தனிப்பெரும் துணையே – 14

தனிப்பெரும் துணையே – 14

கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு அனைவரும் அகிலனின் செங்கல்பட்டு வீட்டிற்கு வந்துசேர, செழியன் தனக்கு இன்டெர்வியூ இருப்பதாக சொல்லிவிட்டு காஞ்சிபுரம் கிளம்பிவிட்டான்.

அன்று முழுவதும் மனதில் ஓடிய ஒரே பெயர் இசைப்ரியா!

எதற்காக தன் மேல் அக்கறை காட்டவேண்டும்? இதற்கு முன் யாருமே தன்னை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. அப்பா, அக்கா, இவர்கள் இருவரும் காட்டும் அக்கறை, அன்பு வேறு.

இந்துமதி கூட முதலில் நன்றாக படிப்பவன், பள்ளியில் முதல் மதிப்பெண் என்றெல்லாம் தெரிந்ததால் வந்து பேசினாள். இல்லையேல் பேசுவதற்கான தருணமே அமைந்திருக்காது. ஏதோ ஒரு வகையில் நன்றாக படிக்கவேண்டும் என்ற தேவை அவளுக்கு இருந்தது, அதனால் பேச ஆரம்பித்த பழக்கம், காலப்போக்கில் ஆழமான நட்பாக மாறியது. அவளே பலமுறை இதை கூறியிருக்கிறாள்.

ஆனால் எந்தவகையான ஆதாயமுமில்லாமல், நெருங்கிய பந்தமும் இல்லாமல்… ஒருவர் தன் மீது காட்டும் அன்பு, அக்கறை, இதுவே முதல் முறை. அதைப்பற்றி நினைக்க நினைக்க ப்ரியா அவனை ஆக்ரமித்துக்கொண்டே இருந்தாள்.

அவளை நினைக்கும்போதெல்லாம் மனம் கொஞ்சம் நெகிழ்ந்தாலும், அவள் மேல் ஏற்படும் இந்த சொல்லத்தெரியாத உணர்வு சரியா என்றும் யோசித்தான். யோசித்து யோசித்து இரவு தூக்கம் போனதுதான் மிச்சம்.

அடுத்த நாள் ரிஸப்ஷனுக்குச் சென்னை வந்து சேர்ந்தான் செழியன்.

வந்ததும் அக்காவிடம் பேசிவிட்டு ஒரு ஓரத்தில் உட்கார, அந்த இடத்தை சுற்றிப்பார்த்தான். அது அகிலன் பிஸ்னஸ் வட்டாரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்த விருந்தினர்களில் பாதி பேர் சென்னையில் பெரிய ஆட்கள்… கட்டுமானத்துறையில். அதுவே காட்டியது அகிலனின் செல்வமதிப்பை.

அதை நினைக்கும்போது, ‘ப்ரியாவை பற்றி யோசிக்கும் தகுதியாவது இருக்கிறதா தன்னிடம்?’ என்ற தன்னிலை அலசல் ஆரம்பித்தது செழியனுக்கு.

‘சொல்லிக்கொள்ளும்படி குடும்பம் என்ற ஒரு அமைப்பு இல்லை. சொந்தமாக அப்பா வாங்கிய வீட்டை தவிர வேறு ஒன்றும் இல்லை. தன்னிடம், எதுவுமே இல்லை. எந்தவகையிலும் அவளுக்குத் தகுதியானவன் தானில்லை’ என யோசிக்க, கண்கள் ப்ரியாவிடம் நின்றது.

அவனைப்பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள். இன்றும் அளவான மற்றும் நேர்த்தியான அழகு. அவனும் புன்னகைக்க முயல, ஏதோ ஒன்று அவனை தடுத்தது. சின்னதாக புன்னகைத்துவிட்டு திரும்பிக்கொண்டான்.

பல கட்ட யோசனைக்குப் பின், ‘ஏமாற்றம் புதிதா என்ன எனக்கு? ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எதுவுமே எனக்கு நிரந்தரம் இல்லை. தேவையில்லாத எண்ணங்களை அவளிடம் வளர்த்துக்கொண்டு, பின்நாட்களில் கஷ்டப்பட வேண்டாம். முதலிலேயே இதை நிறுத்திக்கொள்வோம். அவளிடம் பேச நினைத்த, அக்கா குறித்த விஷயத்தை மட்டும் பேசுவோம்’ என்ற முடிவுக்கு வந்தாலும், மனது கொஞ்சம் வலித்தது.

அவளைத் தனியாக பார்த்தபின், அவளிடம் அவள் அண்ணன் பற்றி பேச ஆரம்பித்தான்.

அவன் என்ன சொல்லவருகிறான் என்று முழுதும் கேட்காத ப்ரியா, அவள் அண்ணனை பற்றி அவன் பேச ஆரம்பித்தவுடன் கோபப்பட, அவன் மனதில் சுருக்கென்றது.

அதிக உரிமை எடுத்துக்கொண்டது தவறுதான் என தன்னையே திட்டிக்கொண்டு அவன் திரும்பி செல்ல நினைக்க, ப்ரியா அவனை போகவிடாமல் நிறுத்தினாள்.

“நீங்க சொல்லலைனாலும் நான் அண்ணியை நல்லா பார்த்துப்பேன்” அவள் சொன்னதும், அவன் முகத்தில் சின்ன புன்னகை, ‘எனக்குத் தெரியும்’ என்பதைப்போல.

பின், “அக்காவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றால் உன்னை தொடர்புகொள்ளலாமா?” என்று அவன் கேட்டபோது, “தேவையில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடாது” என்று பெரிய லெக்ச்சரே எடுத்தபின் அவள் எண்ணை கொடுத்தாள் ப்ரியா.

அவள் பேச பேச, அந்த பேச்சு ஒரு புறம் பிடித்தாலும், சுற்றம், தன்னிலை என்ற பல எண்ணங்கள் அவனைத் தாக்க, எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

அடுத்து அவர்கள் அனைவரும் அகிலன் வீட்டிற்குச் செல்ல, அகிலன் வீட்டை பார்த்ததும் மனதில் மறுபடியும் சுணக்கம்.

‘ஏணி வைத்தாலும் எட்டமுடியாத இடத்தில் அவர்கள் குடும்பம் இருக்கிறது. ப்ரியாவிற்கு கண்டிப்பாக பெரிய இடத்தில்தான் பார்ப்பார்கள். இப்படி இருக்க, தனக்கு என்ன தகுதி இருக்கிறது? இது வேண்டாம். சரிவராது’ என தனக்குதானே புத்திமதி சொல்லிக்கொண்டு அவன் கிளம்பிவிட்டான். அடுத்தநாள் இன்டெர்வியூ என்பதால்.

அடுத்தநாள் நேர்காணலுக்காக தயாரானான் செழியன். அவளை மறந்துவிட்டான் என்பதை விட, பிரயத்தனப்பட்டு அவளை மறக்க முயற்சி செய்துகொண்டே கவனத்தை படிப்பில் திருப்பினான்.

இது முக்கியமான இன்டெர்வியூ அவனுக்கு. தன் துறை சார்ந்த இன்டெர்வியூ. வெகுசிலருக்கே பங்குகொள்ள வாய்ப்பு வந்தது.

பெரிய நிறுவனமான அதானி குரூப்ஸ் எப்போதாவது நடத்தும் இதுபோல இன்டெர்வியூக்களில் வெகு சிலரே கலந்துகொள்ளமுடியும். ஓரிருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆனால் தேர்வாகிவிட்டால் நல்ல சம்பளம் கொடுத்து எடுத்துக்கொள்வார்கள். அவன் ப்ராஜக்ட் குறித்து நிறைய கேள்வி கேட்பார்கள்.

அவனுக்கு இருந்த பெரிய தடை, ப்ராஜக்ட் மதிப்பெண். அதில் வெறும் பாஸ் மார்க் மட்டுமே வந்திருந்தது. ஏன் என்று கேட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அதைப் பற்றி நினைத்தவுடன் இந்துமதியின் நினைவுகள் சூழ்ந்தது.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டே அவன் இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்குச் செல்ல, அப்போதுதான் போனை பார்த்தான். ஒரு மெசேஜ் வந்திருந்தது.

அதைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தது. ப்ரியா அவனுக்கு அனுப்பியது, அவன் நன்றாக இன்டெர்வியூ அட்டென்ட் செய்வதற்கு.

நேற்றிலிருந்து கட்டிப்போட்டிருந்த மனம் மறுபடியும் குதிக்க ஆரம்பித்து, சந்தோஷமானது. அந்த ஒரு வாழ்த்து அவனுக்கு பெரியதாகத் தெரிந்தது. ஏனெனில் தந்தையை தவிர யாருமே அவனிடம் இதுகுறித்தோ, வாழ்த்தோ சொல்லவில்லை.

