட்க, “சரி… எல்லாம் எடுத்து வெச்சுக்கோ” என்றவன் கவிதாவின் புறம் திரும்பி…

“நான் ப்ரியாவ விட்டுட்டு வந்துடறேன். நான் உன்ன ஆஃபீஸ்ல ட்ராப் பண்றேன்” அவள் பதில் சொல்லுமுன் சென்றுவிட்டான்.

அவன் திரும்பி வரும்போது கவிதா இல்லை. அவன், லட்சுமியிடம் கேட்டபோது, ‘அவசரமாகச் செல்லவேண்டும். ஆட்டோ எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்’ என்றார் லட்சுமி.

அங்கே ஸ்டேஷனுக்குள் நுழைந்த கவிதா, அலுவலகத்திற்குச் சீக்கிரம் செல்லப் பிடிக்காமல், ட்ரெயினிலும் ஏறாமல், அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தாள்.

அம்மாவின் ஞாபகம் அதிகமாக, ஏனோ மனது அமைதியற்றிருந்தது. தனிமை வாட்டியது. அப்பாவிடம் பேசலாம் என்றால், இதுவரை மனது விட்டு அவரிடம் பேசியதில்லை.

‘தனக்கென்று யாருமில்லையே… மனம்விட்டு பேச ஒருவர் கூட இல்லையே…’ சுயபச்சாதாபம் அதிகமானது…

யாரிடமும் சொல்ல முடியாமல், அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துப் புழுங்க, அது ஒருவிதமாக மூச்சு முட்ட… அழுகும் நிலைக்குச் சென்ற போது, அவள் அருகில் வந்தமர்ந்தான் அகிலன்.

அவன் வந்ததைப் பார்த்தவுடன், தன்னையும் மீறி, கண்ணில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வெளியேறியது. மனதின் கடைக்கோடியில் மழைச்சாரல்… தனக்காக அவன் வந்ததை நினைத்து.

ஆனாலும் அதை ஏற்க மனமொப்பாமல் குடைக்கொண்டு தடுத்தாள் அந்த அக்கறை தனக்கு வேண்டாமென்று.

13
3
1

2 thoughts on “என்னுள் நீ வந்தாய் – 9

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved