தனிப்பெரும் துணையே – 12

தனிப்பெரும் துணையே – 12

வீட்டில் இப்படி என்றால், பள்ளியில் வேறு விதம். இத்தனை நாட்கள் அவனுக்கு இருந்த மனநிலையில், யாருடனும் பேசாமல், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என சரியாக கவனிக்காமல் இருந்தான்.

ஆனால் அன்று வகுப்பில் மற்ற மாணவர்களை பார்த்தான். முந்தைய வருடம் அவனுடன் படித்தவர்கள்தான். நன்றாக பேசியவர்கள்தான். ஆனால் தற்போது யாரும் அவனுடன் பேசவில்லை. அவனாக சென்று பேசினாலும், அவனை தவிர்த்தார்கள்.

உணவு சாப்பிடும்போது கூட தனியாகவே சாப்பிட்டான். ‘ஏன் தன்னை தவிர்க்கிறார்கள்’ என்று தன் கடந்த வருட நண்பனிடம் கேட்ட போது, “உன்கூட பேசினா உன்னை போலவே எங்களுக்கும் அம்மா இல்லாம போய்டுவாங்கன்னு விபின் சொன்னான். அதனால நாங்க யாரும் உன்கிட்ட பேசமாட்டோம் பா” என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் சென்றுவிட்டான்.

சொல்லத்தெரியாத ரணம் மனதில் உருவானாலும், எதிர்த்து வாதிட, போராட சக்தியில்லை என நினைத்து, செழியனும் யாரிடமும் பேசாமல் ஒதுங்கிவிட்டான்.

ஓரிரு நாட்களுக்குப் பின், “அப்பா. நான் ஸ்கூல் முடிஞ்சு வந்து, இனி நம்ம வீட்லயே இருக்கட்டா பா?” தந்தையின் பக்கத்தில் படுத்திருந்த செழியன் கேட்டான்.

“என்ன ஆச்சு செழியா? யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா?” பதட்டத்துடன் அவர் கேட்க…

“இல்ல இல்லப்பா. எனக்கு நம்ம வீட்லயே இருந்து பழகிடுச்சு. நான் சமத்தா இங்கயே இருக்கேன். ஓகே வா ப்பா” என்று தன்மையாக பேசினான்.

“சரிடா. ஆனா யாரு சாயந்திரம் உனக்குப் பால் பிஸ்கட் தருவா?” ஸ்வாமிநாதன் யோசித்துக்கொண்டே கேட்டவுடன், “நீங்க சொல்லிக்குடுங்க பா. நானே பார்த்துக்கறேன்” என்றான்.

‘ஏதோ நடந்துள்ளது ஆனால் மகன் தன்னிடம் சொல்லாமல் தவிர்க்கிறான்’ என்று புரிந்தது அவருக்கு. அவரும் தம்பி வீட்டில், ‘உதவி செய்கிறோம்’ என்று சொன்னபோது மனமில்லாமல்தான் சம்மதித்திருந்தார்.

அடுத்த நாள் காலை, மகனை அழைத்து எப்படி பால் சூடு செய்து குடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து, அவனுக்கு உணவு செய்து தந்து பள்ளிக்கு அனுப்பினார்.

விஷயத்தை விஷ்வநாதனிடமும் மங்களத்திடம் சொன்னார். அவர்களுக்கு மனவருத்தம். விவேக் முகத்தில் வெற்றிப் புன்னகை.

செழியன் அன்று மாலை, பள்ளியில் இருந்து வந்தவுடன், தண்ணீரில் வைக்கப்பட்டிருந்த பாலை, மண்ணெண்ணெய் அடுப்பில் வைத்துக் காய்ச்ச, திடீரென பால் பொங்கி வழிந்தவுடன், என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவசரமாக பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுக்க கை வைத்தவுடன்… கையை சுட்டுக்கொண்டான். பால் முற்றிலும் பொங்கிவிட்டது. கையில் ஏற்பட்ட எரிச்சலை விட, ‘தந்தை திட்டுவாரோ’ என்ற பயம்தான் உள்ளுக்குள்.

கண்களில் கண்ணீருடன் கையைக் கூட கவனிக்காமல் உட்கார்ந்திருந்தான். அன்று கொஞ்சம் சீக்கிரமே வந்துவிட்டார் ஸ்வாமிநாதன்.