மனநிறைவுடன் ‘நன்றி’ என பதிலனுப்பினான்.

இன்டெர்வியூ ஆரம்பிக்க, போனை டெபாசிட் செய்துவிட்டு உள்ளே செல்ல சொன்னார்கள். அவன் மொபைலை அணைக்க நினைத்தபோது, மறுபடியும் ஒரு மெசேஜ்.

அவள் கையில் திருநீறுடன், ‘விர்ச்சுவல் ப்ளெஸ்ஸிங்ஸ்’ என்ற வாக்கியத்துடன் வந்தது. அதைப்பார்த்ததும் நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது செழியனுக்கு.

செயலற்ற நிலைக்கு அவன் செல்ல, அங்கிருந்தவர் மொபைலை கேட்டார். உடனே புன்னகைப்பதுபோல ஒரு ஸ்மைலி அனுப்பிவிட்டு, உள்ளே சென்றுவிட்டான்.

‘எப்படியாவது இந்த இன்டெர்வியூ நல்லபடியாக முடிந்தால், நல்ல வேலை நிச்சயம். பின், தன்னிலையை உயர்த்திக்கொள்ளவேண்டும்’ என முடிவெடுத்து எப்படி பேசவேண்டும் என்று யோசித்து தன்னை தயார்செய்துகொண்டான்.

மொத்தம் ஐந்து சுற்றுகள். ஒவ்வொன்றும் முடித்து அடுத்தநிலைக்குச் செல்ல, மிகவும் கடினமாக இருந்தது. எப்படியாவது தேர்வாகிவிட வேண்டும் என தனக்குதானே சொல்லிக்கொண்டான்.

இறுதியாக ஹெச்ஆர் ரவுண்ட். அவன் அழைக்கப்பட்டவுடன் உள்ளே சென்றான்.

அவனுடைய rough மதிப்பெண் பட்டியலை பார்த்துவிட்டு, அவன் நினைத்ததுபோலவே ஆங்கிலத்தில் கேட்ட முதல் கேள்வி “எதனால் ப்ராஜக்ட்டில் மட்டும் மதிப்பெண் குறைவு?” என்பதே.

கொஞ்சம் தெளிவுடன் அவன், “ப்ராஜக்ட் டே, என் வாழ்க்கைல, திடீர்னு ஒரு இழப்பு. எதிர்பாராத இழப்பு. அதை ஜீரணிக்க முடியல. ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்டா இருந்தேன்” என்ற பதில் அவன் தர,

உடனே, “இதுபோல நிறைய சிட்சுவேஷன்ஸ் வேலை பார்க்கும்போது வரும். அதையெல்லாம் எப்படி உங்களால் சமாளிக்க முடியும்? அப்போது வேலையில்தான் அதை காட்டுவீர்களா?” என்று இன்னொருவர் கேட்க, செழியன் முகத்தில் புன்னகை.

மறுப்பாக தலையசைத்தான். “இப்போ இந்த வேலை என்னோட வாழ்க்கைல ரொம்ப முக்கியம். நான் சீக்கிரம் செட்டில் ஆகணும். இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிட்டு, என்னோட கெரியர்ல நான் வளரணும். என்னோட தரத்தை உயர்த்திட்டுதான், ஐ வாண்ட் டு ப்ரொபோஸ் மை கேர்ள். சோ, இதுக்கு எந்த தடை வந்தாலும், என்னுடைய குறிக்கோள் என்னை கண்டிப்பாக சரியான பாதைல எடுத்துச்செல்லும்” என்றான்.

அவர்கள் எதுவும் பேசவில்லை அதற்குப்பின், அவனைக் காத்திருக்கும்படி சொன்னார்கள்.

வெளியே வந்த அவனுக்கு அதிர்ச்சி. எப்படி இப்படி பேசினோம் என்று.

அதிகமாக பேசிவிட்டோமோ? வேலை தரமாட்டார்களோ? ஏன் அப்படி பேசினேன்? மனதில் இருந்தது எப்படி இப்படி வார்த்தைகளாக வந்தது? என்று அவன் யோசிக்க, சில நிமிடங்களில் தேர்வானவர்கள் என்று சொன்ன மூன்று பெயர்களில் அவன் பெயரும் இருந்தது.