“செழியா. இந்த பூட்டை இனி போட்டுட்டு உள்ள இருடா. அப்பா வந்து சாவி கேட்டா மட்டும் தரணும் சரியா” என்று சொல்லிக்கொண்டே அவர் உள்ளே வர, முகத்தில் பயத்துடன், கண்களில் கண்ணீருடன் இருந்த மகனை பார்த்தவர், பதட்டத்துடன் என்ன ஆயிற்று என கேட்க, அழுதுகொண்டே நடந்ததை சொன்னான் செழியன்.

“ரொம்ப சாரி பா. பால் வேஸ்ட் பண்ணிட்டேன்” அவன் அழுக, பதறிக்கொண்டு ஸ்வாமிநாதன் அவன் கையை பார்த்தார். அந்த சின்ன கையில் கொப்புளம் ஆகியிருந்தது. அவர் கண்களும் கலங்கிவிட்டது. மனதில் சொல்ல முடியாத வலி. மனைவியின் போட்டோவைதான் பார்த்தார்.

பின் அவசரமாக அவனை அழைத்துக்கொண்டு மருந்து வாங்கி போட்டுவிட்டவர், உடனே ஒரு ஃபிளாஸ்க் மற்றும் ஹார்லிக்ஸ் வாங்கிக்கொண்டார்.

அவற்றை வாங்க அவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்து, அது பத்தாமல் போக, கடன் வைத்ததையும் பார்த்தான் செழியன்.

இரவு வீட்டில் உணவு செய்து செழியனுக்கு ஊட்டிவிட்டபடியே, “நாளைக்கு அப்பா சூடு தண்ணி போட்டு ஃபிளாஸ்க்ல வச்சிடறேன். நீ ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே தண்ணில ஹார்லிக்ஸ் கலந்து குடி. கட்டி ஆகறதுக்குள்ள கலக்கிடணும். அப்பா சீக்கிரம் வந்துடறேன்” என்றார் கலங்கிய கண்களுடன்.

செழியனும் சரி என்றான்.

இரவு ஸ்வாமிநாதன் அவருக்கு டீ போட்டுக்கொண்டிருக்கும்போது, சமையலறைக்குள் சென்று பார்த்த செழியன், பால் இல்லாமல் அவர் போடும் செய்முறையை மனதில் குறித்துக்கொண்டான்.

அடிக்கடி ஹார்லிக்ஸ் வாங்க தந்தை கஷ்டப்படுவார். அந்த கஷ்டம் தரக்கூடாது என மனதில் நினைத்துக் கொண்டான்.

நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நகர்ந்தது.

ஸ்வாமிநாதனுக்கு கல்லூரியில் வேலை கிடைத்துவிட்டாலும், இரண்டாவதாக இன்னொரு வேலையையும் எடுத்து செய்தார்… மதி சொன்ன வீட்டை வாங்குவதற்கு.

ஹாஸ்டல் சென்றபின், வருடத்திற்கு ஒரு முறை கவிதா வந்தாள். அவள் வந்தபோதெல்லாம், அவளிடம் நிறைய மாற்றத்தைக் கண்டான் செழியன்.

எப்போதும் துறுதுறுவென இருப்பவள், தற்போது அமைதியாக… ஏதோ இழந்ததைப்போலவே இருந்தாள். அடிக்கடி கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றுவிடுவாள்.

முதலில் அதற்கான காரணம் புரியவில்லை. நாட்கள் செல்ல செல்லதான் அவனுக்கு புரிந்தது.

தனக்காவது தந்தை உடன் இருக்கிறார். ஆனால் அவள், வீட்டில் உள்ளவர்களை விட்டு பிரிந்து எங்கோ தனியாக இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. கஷ்டமாகவும் இருந்தது. இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலை.

கேலண்டரில் வருடங்கள் மாறியதே தவிர, செழியன் வாழ்க்கை மாறாமல் அப்படியேதான் இருந்தது. மனதில் ஒரு அழுத்தம் எப்போதும் இருந்தாலும், அதனுடன் வாழக் கற்றுக் கொண்டான்.

ஆரம்பத்தில், பள்ளியில் அவனை ஒதுக்கியே வைத்தனர் உடன் படிப்பவர்கள். அவர்கள் பேச்சில் எப்போதும் ஒரு ஏளனத்தைக் கண்டான்.

வெகு சிலரே அவனிடம் பேசினார்கள். தோழமை என்ற உணர்வில் பேசினார்களா என்று தெரியவில்லை செழியனுக்கு.

ஸ்வாமிநாதன் அவருக்குத் தெரிந்த உணவை சமைத்துக்கொடுப்பார். அதைப் பார்த்து கேலி செய்தனர்.

பள்ளி சீருடை, அவனுடைய புத்தகப்பை, என்று அனைத்தையும் பார்த்து கிண்டல் செய்தனர். முதலில் அழுகை வந்தாலும், போக போக எதையும் காதில் வாங்காமல் இருக்க கற்றுக் கொண்டான்.

எதற்காக அனைவரும் தன்னை இப்படி ஒதுக்குகிறார்கள் என்று முதலில் புரியவில்லை. பின் நாட்கள் செல்ல செல்ல, அதற்கு காரணமானவன் அந்த வேலு, அவன் தம்பியின் மூலம் இப்படி செய்கிறான் என புரிந்துகொண்டான்.

காரணம் என்ன என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. சுற்றியிருப்பவர்களை வெறுத்தான். தனிமையையே விரும்பினான்.

படிப்பில் எப்போதுமே முதலிடம்.

சிலர் மனப்பாடம் செய்து படித்து முதல் மதிப்பெண் எடுப்பார்கள். இன்னும் சிலர், மதிப்பெண் பற்றியெல்லாம் கவலைப்படாமல் படிப்பதை புரிந்து படிப்பார்கள். ஆனால் செழியன், கலவையாக இருந்தான்.

புரிந்து படித்து, மூளையில் ஏற்றி, கடினமாக படித்து, முதலிடம் வருவான்.

பல தருணங்களில் மனதின் அழுத்தம் அதிகமாகும்போதெல்லாம், எதற்கு இந்த வாழ்க்கை என நினைக்கும்போதெல்லாம், இப்படி ஒரு வாழ்க்கை வேண்டுமா என யோசிக்கும்போதெல்லாம், கவனத்தை படிப்பில் திருப்பினான்.

அவனின் மன அழுத்தத்துக்கு, ஒரே ஆறுதல், படிப்பு மட்டுமே என்று இருந்தான்.

சில வருடங்களில், மதி ஆசைப்பட்ட வீட்டை லோன் எடுத்து வாங்கினார் ஸ்வாமிநாதன்.

செழியன் தனக்கு மொட்டை மாடியில் உள்ள தனி அறைதான் வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டான். அது அவனை இன்னமும் தனிமைப்படுத்தியது. அதை விரும்பவும் செய்தான் அவன்.

ஸ்வாமிநாதன் கிட்டத்தட்ட, ஒரு இயந்திரம் போல சுற்றிக் கொண்டிருந்தார். மகள் கவிதா பாலிடெக்னிக்கில் படிப்பதற்கு, செழியன் படிப்பிற்கு, வீட்டுக்கடன் என நிறைய செலவுகள் இருக்க, வேலையிலேயே தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார்.

செழியன் நன்றாக படித்து, பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தான்.

யாருடனும் ஒட்டாமல் தனிமை மட்டுமே என்று இருக்க, அவன் வாழ்க்கையில் அழகாக நுழைந்தாள் இந்துமதி.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது அவன் பள்ளியில் சேர்ந்தாள்.

செழியன்தான் பள்ளியில் முதலிடம் என தெரிந்து, அவனிடம் பேச வந்தாள். அவனை முதலில் கவர்ந்தது அவள் பெயர். இந்துமதி. மதி, தன் அம்மாவின் பெயர்.

அதிகம் பேசாத செழியன் அவளிடம் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசினான். அவளும் அவனுடைய கடந்தகால வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்காமல், நன்றாக பேசினாள்.

நாட்கள் செல்ல செல்ல, அவளுடன் கொஞ்சம் அதிகமாகவே பேச ஆரம்பித்தான். அவளுக்குப் படிப்பில் உதவினான். அவளும் அவனுக்காக வீட்டு உணவு, சின்ன சின்ன பரிசுகள் என கொடுப்பாள்.