அவனால் நம்பவே முடியவில்லை. இப்படி பதில் சொல்லிக் கூட தேர்வாகிவிட்டோமே என்று.

உடனே, ப்ரியா கையில் திருநீறுடன் இருந்த போட்டோ நினைவிற்கு வர, மனதில் ஆயிரம் ஆசையுடன், பல கனவுகளுடன்… தேர்வாகிவிட்டதாக அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

அதேநேரம் சரியாக அவளும் அதையே கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தாள். மனதில் மட்டற்ற மகிழ்ச்சி.

நாட்கள் இப்படியே செல்ல, அவளிடம் இருந்து அடிக்கடி மெசேஜ் வந்தது. கைகள் பரபரத்தது செழியனுக்கும், பதில் அனுப்ப.

ஆனால் மனதிலோ, ‘முதலில் இந்த வேலையில் நிலைத்து… பின், தேவையென்றால் மேலும் படித்து… நல்ல நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு, அவளிடம் தன் ஆசையை சொல்ல வேண்டும், நன்றாக பேசவேண்டும்’ என முடிவெடுத்தான்.

கவிதாவை பற்றி மட்டும் அவ்வப்போது அவளிடம் கேட்டுக்கொள்வான்.

ப்ரியா முழுவதுமாக அவனை ஆக்ரமித்துக்கொள்ள, அவள் நினைவுகளுடனே, வேலைக்கு மகாராஷ்டிரா செல்ல தயாரானான்.

அப்படி ஒருநாள் திடீரென அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. ‘ஐ வோண்ட் மெசேஜ் யு எனிமோர்’ என்று.

‘என்ன ஆயிற்று?’ என்று நெஞ்சம் படபடத்தது. ‘ஏதாவது பிரச்சனையா அவளுக்கு… அவள் வீட்டில்?’ என நினைத்து கொஞ்சம் பதட்டத்துடன், அவளைப் பற்றி நேராக கேட்காமல்…

‘என்ன ஆச்சு. அக்காக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே’ என்று வேறுவிதமாக கேட்பதாய் நினைத்து, முட்டாள் தனமாக அனுப்பி வைக்க, நல்ல திட்டு அவளிடமிருந்து கிடைத்தது. ‘அவன் ரிசல்ட் பற்றி சொல்லவில்லை’ என்று கோபப்பட்டாள்.

அவன், ‘மறக்க வேண்டும்’ என நினைக்கும் ஒரு விஷயம் ப்ராஜக்ட் மதிப்பெண். அதுவும் போக, ‘அன்று மட்டும் நன்றாக செய்திருந்தால், யூனிவர்சிட்டி முதல் மூன்று ரேங்க்கிற்குள் வந்திருக்க வாய்ப்பு இருந்தது’ என்று அவன் ஆசிரியர்கள் சொன்னது வேறு மனவருத்தம் தந்ததால், அதை மறக்க நினைத்தான்.

அதனால் ரிசல்ட் பற்றியும், யூனிவர்சிட்டி ஏழாம் இடம் பற்றியும், யாரிடமும் சொல்லவில்லை. தந்தைக்கு மட்டும் தெரியும் அவ்வளவே.

ப்ரியாவை இப்போது எப்படி சமாளிப்பது என்று புரியாமல், அவளை சமாதானப் படுத்த மெசேஜ் அனுப்பினான். பதிலில்லை. பின், அவன் ஏன் சொல்லவில்லை என்பதையும் சொன்னான். பதில் வரவில்லை.

பின் கடைசியாக அவளை அழைத்து பார்த்தான். மொபைல் சுவிச்ட் ஆஃப் என்று வந்தது.

இதுபோல ஒருவர் தன்னிடம் உரிமை எடுத்துக்கொள்வதல்லாம் புதிது அவனுக்கு. இரவு தூக்கம் வராமல், ப்ரியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்ற யோசனையிலேயே இருக்க, நடு இரவு மெசேஜ் வந்தது.

கண்டிப்பாக அவள்தான் என்று தெரியும். வேறு யார் அனுப்புவார்கள் அவனுக்கு?

‘இன்னும் கோபம் இருக்குமோ?’ என அவசரமாக பார்க்க, அவள் அவனுக்கு ஆறுதல் கூறி மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

அவளை சமாதானப்படுத்த அவன் நினைத்திருக்க, அவளின் இந்த ஆறுதல் அவனை நெகிழச்செய்தது. இவளுக்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றியது.