முதலில் வேண்டாம் என மறுத்தான். பின், அவள் வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக்கொண்டான். இருவருக்குள்ளும் அழகான நட்பு வளர்ந்தது.

இதுவரை தன் வாழ்வில் தோழமை என்று யாரும் இல்லாமல் இருக்க, இந்துமதியை மிகவும் பெரிதாக நினைத்தான். அவள் நட்பை பொக்கிஷமாக காத்தான். அவளுடன் இருக்கும் தருணங்களில், அவன் மனம் லேசாக இருப்பதாக உணர்ந்தான்.

மனதளவில் ஏற்பட்ட பல கசப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதாக அவன் நினைக்க, தன் வாழ்வில் அடுத்த ஏமாற்றம்… அடுத்த இழப்பு… இந்துமதி வடிவில் காத்திருக்கிறது என்று தெரியாமல் பள்ளிப்படிப்பை முடிக்க தயாரானான்.

***

செழியனும் இந்துமதியும் ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருந்து, பள்ளி படிப்பை முடித்தனர்.

செழியன் எப்போதும் போல, பள்ளியில் முதலிடம்.

ஸ்வாமிநாதனுக்கு மகன் கம்ப்யூட்டர் குரூப் எடுத்து படித்து மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால் செழியனுக்கோ, மெக்கானிக்கல் குரூப் எடுத்து படித்து, அது சார்ந்த துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்பது கனவு.

அதற்கு சம்மதிக்கவில்லை ஸ்வாமிநாதன். அவருக்குத் தேவை படித்தவுடன் வேலைவாய்ப்பு. அதுவும் மதிக்கத்தக்க வேலை, கைநிறைய வருமானம். தன்னைப்போல மகன் கஷ்டப்படக்கூடாது என்பதே அவர் எண்ணம்.

செழியனுக்குத் தெரியும், அவன் மதிப்பெண்ணுக்கு, மிகவும் பிரபல கல்லூரியில் அவன் விருப்பப்படும் பிரிவு கிடைக்கும் என்று.

என்ன செய்வது என தெரியாமல், உடனே இந்துமதிக்கு அழைத்தான். அவள் தந்த அறிவுரை, ‘இந்த படிப்புதான் உன் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. எது படித்தால் மனநிறைவுடன் படித்து நல்ல வேலைக்கு போக முடியும் என்பதை யோசி’ என்றாள்.

அதற்கு நொடிப்பொழுதில் அவன் தந்த பதில், ‘மெக்கானிக்கல் என்பதுதான்.

அவள் புன்னகையுடன், ‘அப்போ அதையே செலக்ட் செய். அப்பாவிடம், ஒருவேளை மெக்கானிக்கல் சார்ந்த துறையில் வேலை கிடைக்கவில்லை என்றாலும், எந்த பிரிவு எடுத்தாலும் ஐடியில் வேலை நிச்சயம் கிடைக்கும். கவலை பட வேண்டாம் என்று சொல் என்றாள். செழியனும் சரி என்றான்.

இருந்தும் தந்தையிடம், அது குறித்துப் பேச சின்ன தயக்கம். கவுன்சிலிங் நாளும் வந்தது. ஸ்வாமிநாதனும் செழியனும் உள்ளே செல்ல, அவன் நினைத்தது போலவே, எந்த பிரிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதை சொன்னபின், தந்தையை பார்த்தான்.

சில பல போராட்டத்துக்குப் பின், இந்துமதி சொன்னதையும் சொல்லி, அவரை ஒருவழியாக சம்மதிக்க வைத்து, மெக்கானிக்கல் தேர்வு செய்தான்.

‘எந்த போராட்டமில்லாமல், தன் வாழ்வில் தானே முடிவெடுக்கும் நாள் எப்போது வரும்’ என்று நினைக்க தோன்றியது அவனுக்கு.

இந்துமதியும் அவள் வீட்டின் பக்கத்தில் இருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்தாள்.

தினமும் பேசுவார்கள். அவன் நடந்ததை அவளிடம் சொல்வான். அவளும் அவள் கல்லூரி குறித்துப் பேசுவாள். அடிக்கடி சந்தித்தனர்.

செழியன் தனது துறையில் நன்றாக படித்தான். ஆசிரியர்கள் அவனின் திறமையை பார்த்து வியந்தனர்.

ஆனால் எப்போதும் போல யாருடனும் பேசமாட்டான். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பான். இந்துமதியும் பலமுறை சொல்லிவிட்டாள். சகஜமாக இரு என்று. ஏனோ அவனால் இருக்க முடியவில்லை.

ஒருமுறை இருவரும் சந்திக்கும் போது, “செழியா அங்க பாரேன். அந்த பொண்ணு உன்ன சைட் அடிக்குது” என அவனை கிண்டல் செய்ய, அந்த பெண் யார் என்று பார்க்கக்கூட அவன் திரும்பவே இல்லை.

“சாமியாரே. உன்ன கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு பாவம்டா” என தலையில் அடித்துக் கொள்ள, செழியன் முறைத்தான்.

“இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. இந்த வயசுல இதெல்லாம் பண்ணனும் செழியா. காலேஜ்ல ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி, லவ் பண்ணுடா. ஜாலியா இரு” அவள் சொன்னவுடன்,

“என்னயெல்லாம் யாரு லவ் பண்ணுவா சொல்லு? என்னைப் போல இருக்கவங்கள யாருக்கும் பிடிக்காது இந்து. மோர்ஓவர் எனக்கு அதுல இன்டெரெஸ்ட் கூட இல்ல. ஏன் நீ லவ் பண்ண வேண்டியதுதானே” என்றான்.

“ஏன், என் வீட்ல என்னை உப்புக்கண்டம் போடவா? லவ்னா அது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம். அப்புறம் படிக்கவே வேணாம்னு சொல்லி புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. ஏற்கனவே என்னோட மாமா வெயிட்டிங். அத்தை எப்போடான்னு இருக்காங்க முடிச்சு வைக்க” என்றாள் சலிப்புடன்.

பின், “ஆமா உனக்கென்ன குறை? பார்க்க நல்லா இருக்க. உன்ன மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க எந்த பொண்ணும் குடுத்து வச்சிருக்கணும். என்ன கொஞ்சம் அமைதியான டைப். அவ்ளோதான்” என்றாள் அவனைப் பற்றி நன்றாக தெரிந்திருந்த இந்துமதி.

இதுவரை ஒரு முறை கூட எந்த பெண்ணையும் தவறான நோக்கத்தில் பார்த்திடாது, அவனுடன் அவள் இருக்கும் நேரத்தில் அவன் எடுக்கும் சின்ன சின்ன சிரத்தை, அந்த பாதுகாப்பான உணர்வு, ‘நான் ஆண்மகன்’ என்று பெருமை பட்டுக்கொள்ளாமல், தலைக்கனமில்லாமல் அவன் இருப்பதை, அவள் நிறைய முறை பார்த்திருக்கிறாள்.

அது அவளுக்கு பிடிக்கும். அவள் வீட்டிலும் அவளை சுற்றிலும் இதுபோல ஆண்கள் ஒருவர் கூட இல்லையே என்ற மனவருத்தமும் வந்து செல்லும்.

இந்துமதி லவ், சைட் குறித்து வகுப்பு எடுத்தாள் அவனுக்கு. அப்போது செழியன், “அதெப்படி திடீர்னு ஒருத்தங்க மேல லவ் வரும்?” என்று கேட்க,

இந்துமதி, “எனக்கு மட்டும் தெரியுமா? ஆனா ஃபிரண்ட்ஸ் சொல்லுவாங்க செழியா. அது ஒரு ஸ்பார்க்காம். ஒருத்தரை பார்த்தவுடனே அந்த ஃபீல் வருமாம். அவங்களோட நடவடிக்கை, இல்ல ஏதோ ஒன்னு நம்மள அவங்ககிட்ட ஈர்க்குமாம். அவங்கக்கூட பேசணும், பழகணும் தோணுமாம். சத்தியமா எனக்கு இதுவரை யாரைப் பார்த்தும் தோனல. உனக்கு?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

அவனும் புன்னகையுடன் இல்லை என்று தலையசைத்தான். இப்படியாக இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார்.