***

இதுபோல ஒரு பெண் வாழ்வில் வருவதற்கு, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது செழியனுக்கு.

அடுத்த ஓரிரு நாட்களில் அவன் ட்ரைனிங்கில் பங்கேற்க சென்றுவிட்டான்.

அவன் ட்ரைனிங் முடிந்து வருவதற்கு இரண்டு நாட்கள் முன், ஸ்வாமிநாதனுக்கு உடல் நிலை மறுபடியும் சரியில்லாமல் போக, அகிலன் கவிதா வந்திருந்தார்கள்.

அவர்கள் வந்தபோது, அகிலன் ஏதோ ரிப்போர்டை மறந்து விட்டுவிட, செழியன் ஊர் திரும்பியதும், அதை சென்னைக்குச் சென்று அகிலனிடம் தரும்படி சொன்னார்.

ப்ரியா செங்கல்பட்டில்தான் இருப்பாள் என்று தெரியும், ஒருவேளை சென்னையில் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்துக்கொண்டே கவிதா வீட்டிற்குச் சென்றான். அகிலனும் கவிதாவும் வீட்டில் இருந்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கவிதாவைப் பார்க்கிறான். அவள் முகத்தில் பழைய சந்தோஷம் கொஞ்சம் திரும்பியதுபோல இருந்தது. அது நிம்மதியாகவும் இருந்தது.

அகிலன் ஏதேதோ பேசினான் செழியனிடம். ஆனால் அகிலனுடன் சாதாரணமாக பேசுவதற்கு மட்டும் ஏதோ ஒரு தடை இருந்துகொண்டே இருந்தது. அதிகமாக பேசவில்லை.

பின் அகிலன் வெளியே சென்றுவிட, அக்காவிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது. அவள் பேசும்போதே நன்றாக தெரிந்தது அவள் முன்பு போல இல்லை என்று.

இருவரும் மேலே இருந்த முகப்பில் பேசிக்கொண்டிருக்க, திடீரென மனதில் சில்லென்ற இசைச்சாரல் போல, அவள் குரல். ப்ரியாவின் குரல்.

ஏதோ பேசிக்கொண்டே மேலே வந்தாள்.

‘அவளுக்குத் தெரியுமா நான் வந்தது? இல்லை தற்செயலான சந்திப்பா? எனக்குத் தோன்றுவது போலவெல்லாம் அவளுக்கும் தோன்றுமா?’ என அவள் முகத்தைப் பார்ப்பதற்கு ஆவலாய் இருந்தான்.

அவள் மேலே வர, அவனைப்பார்த்ததும் ஒரு நொடி அப்படியே நின்றாள். அந்த கண்கள், அதில் தெரிந்த திகைப்பு, அதை மனதில் பதித்துக்கொண்டான்.

அவன் முகத்தில் புன்னகை தானாக ஒட்டிக்கொண்டது. ப்ரியா அடுத்தநொடி சகஜமாக இருக்க முற்பட்டாள். அது அவனுக்கும் புரிந்தது.

‘அக்காவிற்காக ஏதோ ப்ரியா அம்மா செய்துகொடுத்தனுப்பியது, அதை ப்ரியா எடுத்துவந்தது’ என்பது தெரியவர, ‘இந்த வீட்டில் அக்கா கண்டிப்பாக சந்தோஷமாக இருப்பாள்’ என்ற நம்பிக்கை கொஞ்சம் துளிர்த்தது அவனுக்குள்.

கவிதா டீ போட கீழே சென்றவுடன், என்றைக்கும் இல்லாத பல புது வித உணர்வுகள் அவனுள்.

‘ப்ரியாவை கல்யாணத்தின் போது நேராக பார்த்தது. இப்போது மறுபடியும் தனியாக பார்க்க ஒரு தருணம் கிடைத்துள்ளது. எப்படியும் அவள் பேசுவாள். அதை கேட்கலாம்’ என்பதே அதற்கு காரணம்.

அவள் அறையில் இருந்து வெளிவருவதற்காக காத்திருந்தான். அவளும் வந்தாள். இவனும் அவளைப் பார்த்தவுடன் பிரகாசமாக புன்னகைத்தான்.

அவள் கண்கள் படபடத்தது. ஆனால் எதுவும் பேசவில்லை. அவள் கண்கள் காட்டும் பரிமாணத்தைப் பார்த்தபடி, “எப்படி இருக்க…” முதலில் அவனே பேச்சை ஆரம்பித்தான் அவளை பேசவைக்க. ஆனால் அவளிடம் பதிலில்லை.

“ஏன் பேசமாட்டேங்கற? எப்படி இருக்க?” கேட்டான் மறுபடியும். அவள் எதுவுமே பேசாமல் அவனைப் பார்த்திருக்க,

“என்ன சவுண்டே காணோம்? பேசறது கேட்குதா உனக்கு? மெசேஜ்ல மட்டும்தான் பேசுவயா?” அவள் பேசி கேட்கவேண்டும் என்ற ஆர்வம் அவனுள். ஆனால் ப்ரியா எதுவுமே பேசவில்லை.

அது அவனுக்கு கொஞ்சம் வருத்தம் தர, அவன் அடுத்துப் பேசுமுன் கவிதா ப்ரியாவை அழைத்தாள். ப்ரியாவும் தப்பித்தோம் என்பதுபோல ஓடிவிட்டாள்.

செழியனுக்கு ஏமாற்றம், அவளிடம் பேசமுடியவில்லையே என்று. அந்த ஏமாற்றம் கோபத்தை கூட்டியது.

அமைதியாக உட்கார்ந்திருந்தான். ‘ஏன் தன்னுடன் பேசவில்லை? ஒருவேளை தனக்குதான் இதுபோலவெல்லாம் தோன்றுகிறதோ? அவளுக்கு இல்லையோ?’ என்ற யோசனை வந்தது.

கொஞ்ச நேரத்தில் கவிதா செழியனை சாப்பிட அழைத்தாள்.

அவன் கீழே சென்றபோது, ப்ரியா சகஜமாக கவிதாவுடன் பேசிக்கொண்டிருக்க, அவன் மனம் கொஞ்சம் வலித்தது, ‘தன்னுடன் இப்படி பேசவில்லையே’ என்று. கோபம் வேறு ஒருபக்கம்.

பின் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது , ப்ரியா அவனை கிண்டல் செய்தவுடன், ‘இப்போது மட்டும் பேசுவாளா? ஏன் தனியாக இருக்கும்போது பேசவில்லை’ என்ற கோபத்தில் சட்டென எழுந்தான்.

கவிதா என்ன ஆயிற்று என யோசிக்க, அவன் கோபத்தைப் பார்த்து, ப்ரியா கண்கள் அதிர்ச்சியை காட்டியது.

அப்போதுதான் தன்னிலைக்கு வந்தான். அவன் கவிதா வீட்டில் இருந்து புறப்பட, மனதில் ஏதோ ஒரு நெருடல். ‘இதுபோலவெல்லாம் கோபப்பட்டதே இல்லை. இதென்ன புதிதாக’ என்று யோசிக்க,

‘அவள் தன்னிடம் காட்டிய அக்கறையை தவறாக புரிந்துகொண்டோமோ? முதலில் அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல், இனி அவளை தொந்தரவு செய்யக்கூடாது’ என முடிவெடுத்தபடி கிளம்பினான்.

அந்த முடிவு தன்னை வருத்தும் என்பது தெரியும். இருந்தும் வேறு வழி தெரியவில்லை. அதே மனவருத்தத்துடன் இருக்க, ப்ரியாவும் அதற்கு பின் எந்த ஒரு மெஸேஜும் அனுப்பவில்லை.

முடிவே செய்துவிட்டான் அவள் தன்னிடம் காட்டிய அக்கறை, பாவம் பார்த்துதான். அவளுக்கு வேறு எந்த ஒரு எண்ணமும் இல்லை என.

‘ஏமாற்றம் புதிதல்ல. முதலில் கொஞ்ச நாள் வருத்தம் இருக்கும். பின் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என நினைத்தான். இதே மனநிலையில் மகாராஷ்டிரா புறப்பட்டான்.

ஆனால் ப்ரியாவை மறக்க முடியவில்லை. காலையில் அவளுடைய குட் மார்னிங் மெஸேஜில் ஆரம்பித்து இரவு அவள் குட் நைட் அனுப்பிய பின் உறங்குவது என்பதுதான் வழக்கம். ஆனால் அது எதுவும் இல்லாமல் நாட்கள் நகர்ந்தது.

மகாராஷ்டிரா சென்றவுடன் அவளுக்கு புது எண்ணில் இருந்து, ‘ஹலோ’ என்ற முதல் மெசேஜ் அனுப்பினான். ‘ரிசல்ட் சொல்லவில்லை என்று கோபப்பட்டவள், நம்பர் தரவில்லை என்றால் இன்னமும் கோபப்படுவாள்’ என நினைத்து அனுப்பினான்.

ஆனால் அவளிடம் பதில் ஏதும் வரவில்லை. பின், ‘இது என் புது மகாராஷ்டிரா நம்பர்’ என்று அடுத்த மெசேஜ் அனுப்ப, அது அவளுக்குச் செல்லவில்லை.

யோசனையுடன் அழைத்தான், அழைப்பு செல்லவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, ‘ப்ளாக் செய்துவிட்டாளா?’ என்று யோசிக்க, இருக்காது என்றது அவன் மனம்.

இருந்தும் அவனுடைய ஆபீஸ் எண்ணில் இருந்து அவளை அழைத்தான். ரிங் சென்றது. உடனே வைத்து விட்டான்.

ஏமாற்றத்தினால் வந்த புன்னகை அவன் முகத்தில். மனம் சுக்குநூறாக உடைந்தது. அவள் தன்னை ப்ளாக் செய்துவிட்டாள் என்று புரிந்தது.

வேலையில் கொஞ்சம் கவனம் சிதற, அவன் இன்டெர்வியூ நடந்த போது பேசியது அவனுக்கே நினைவிற்கு வந்தது. கொஞ்ச நாள் இதனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு, வேலையில் கவனம் செலுத்த முடிவெடுத்தான்.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. அவள் அவனுக்கு மெசேஜ் அனுப்பியபோது, ஒரு வார்த்தையில் பதில் அனுப்பியவன், இப்போது பக்கம் பக்கமாக அவளுக்கு மெசேஜ் டைப் செய்வான், ஆனால் அனைத்தும் ட்ராஃப்ட்ஸில் மட்டுமே இருந்தது. அனுப்பவில்லை.

யாருடனும் சரியாக பேசத்தோன்றவில்லை. வேலை, வீடு என்று அவன் நாட்கள் போக, ஒருநாள் கவிதா கர்பமாகிவிட்டாள் என்ற செய்தி வந்தது.

கவிதாவை பார்க்க ஆசையாக இருந்தது செழியனுக்கு. ஒருவேளை ப்ரியா சென்னையில் இருந்தால் அவளையும் பார்க்க முடியும் என நினைத்து உடனே புறப்பட்டான்.

அவன் ஆசைப்பட்டதுபோலவே கவிதா வீட்டிற்கு வந்தவுடன், ப்ரியாவை பார்த்தான்.

பல ஆயிரம் இசைக்கருவிகள் இனிதாய் இசைப்பதுபோல ஒரு உணர்வு. அவள் பேசி கேட்கவேண்டும் என்ற ஆசை மறுபடியும். ஆனால் அவனைப் பார்த்ததும், அவள் கண்கள் கோபத்தைக் காட்டியது.

‘நான் என்ன தவறு செய்தேன் கோபப்பட’ என யோசிக்க, லட்சுமி அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

பின் அவர் கவிதா மேலே இருப்பதாக சொன்னவுடன், மேலே சென்றான் கவிதாவை பார்க்க. ஆனால் அங்கு கோபமே உருவாக பால்கனியில் நின்று தனியாக யாரையோ திட்டிக்கொண்டிருந்தாள் ப்ரியா.

அவள் தனியாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.

அவளிடம் சென்று, “இப்போ என்ன கோபம்? நான்தான் கோபப்படணும் நீ என் நம்பர ப்ளாக் பண்ணினதுக்கு” அவன் சொன்னதும், அவனைப்பார்த்த ப்ரியா, அவனை வசைப்பாட ஆரம்பித்தாள்.

அவனை, ‘சுயநலவாதி, நம்பர் தரவில்லை, பொய் சொல்கிறாயா?’ என்று திட்ட, அவள் குரல் பல மாதங்கள் கழித்து கேட்கிறான். அவளையே அவன் பார்த்தவண்ணம், அவனுடைய மொபைல் எடுத்து அவளை அழைத்தான், அழைப்பு செல்லவில்லை.

அவளிடம், “இதற்கு நீ என்ன பொய் சொல்லலாம் என்று யோசி” என்று சொல்லிவிட்டு கவிதாவைப் பார்க்கச் சென்றுவிட்டான்.

ஆனால் மனதில் இத்தனை நாட்கள் இருந்த வருத்தம் கொஞ்சம் மறைந்தது. அவளுடைய மறுபடியும் அந்த உரிமையான பேச்சை நினைத்து.

கவிதா முன்புபோல இல்லாமல் மிகவும் சந்தோஷமாகத் தெரிந்தாள். மூச்சுக்கு நூறுமுறை அகிலன் பெயரைச் சொன்னாள். அவளை அனைவரும் நன்றாக பார்த்துக்கொள்வதாக சொன்னாள். அது இன்னமும் மனநிறைவை தந்தது.

அப்போது அவனுக்கு ஒரு மெசேஜ் வர, அது ப்ரியாவிடம் இருந்து, அவனுடன் பேசவேண்டும் என.

கவிதாவுடன் வெளியே வந்தவன், ‘ஒரு போன் செய்யவேண்டும்’ என்று கவிதாவை கீழே அனுப்பிட்டு திரும்ப, ப்ரியா அவன் முன் வந்து நின்றாள்.

அவன் என்னவென்று கேட்டவுடன், அவள் மன்னிப்புக்கேட்க, அவள் கண்களும் மன்னிப்பை வேண்டியது. ‘இந்தக்கண்களில் எத்தனை மாற்றங்களைத்தான் காட்டுவாள்’ என நினைத்து அவளையே பார்த்தான்.

அவள் ப்ளாக் செய்ததற்கான காரணத்தைச் சொன்னாள். இப்போது கோபமில்லாமல் பேசும் அவள் பேச்சை ரசித்தான். ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலிப்பதுபோல அதை உள்வாங்கிக்கொண்டான்.

அவள் ஒருவழியாக காரணங்களை சொல்லிமுடிக்க, இப்போது அவன் அக்காவை நன்றாக பார்த்துக்கொள்வதற்கு நன்றி சொன்னான்.

அவனை அவள் கிண்டல் செய்ய, இப்போது பழைய ப்ரியாவாக மாறியிருந்தாள். அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

‘நன்றாக பேசுகிறாள், நம்பர் தரவில்லை என்று கோபப்படுகிறாள். அவள் மனதிலும் ஏதாவது இருக்குமோ?’ என அவன் மனம் யோசிக்க,

திடீரென அவள் அவனிடம், “தேங்க்ஸ் சொன்னதுபோதும் எனக்கு ஏதாச்சும் பெருசா கிஃப்ட் வேணும்” என்றவுடன், ‘என்னை உனக்கு பிடிக்குமா இசை?’ என்று கேட்கவேண்டும் என்பதுபோல இருந்தது அவனுக்கு.

‘ஆனால் அப்படியொரு எண்ணம் அவளுக்கு இல்லாமல்போய், அதை அவள் வாயாலேயே சொன்னால், தன் மனம் அந்த ஏமாற்றத்தைத் தாங்குமா?’ என நினைக்கும்போது நெஞ்சம் வலித்தது. அவளிடம் தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

அதற்குபின் அவளும் நன்றாக பழையபடி மெஸேஜில் பேசினாள் அவனிடம். கொஞ்சம் நிம்மதி வந்தது அவனிடம். வேலையில் இன்னமும் அதிகம் கவனம் செலுத்த முடிந்தது. நல்ல பெயர் வாங்கினான்.

அவளுடன் பேசிய தருணங்களை நினைத்து நாட்களை நகர்த்தினான். நாட்களும் செல்லச் செல்ல, கவிதாவிற்கு வளைகாப்பு தேதி குறித்தனர்.

‘அக்காவிற்குத் தன் பணத்தில் வளையல் வாங்கவேண்டும்’ என்று எண்ணி நகைக்கடை சென்றபோது, ப்ரியாவிற்கு என்ன வாங்குவது என்று அவன் யோசிக்க, அவன் கண்ணில் அடுத்தநொடி கைக்கடிகாரம் தென்பட்டது.

அதைப்பார்த்தவுடன் கண்கள் தானாக கலங்க, அம்மாவிற்கு வாங்கித் தருவேன் என்று சொன்னது, அம்மாவிற்குப்பின் ப்ரியாவிற்கு வாங்கித்தரவேண்டும் என்று தோன்றியது!

***

4
5
1

Leave a Reply

error: Content is protected !! ©All Rights Reserved