இவர்கள் இருவரின் நட்பு வீட்டில் தெரியும். ஸ்வாமிநாதன் வேலை பார்க்கும் கல்லூரியில்தான் இந்துமதியின் குடும்பத்தில் பாதி பேர் படித்தனர். ஆகையால் அவர்களுக்கு ஸ்வாமிநாதனை தெரியும். செழியனை பற்றியும் தெரியும்.

அவ்வப்போது கவிதா காஞ்சிபுரம் வருவாள். அவளும் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். கவிதா, இந்துமதி, இருவரிடம் மட்டும்தான் கொஞ்சம் அதிகமாக பேசுவான்.

முன்பு போல இல்லாமல் கவிதா கல்லூரியில் சேர்ந்த பின், கொஞ்சம் கலகலப்புடன், சந்தோஷத்துடன் இருப்பதாக உணர்ந்தான் செழியன்.

ஆனால் அவனுக்கு அப்போது தெரியாதது, அந்த மாற்றத்திற்கு காரணம் அஜய். அஜய்யை அவள் விரும்புகிறாள் என்பது.

செழியன் படிப்பில் ஒவ்வொரு செமஸ்டரில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தான். இறுதியாண்டும் வந்தது. அப்போது கவிதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பித்தது.

செழியனுக்கு இந்துமதியுடனான நட்பும் ஆழமாக வளர்த்தது. எந்தவித பச்சாதாபத்தினாலும், பரிதாபத்தினாலும், பாவமெனவும் நினைத்து இந்துமதி பழகவில்லை. அந்த குணம்தான் அவனுக்கு மிகவும் பிடித்தது.

தினமும் அவளிடம் பேசியே ஆகவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது. பேசாமல் கடினம் என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அதில் துளியளவும் நட்பை தவிர வேறு எந்த விதமான எண்ணமும் இல்லை அவனிடம்.

இப்படி இருக்க, ஸ்வாமிநாதனின் மனநிறைவுக்காக ஒரு ஐடி கம்பெனியில் கேம்பஸ் மூலமாக வேலையை உறுதி செய்துகொண்டான்.

பின், இறுதி செமஸ்டரில் ப்ராஜெக்ட் செய்வதற்கான நேரமும் வந்தது. அதற்காக மிகவும் சிரத்தை எடுத்து வேலையில் இறங்கினான். அதுவும் நல்ல வடிவம் பெற்றது.

அந்த சமயம், கவிதாவின் கல்யாண வேலைகள் ஆரம்பித்தது. அகிலன் என்கிற ஒருவனை அக்காவுக்குப் பார்த்துள்ளதாக ஸ்வாமிநாதன் சொன்னார். அகிலனை பற்றி பெருமையாக பேசினார்.

செழியனுக்கு மிகவும் சந்தோஷம். அக்காவின் வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டது என்று.

அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள இந்துமதியை அழைத்தான். அழைப்பு செல்லவில்லை. பலமுறை முயற்சித்தான் பலனில்லை. ஏனோ ஒருவித ஏமாற்றம் அவனுள்.

ஒருபுறம் இறுதியாண்டு தேர்வுகள் ஆரம்பிக்க, இங்கே வீட்டில் கவிதாவின் திருமணம் நாற்பது நாளில் குறிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் ஒருபுறம் சீக்கிரம் நடக்க, இந்துமதியை சுத்தமாக தொடர்பு கொள்ள முடியவில்லை செழியனால்.

ரிட்டன் தேர்வுகள் முடித்து, ப்ராஜெக்ட் வைவா (viva) மட்டும் மீதம் இருந்தது.

அப்போதுதான், ஒரு நாள் வீட்டில் இருக்கும் போது, ஸ்வாமிநாதனை அழைத்திருந்தான் அகிலன்.

இருவரும் பேசப் பேச திடீரென ஸ்வாமிநாதன், “என்ன கல்யாணத்த நிறுத்தணுமா மாப்பிள?” என்று கேட்டபடியே, போனை கீழே போட்டவர், நெஞ்சை பிடித்துக் கொள்ள, இதை கேட்டுக்கொண்டிருந்த செழியன் அதிர்ந்து தந்தையிடம் சென்றான்.

சில நொடிகளில் அவர் வலி அதிகமாக, மயக்க நிலைக்குச் செல்லும் போது கவிதா அழைத்தாள். செழியனுக்கு கண்கள் கலங்கிவிட்டது. பேச்சு வரவில்லை.

அக்காவின் வாழ்க்கை என்ன ஆகுமோ, தந்தைக்கு என்ன ஆகுமோ என பல எண்ணங்களுடன், கவிதாவை வர சொல்லிவிட்டு, போனை வைத்தான்.

சில நிமிடங்களில், அகிலனிடம் இருந்து அழைப்பு வர, சொல்ல முடியாத கோபம் அகிலன் மேல் வந்தது செழியனுக்கு.

திருமணத்தை நிறுத்த சொல்லிவிட்டு, இப்போது எதற்கு மறுபடியும் அழைக்கிறான் என்கிற கோபம் அவனுள்.

அழைப்பை துண்டித்தான். சித்தப்பாவிற்குத் தகவல் சொல்லிவிட்டு, தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.

ஓரிரு மணி நேரத்தில் ஸ்வாமிநாதனுக்கு சிகிச்சை அளித்த பின், ‘மைனர் அட்டாக், பயப்படத் தேவையில்லை’ என்றனர். அவனுக்குள் கொஞ்சம் நிம்மதி. ஆனால், ‘அக்காவின் வாழ்க்கை’ என நினைக்க, அகிலன் மேல் ஆத்திரமாக வந்தது.

அந்த கோபத்திற்கு காரணமான அகிலன் சில நிமிடங்களில் அவன் முன் வந்து நின்றான்.

கொஞ்சம் பதட்டத்துடன் இருந்த அகிலன், சித்தப்பா விஸ்வநாதனிடம் ஸ்வாமிநாதன் குறித்து கேட்டான்.

‘செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போது எதற்கு வந்திருக்கிறான்’ என்று செழியன் நினைக்க, அகிலன் செழியனை பார்த்தவண்ணம் ஐசியுவிற்குள் சென்றான்.

அகிலன் மேல் கொலை வெறியில் இருக்கும் போது கவிதா அங்கே அழுதுகொண்டே வந்தாள். தந்தையை பற்றி அவளிடம் சொன்னபின், அகிலன் மேல் இருந்த கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட்டான்.

மனம் பாரமாக இருந்தது. இந்துமதியை அழைத்தான். பயனில்லை.

சில மணிநேரம் கழித்து தந்தையை பார்க்க சென்றபோது, உள்ளே ஸ்வாமிநாதன் அகிலனிடம் கைகூப்பி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இன்னமும் கோபம் அதிகமானது செழியனுக்கு.

‘எதற்கு அப்பா இவனிடம் கெஞ்ச வேண்டும்? கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று சொல்பவனிடம் எதற்கு கெஞ்ச வேண்டும்? அக்காவிற்கு வேறு மாப்பிள்ளை கிடைக்காதா என்ன?’ என்று அவன் மனம் கனன்றது.

இருந்தும் அவனால் நேரடியாக கேட்க முடியவில்லை. கவிதாவின் முகத்தில் துளியும் சந்தோஷமில்லை. அதைப் பார்க்க இன்னமும் கஷ்டமாக இருந்தது செழியனுக்கு.

கவிதாவிடம், ‘உனக்கு திருமணத்திற்கு சம்மதமா?’ என கேட்டான். அவளும் எதுவும் சொல்லாமல் ஆம் என்றாள் தந்தையின் உடல் நிலையை மனதில் வைத்து.

அவளுக்கே சம்மதம் என்கிறபோது, இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை செழியனுக்கு.

அப்போதுதான் வைவா நடப்பதற்கான நாளும் வந்தது. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது, புது எண்ணில் இருந்து அழைப்பு.

யோசனையுடன் அவன் எடுக்க, இந்துமதியின் குரல்.

அடுத்து அவள், ‘தனக்கு திருமணம் ஆகிவிட்டது’ என்பதுடன் இன்னும் சில விஷயங்களை சேர்த்து சொல்லிவிட்டு, ‘இனி உன்னுடன் பேசுவது கடினம் செழியா’ என்று சொன்னவுடன், செழியனின் மனதில் சொல்லமுடியாத அழுத்தம்.

எதுவும் பேசமுடியவில்லை அவளிடம். கண்கள் கலங்கியது. அதே மனநிலையில் வைவாவில் கலந்துகொள்ளச் சென்றான்.

***

2
3
2

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved